Wednesday, March 21, 2007

அன்பழகன்

அரசு, படைகளை எம் நிலைகள் நோக்கி ஏவி விட, எம்மிடம் அடி வேண்டிய படைகள் முன்னேறவும் முடியாமற் பின் வாங்கவும் முடியாமல் திண்டாடின. அரசியல் தேவைக்காக எப்படியாவது ஒரு வெற்றியைப் பெற்றுவிட மீண்டும் மீண்டும் முயன்றனர்.

20, சித்திரை, 1998 ஆம் நாட் காலைப்பொழுது எதிரி மிகவும் பலமாயிருந்தான். தன்னிடமிருந்த வளங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்திருந்தான். நாம் பழைய நிலையிலே இருந்தோம்.

எதிரி எப்படியும் மாங்குளத்தை அன்று பிடித்து விட வேண்டும் என்ற முடிவோடு இருந்தான். அதற்காக ஒலுமடுப் பகுதியூடாகவும் கனகராயன் ஆற்றுப்பகுதியாலும் மூன்று முறிப்பாலும் சண்டையைத் தொடக்கியிருந்தான். எம் போராளிகள் சிலரின் சாவே அவனது இலக்கை எட்டும் நிலையை ஏற்படுத்தப் போதுமானதாக இருந்தது.

எமது போராளிகள் சிலரே காவலில் நின்ற அக் காவலரண் தொடரின் ஒரு பகுதியை நோக்கி, ஒன்றல்ல இரண்டல்ல பல ராங்கிகள் அணிவகுத்து முன்னேறின. முன்னேறுவது பின்னர் தரித்து நின்று எம் நிலைகள் மீது அடிப்பது. பின் முன்னேறுவது என எதிரி ராங்கிகள் முன்னேறிக்கொணடிருந்தன.

எம்மிடம் இருந்ததோ சாதாரண துப்பாக்கிகள். நாம் சுடச்சுட எதிரி முன்னேறினான். எம்மவர் இயன்றவரை சுட்டனர். சுட்ட ரவைகள் எல்லாம் எதிரியின் உருக்கு இயந்திரங்களிற் பட்டுச்சிதறி விழுந்ததைத் தவிரப் பயன் ஏதும் ஏற்படவில்லை.

நவீன கவச எதிர்ப்பு ஆயுதங்கள் அன்று அவ்விடத்தில் எம்மிடம் இருக்கவில்லை. எம்மால் ராங்கிகள் மீதான எதிர்ப்பை காட்டமுடியாத அவலநிலை. எம்மிற் பலரின் உயிர்களைக் குடித்து விட்டு ராங்கிகள் சில எமது காவலரண்கள் மீதும ஏறிவிட்டன.

எல்லாம் முடிந்த நிலை. எஞ்சிய போராளிகள் சிலர் மட்டுமே காவலரணில் நின்றனர். இப்போது அந்தச் சண்டையைத் தீர்மானிக்கும் பொறுப்பு அங்கே எஞ்சி நின்ற சிலர் மேலேயே. அவர்களின் முடிவே அன்றைய சண்டையின் முடிவு. நாளைய சமரின் முடிவு. காவலரணில் ஏறிவிட்ட ராங்கியை ஏதாவது செய்தாக வேண்டும். எண்ணிக்கையில் நாம் குறைந்திருந்தோம். எதிரி வருவது உருக்கு இயந்திரங்களில்.

எமது காப்பரண் வேலியை உடைத்து அதனூடாக எதில் நகர்வது., ஜயசிக்குறுய் போரில் எதிரியைத் தடுப்பதற்கான எமது ஒரு வருட உழைப்பை வீணாக்கி விடும். எதிரியின் ஜயசிக்குறு கனவு பலித்துவிடும். ஜயசிக்குறு நடவடிக்கையை முறியடிப்பதற்காக எமது போராளிகளின் உயிரைக் கொடுத்து நாம் செய்த ஈகமும் துன்பங்களும் அர்த்தமற்றவை ஆகிவிடும். இத்தனையையும் சாதித்துவிட முயன்றது எதிரியின் ராங்கிப் படையின் நகர்வு. அன்று எம்மிடம் ராங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் இல்லாமையே எதிரிக்கு வாய்ப்பை கொடுத்தது.

எப்படி விட முடியும். எமது காப்பரண்கள் இரத்தமும் சதையுமாகி விட்டன. அவற்றை எப்படி எதிரியிடம் விட முடியும். விடுவோமாயின் முடிவு வார்த்ததைகளால் வர்ணிக்க முடியாததாகி விடுமென்பதை எஞ்சி நின்றவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். வரப்போகும் சிக்கலைத் தன் போர்ப் பட்டறிவின் மூலம் நன்கு உணர்ந்தான் அன்பழகன். எல்லாவற்றுக்கும் மேலாக அப்போது தனக்கிருந்த கடமையை அறிந்தான்.

தன்னில் தங்கி ஒரு சண்டையை, சண்டையின் முடிவை சண்டையின் முடிவால் தான் நேசித்த மக்களுக்கு ஏற்படப்போகும் தாக்கத்தை நன்கு விளங்கிக் கொண்டான். இறுதித் தீர்மானமொன்றை எடுத்தான். தன் உயிராற் கூடியபட்சம் செய்யக் கூடியதைச் செய்ய முடிவெடுத்தான். தன் தேசத்திற்காகத் தன்னால் உயர்ந்தபட்சம் எதைச் சாதிக்க முடியுமோ அதைச் சாதித்தான்.

காப்பரணுக்கு மேலே ஏறிய ராங்கி ஒன்றினுட் குண்டுடன் பாய்ந்தான் அன்பழகன். எதிரியின் ராங்கி குண்டினால் வெடித்த போது அவன் அங்கு நின்ற போராளிகளின் நெஞ்சில் நிறைந்தான். அவன் தன் தேசத்திற்காகச் செய்ய வேண்டியதை உணர்ந்தே இருந்தான். உறுதியான புலிவீரன் என்பதை எண்பித்தான் என்று அவனது தளபதிகள் புகழாரம் சூட்டினர்.

அன்பழகன் எடுத்த புலிகளுக்கேயுரிய தனித்துவமான அந்த வீர முடிவு அன்றைய சண்டையின் முடிவை மாற்றியது. ராங்கிகள் நுழைந்த சொற்ப நேரத்தில் அந்தப் பகுதி எதிரிகளாற் கைப்பற்றப்பட இருந்த அபாயத்தை நீக்கியது அவனின் வீரச்செயல். தலைவனின் சத்தியத்திற்காகத் துணிந்துவிட்டால் ஒரு சாதாரண மனிதப்பிரவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும் என்ற கூற்றை எண்பித்தான் அந்தப் போராளி.

எம்மால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்ட எதிரியின் ஜயசிக்குறு சமரும் அதனால் இன்று வெற்றிகரமாகத் தொடரும். புலிகளின் „ ஓயாத அலைகள் “ சமர்களும் எம் போராட்டத்தின் புதிய அத்தியாயங்களெனின் அதில் அவன் ஒரு முக்கிய பக்கம்.