Wednesday, March 21, 2007

இயல்வாணன்

மொத்தம் முப்பத்து நான்கு நாட்கள் தொடர்ந்த கடுஞ்சமரின் தோல்வியின் பின் இத்தாவிலில் மட்டுமின்றி ஆனையிறவிலுங்கூடவே சிங்களத்தின் போர் வலிமை புலிகளிடம் தோற்றுப் போனது. வரலாற்றுப் புகழ்மிக்க அந்த இத்தாவிற் சமர்க்களத்தின் மூன்றாவது நாள் 29.03.2003, காலைப்பொழுது. அங்கே நின்ற போராளிகளுக்கு சூடாகவே விடிந்தது.

கண்டி வீதியை மையமாகக் கொண்டு, மூன்று முனைகளில் எதிரி ஆனையிறவுப் பிரதேசத்திலிருந்து முன்னேறினான். கொடுமையான அந்தப் போர்க்களத்தில், துன்பங்கள் நிறைந்த அனுபவங்கள் பலவற்றை ஏற்கனவே எதிரி அவர்களுக்கு ஏற்படுத்தி இருந்தான். கடந்த இரண்டு நாட்களாக எதிரி இடையறாது அங்கே மேற்கொண்ட முன்னேற்றங்களை எல்லாம் அவர்கள் முறியடிக்க வேண்டியிருந்தது. இலகுவான பின்னணிப் பாதைகள் இல்லாத நிலையில், போதுமானளவு ரவைகளையும் ஏனைய வெடிபொருட்களையும் பெறுவது கடினமாக இருந்தது. புலிகளின் அணிகள் தம்மிடமிருந்த மட்டுப்படுத்தப் பட்ட வளங்களைக் கொண்டே கடந்த இரண்டு நாட் சமரிலும் பல முனைகளிலும் முன்னேறிய
இராணுவத்தை முறியடித்து வெற்றி பெற்றிருந்தன. அதிகாலையில் தொடங்கிய அன்றைய சமர் மிகவும் உக்கிரமானதாக இருந்தது. வழமைக்கு மாறாக எதிரி இன்று ஆனையிறவுப் பகுதியிலிருந்து ஐந்து டாங்கிகள் சகிதம் முன்னேறினான். தற்காலிகமாக அமைக்கப் பட்டிருந்த எமது நிலைகள் இராணுவத்தின் கோரமான எறிகணை வீச்சிற் சிதைந்துக் கொண்டிருந்தன.

எதிரி மிக வேகமாக முன்னேறினான். டாங்கிகளும் கனரக வாகனங்களும் அணிவகுத்து முன்னேவர பெருந்தொகையிற் படையினர் சூழ்ந்த யுத்தக் காடாக மாறியது அந்தக்களம்.

சில மணித்தியாலங்களிலேயே கண்டி வீதியின் இருபுறமும் முன்னேறிய எதிரியால் எமது நிலைகள் ஊடறுக்கப்பட்டு விட்டன. காவலரண் வரிசையின் இரு பகுதிகளுடாக உள்ளே நுழைந்த எதிரி, இப்போது மூன்றாவது முனையான பிரதான வீதியின் வழியே உள்நுழைவதற்கு முயன்று கொண்டிருந்தான்.

அவர்கள் விட வில்லை. செக்சன் லீடர் வீரன், இயல்வாணன், வளநெஞ்சன், சேரக்குன்றன் என இன்னும் மிகச்சிலர் மட்டுமே அங்கே தனித்திருந்தனர். பின்வாங்கத் தயாரில்லாத அவர்களை எதிரி சூழத் தொடங்கினர்.

பிரதான வீதியின் அருகில் அவர்கள் இருந்தனர். தன்னிடமிருந்த ஒரேயொரு மு.இயந்திரத் துப்பாக்கியால் தொடர்ந்து சுட்டுக் கொண்டிருந்தான் இயல்வாணன். இரு புறமும் பெரும் எண்ணிக்கையில் முன்னேறிய எதிரியின் ஆட்பலம், டாங்கிகள் சகிதம் மனிதக் கடலென அவர்களைச் சூழ்ந்து கொண்டது.

அவர்களுடனான தொலைத் தொடர்புகள் இறுதியாக அற்றுப் போனவுடன் கட்டளைப் பீடம் பரபரப்பானது.அது கைவிட முடியாத ஒரு நிலை. இத்தாவிற் சமர்க்களத்தோடு மாத்திரம் தொடர்புடையதன்று. ஆனையிறவை மீட்பதற்கான தலைவரது வியூகத்தின் தந்திரோபாய முடிச்சும் அது. அங்கே அமைக்கப் பட்டிருந்த வியூகத்தின் உயிர்நாடியும் அதுதான்.

இப்போது அங்கேயிருந்த வீரர்கள் கொல்லப்பட்டிருப்பர். மாற்றுத் திட்டங்கள் செயற் படுத்தப்பட்டன. மீண்டும் அந்தப் பிரதேசத்தைக் கைப்பற்ற மேற்கொள்ளப் பட்ட முயற்சி வெற்றியளிக்காமற் போனது. அடுத்து என்ன செய்வது என்ற தவிப்பு எல்லோரையும் பிடித்து உலுக்கிக்கொண்டிருந்தது. ஆனாலும், சுற்றிச் சூழ்ந்துவிட்ட எதிரிகளின் நடுவே, அவர்கள் இன்னமும் உயிருடன் இருந்தனர்.தொடர்ந்தும் இராணுவத்தை எதிர்த்துச் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

பிரதான வீதியால் வந்த இராணுவத்தினரை ஒவ்வொருவராய் வீழந்தனர். தொடர்ந்து வந்த கனரக வாகனம் இயல்வாணனின் மு. தாக்குதலினால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் அதன் பின்னால் வந்த இராணுவத்தினரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அப்போதுதான் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த அவர்கள் சற்றும் எதிர்ப்பார்க்காத அந்த அவலம் நிகழ்ந்தது. அவர்களிடமிருந்த ஒரேயொரு கனரகத் துப்பாக்கி – P.மு.ஆ.P.ஆ.பு.- இயங்கு நிலை தடைப் பட்டு சுடமறுத்தது.

எல்லாத் திசைகளிலிருந்தும் இராணுவத்தினர் அவர்களை நோக்கி முன்னேறத் துடித்துக் கொண்டிருந்தனர். இராணுவத்தினரின் முன்னேற்றத்திற்கான தடையாக அவர்கள் மட்டுமே இருந்தனர். இப்போது அவர்களிடமிருந்த துப்பாக்கியும் சுட மறுத்து விட்டது.

இராணுவம் நெருங்கி வந்துவிட இயல்வாணனுடைய தோழனொருவன் வீசிய கையெறி குண்டு வெடித்துச் சிதறியது.

எதிரி அந்தத் திகைப்பில் இருந்து மீள்வதற்குட் கிடைத்த சிறிய தொரு அவகாசத்தினுள் தன் துப்பாக்கியை சீர்படுத்த முயன்றான் இயல்வாணன். ஆனாலும் முடியவில்லை. மீண்டும் இராணுவம் அவர்களின் நிலையை நெருங்கியது.மிகவும் நெருக்கடியானதொரு நிலை. தடுப்பதற்கு வழியில்லை. இயல்வாணன் தனித்து இயங்கத் தொடங்கினான். ஒவ்வொன்றாய் ரவையேற்றினான் தனித்தனியே மீண்டும் ஆரம்பித்த சூடுகளில் இராணுவத்தினர் அவனது நிலையின் முன் விழத் தொடங்கினர்.எனினும், பெருந்தொகையில் வேகமாக முன்னேறும் இராணுவத்தை தொடர்ந்தும் அவர்களால் தடுக்க முடியவில்லை. எதிரிகள் அவர்களை நெருங்கியவாறே இருந்தனர்.

செக்சன் லீடர் வீரனுடைய தொலைத்தொடர்புச் சாதனம் ஒருவாறு தனது கட்டளைப் பீடத்துடன் தொடர்பை ஏற்படுத்தியது. கட்டளைப் பீடத்திற் புதியதொரு பரபரப்புத் தோன்றியது. இராணுவத்தினராற் சூழப்பட்டு விட்ட பிரதான வீதியிலிருந்து ஒலித்த வீரனுடைய குரல் கட்டளைப் பீடத்திற்கு உற்சாகமானதொரு நம்பிக்கையை ஏற்படுத்தியது.

„ றோமியோ, றோமியோ, இப்ப ஆமி எங்கள நெருங்கிட்டான் “

„ எங்களுக்கு ரவுன்ஸ் எல்லாம் முடிந்துவிட்டது. “

„ பிரச்சனையில்லை, எங்களை பார்க்காதையுங்கோ. நாங்கள் நிக்கிற இடத்திற்கு செல் அடியுங்கோ. “

யாருமே எதிர்பார்க்காத அவர்களின் உணர்வுகள் கட்டளைப் பீடத் தொலைத்தொடாபுக் கருவியில் ஒலித்துக் கொண்டிருந்தன. அவர்கள் இன்னமும் தோற்று விடவில்லை. இன்னமும் அவர்கள் தமது நிலைகள் எதிரியிடம் செல்ல விடவில்லை. எதிரியாற் கைப்பற்றப்பட்டு விட்டதாக கருதப்பட்ட பிரதேசத்திலிருந்து அவாகள் தொடர்ந்தும் போரிடுகின்றனர்.

கட்டளைப்பீடம் மீண்டுமொரு முறியடிப்புச் சமரிற்குத் தயாராகியது.

இராணுவம் அவர்களுடைய நிலைகளினுட் புகுந்தால் வெடிக்கத் தயாரான கையெறி குண்டுகளுடன் அவர்கள் போரிட்டனர். அவை வார்த்தைகளின் விபரிப்பிற்கு அப்பாற்பட்ட போர்க்களத்தின் கொடிய கணங்கள்.

கண்களின் முன்னே, மிக அருகில், அவர்களைக் கொல்லும் வெறியுடன் வரும் எதிரிகளை எதிர்த்துத் தொடர்ந்தும் சண்டையிட்டனர். உச்சமான அவாகளின் மனத்திடம், போரிடும் ஆற்றல், இறுதிவரை வென்றுவிடத் துடிக்கும் விடுதலை உணர்வு அவர்களைத் தொடர்ந்தும் இயக்கின.

வீரனது தொலைத்தொடர்புச் சாதனம் சொல்லிய இலக்குகளை எறிகணைகள் தாக்கின. இயல்வாணனை சுட்டுக்கொன்ற இராணுவத்தினரது சடலங்கள் அவர்களது நிலைகளைச் சுற்றிக் குவியத் தொடங்கின. கொஞ்சம் கொஞ்சமாக அவை எதிரியின் மூர்க்கத்தை உடைத்தன.

இத்தாவிற் களத்தை அன்று எதிரியிடமிருந்து மீட்டுத்தந்த வீரர்களை மீட்பதற்கான எமது முறியடிப்பு அணிகள் அவர்களை நெருங்கியபோது, வீரன், இயல்வாணனுடைய காவலரண்களைச் சுற்றி மட்டும் கொல்லப்பட்ட எண்பத்தைந்து இராணுவ சடலங்கள் கிடந்தன.