Friday, July 10, 2009

பிரிகேடியர் பால்ராஜ்

பிரிகேடியர் பால்ராஜ் (நவம்பர் 27, 1965- மே 20, 2008, இயற்பெயர்: பாலசிங்கம் கந்தையா, கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு முதுநிலைத் தளபதியாவார். தமிழீழத்தின் பல போர்க்களங்களை வழிநடத்தியவர். 1983 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். 1991 ஆம் ஆண்டு தொடக்கம் 1993 ஆம் ஆண்டு வரையும் பின்னர் 1995 ஆம் ஆண்டு தொடக்கம் 1997 ஆம் ஆண்டு வரையும் விடுதலைப் புலிகளின் முதலாவது மரபுவழிப் படையணியான சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முதலாவது கட்டளைத் தளபதியாக அப்படையணியை வழிநடத்தியவர். வரலாற்றுச் சிறப்புமிக்க 2000 ஆம் ஆண்டு ஆனையிறவுச் சமரில் முக்கிய பங்காற்றினார்.

அமைதிப் பேச்சுக்களின் போது 2003 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பால்ராஜூக்கு இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 2008 ஆண்டின் தொடக்கத்தில் 3 மாதங்கள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். மே 20, 2008 இல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் பால்ராஜ் மாரடைப்பால் சாவடைந்தார்.


மாவீரன் பால்ராஜ்! -ஜெகத் கஸ்பர்

வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே, “”என்னையும் விஞ்சிய போராளி” என வியந்து பாராட்டிய தளபதி ஒருவன் தமிழ் வரலாற்றில் இருந்தான்.
அவன் யாரெனத் தெரியுமா உங்களுக்கு? காலப் பெருவெள்ளத்தில் கரைந்திடாது மிளிரும் மார்க் அன்டணி, மாக்சிமுஸ், நெல்சன், வென்கியாப் போன்ற போர்ப்படைத் தளபதிகள்போல் சிங்களத் தளபதிகளைக் கூட வியக்க வைத்த போராளி அவன்!”.

உடலில் எத்தனை குண்டுகள், ஷெல் துண்டுகள் துளைத்து உள்ளிருந்தன என்று அவனுக்கே தெரியாது. 1993-ம் ஆண்டு இப்போதைய சிங்கள ராணுவ தலைமைத் தளபதி சரத் பொன்சேகா தலைமையில் ”யாழ்தேவி” எனப்பெயரிட்டு பெரும் எடுப்பில் யாழ்குடாவை கைப்பற்ற நகர்ந்த இராணுவத்தை புலோப்பளை பகுதியில் நேருக்கு நேர் எதிர்கொண்டு டாங்குகளையும், குண்டு துளைக்க முடியா கவச வாகனங்களையும் சிதறடித்து ஆறே நாட்களில் சிங்களப் பெரும்படைகளை வந்த வழிக்கே புறமுதுகிட்டு ஓடச் செய்தவன்.

அச்சமரில் கிரானேட் குண்டு அவனது ஒரு காலை சிதைத்து முறிக்க, காலை வெட்டி எடுத்தே ஆக வேண்டுமென கள மருத்துவர்கள் அறிவுறுத்த, சிங்களப் படைகளை விரட்டி முடிக்கும் வரை காலுக்குக் கட்டுப் போட்டுக் கொண்டே கட்டளைத் தலைமை தந்தவன்! பலநூறு இராணுவத்தினர் யாழ்தேவி சண்டையில் உயிரிழந்தார்கள், சரத் பொன்சேகாவும் காயமடைந்து தப்பியோடினார்.

எத்தனையோ இராணுவ வரலாறுகளைப் படித்திருக்கிறேன். எண்ணிலா தளபதியர்களின் போர்க்கள சாகசங்களை உள்வாங்கி வியந்திருக்கிறேன். ஆனால் அனைவரை விடவும் எனது ஆதர்சம் தமிழீழம்-முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத் தொடுவாய் கிராமம் தந்த இத்தளபதிதான்.

இரவு பகலென களப்பணியில் நின்ற அவனுக்கு இளவயதிலேயே சர்க்கரை நோய், இதயநோய். அமைதிப் பேச்சுவார்த்தை காலத்தில் 2003-ம் ஆண்டு நார்வே நாட்டின் ஏற்பாட்டில் சிங்கப்பூரில் வைத்து அவனுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அமெரிக்காவின் புகழ்பெற்ற தமிழ் மருத்துவர்கள் வந்திருந்து பெருமையுடன் அவனை சிங்கப்பூரில் பராமரித்தார்கள்.

சிகிச்சை முடிந்து கொழும்பு விமான நிலையம் வந்திறங்குகிறான் அவன். விமான நிலையத்திற்குள் நுழைந்ததுமே சுமார் 35 இளம் சிங்களத் தளபதியர்கள் முழு இராணுவச் சீருடையில் அவனை சூழ்கிறார்கள். சதி நடந்துவிட்டதோ என ஒரு கணம் அவன் திகைக்கிறான். நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டார்களோ… என்ன செய்வது என எண்ணிக் கொண்டிருந்தபோதே தமிழ் தெரிந்த சிங்களத் தளபதி ஒருவர் அங்கு நிலவிய கனத்த அமைதியை தமிழும் ஆங்கிலமும் கலந்து உடைக்கிறார். ”பயப்படாதீர்கள் பால்ராஜ்… “வத்திராயன்-குடாரப்பு பாக்ஸ்’ சண்டை பிடித்த பால்ராஜை வாழ்க்கையில் எப்போதேனும் பார்க்கிற பாக்கியம் கிட்ட வேண்டு மென்று ஆசித்த இராணுவத் தளபதியர்களில் நாங்கள் சிலபேர். எங்கள் இராணுவத்தினருக்கு நீங்கள் ஒரு கனவு நாயகன், தெரியுமா உங்களுக்கு?” என்று அந்த சிங்களத் தளபதி கூற, இறுக்கம் அகன்று ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து உண்மையான இராணுவ மரபோடு அவரை வாழ்த்தியிருக்கிறார்கள்.

என்றேனும் ஒருநாள் என்னிடம் அந்த அளவுக்குத் தேவையான பணம் வருமெனில், அல்லது உணர்வாளர்களோ வர்த்தகத் தயாரிப்பாளர்களோ முன்வருவார்களெனில் மாவீரன் பால்ராஜ் நடத்திய “வத்திராயன்-குடாரப்பு பாக்ஸ்’ சண்டையை “ஹாலிவுட்’ திரைப்பட தரத்திற்கு தமிழ், ஆங்கில மொழிகளில் தயாரிக்க வேண்டுமென்பது என் வாழ்வின் ஆசைகளில் ஒன்று. பால்ராஜ் மட்டும் கேடு கெட்ட இத் தமிழ்ச் சாதியில் பிறக்காமல் அமெரிக்கனாகவோ, பிரித்தானியனாகவோ, யூதனாகவோ பிறந்திருந்தால் இன்று அவன் உலகம் போற்றும் போர்க்கள நாயகனாய் உயரம் பெற்றிருப்பான்.
அதென்ன அந்த வரலாற்றுச் சிறப்புமிகு “வத்திராயன்-குடாரப்பு பாக்ஸ்’ சண்டை? சுருக்கமாக முதலில் ஓரிரு வரிகளில் சொல்லிவிட்டு பின்னர் விரிவாக விளக்குகிறேன். கடல், சிங்கள கடற்படையின் கட்டுப்பாட்டில், வடக்குப்புறம் பலாலி இராணுவ தளமும் அத்தளத்தையொட்டி யாழ்குடாவில் நிற்கும் 20,000 இராணுவத்தினர், வடமேற்கில் பளை இராணுவ முகாமும் அங்கிருக் கும் சுமார் 7,000 ராணுவத்தினரும், தெற்குப்புறமாய் 14,000 இராணுவத்தினருடன் அசைக்க முடியா ஆனையிறவு முகாம், இவ்வாறாக கடற்படை, வான் படை, எறிகணைப் படை, பீரங்கிப் படை, தங்குதடையற்ற விநியோகம் இவற்றோடு சுமார் 40,000 இராணுவத்தினர் சூழ்ந்து நின்ற களத்தை வெறும் 1,500 போராளிகளுடன், சிறு ரக ஆயுதங்களோடு, விநியோக வசதியோ மீட்கப்படும் வாய்ப்போ ஏதுமின்றி, கடல்வழி ஊடறுத்து உள் நுழைகிறார் பால்ராஜ்.

வெட்டவெளி மணற்பரப்பு, மறைந்து நின்று தற்காத்து சண்டையிட மரங்களோ, புதர்களோ, பாறைகளோ, மணல் மேடுகளோ இல்லாத களம். அப்பரப்பில் “ப’, “ட’ வடிவில் எதிரியின் குண்டு மழைக்கு நடுவே பதுங்கு குழிகள் வெட்டி நிலையெடுத்து -இதைத்தான் “குடாரப்பு-பாக்ஸ் சண்டை” என்கிறார்கள்… அப்படி “ப’ “ட’ வெட்டிக் கொண்டே மெல்ல நகர்ந்து A9 நெடுஞ்சாலையை புதுக்காடு சந்திப்பில் இடைமறிக்கிறார்கள். எவ்வித பின்புல விநியோக ஆதரவோ, மருத்துவ உதவிகளோ, தப்பிக்கும் வாய்ப்போ இன்றி சிறுரக ஆயுதங்களுடனும், பிஸ்கட்-ரஸ்க்-ரொட்டி- வறுத்த மாவு- குடிநீர் என குறைந்த உலர் உணவுடனும் வெறும் 1,500 போராளிகள் -நான்கு படை அசுர பலத்தோடு நின்ற 40,000 இராணுவத்தினரை எதிர்கொண்டு அவர்களின் இதயப் பரப்பிலேயே நிலையெடுத்து -ஒன்றிரண்டல்ல 34 நாட்கள் -ஆனையிறவு முகாம் விழுகின்றவரை சண்டையிட்டார்களென்பது உலகின் வீர வரலாறுகள் இதுவரை அறியாத மெய்சிலிர்க்கும் அதிசயம். இது நடந்தது ஓயாத அலைகள்-3ன் இறுதிக் கட்டமான 2000-ம் ஆண்டில்.

2002-ல் நான் வன்னி சென்றிருந்தபோது தமிழ்ச்செல்வன் அவர்களிடம் வைத்த முதன்மையான வேண்டுகோள் இதுதான்: “”திரும்பிச் செல்லுமுன் தலைவரையும், தளபதி பால்ராஜையும் நான் பார்க்க வேண்டும், பார்த்தே ஆக வேண்டும், பார்க்காமல் நாடு திரும்பப் போவதில்லை”. பால்ராஜ் அவர்களை நான் சந்தித்தது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில். மருத்துவ ஓய்வில் இருந்தார்.

எளிய மனிதனாய், சாரம் கட்டிக் கொண்டு, மரப்பலகையில் போர்வை விரித்து படுத்திருந்தார். ”சிகிச்சையின் போதேனும் மெத்தையில் படுக்கக்கூடாதா, இது சமாதான காலம்தானே…?” என்றேன். சிரித்தார். ”பழகினால் அதையே உடலும் மனசும் தேடும். இப்படியே இருந்துவிட்டால் போர்க்களத்தில் சுகம்” என்றார்.

வேரித்தாஸ் வானொலியில் பல புத்தகங்களிலிருந்து கடன் வாங்கி நான் படைத்த நிகழ்ச்சிகளைக் கேட்டு, இயல்பிலேயே நான் பெரிய அறிவாளியாக இருக்க வேண்டுமென கற்பிதம் செய்து கொண்டு, என்னிடம் கேட்டு தெளிவு பெறவென, மாசில்லா மாணவன் போல், 49 கேள்விகளை கசங்கிய தாளில் எழுதி வைத்து, அறிந்து கொள்ளும் தீரா ஆர்வத்துடன் வினவிக் கொண்டிருந்த பால்ராஜை எப்படி நான் மறப்பேன்!

“இத்தாவில்”, “வத்திராயன்-குடாரப்பு பாக்ஸ்’ சண்டை அனுபவத்தை கேட்டறியத்தான் வந்தேன்” என்றேன். ஊர்த்திருவிழாவில் சலங்கை கட்டி கரகமாடும் நடன மணியைப் போல், உருண்டு புரண்டு ஓடும் அருவியைப் போல் கதை சொல்லத் தொடங்கினார் பால்ராஜ்.

”மூன்று ஆண்டுகளுக்கு முன்னமே தலைவர் வரச்சொல்லி “பால்ராஜ் இத்தாவில்-தாளையடி- வத்திராயன் -குடாரப்பு பக்கமாய் போய் ரெக்கி பார்த்திட்டு வா’ என்றார். (”ரெக்கி’ என்றால் தகவல்கள் சேகரிப்பது, உளவுச் செய்திகள் திரட்டுவது). எனக்கு ஒன்டுமே விளங்கவில்லை. ஏனென்டா தாளையடி, வத்திராயன்,குடாரப்பு பகுதிக்கு இராணுவ முக்கியத்துவம், எதுவும் இல்லை. தொடர்ந்தும் தலைவர் சொன்னார். “கவனமா பார்த்து வா பால்ராஜ்… யாழ்ப்பாணத்துக்கான சண்டை அங்கேதான் தொடங்கும்’. அப்போகூட எனக்கு எதுவுமே விளங்கலெ. நானும் போய் ரெக்கி எடுத்தேன். கடல் மணலைத் தவிர வேறொன்டும் அங்கெ இல்லெ. அப்பவும் தலைவர் விபரம் எதுவும் சொல்லெயிலெ”.

மூன்று வருஷத்துக்குப் பிறகு ஓயாத அலைகள் 3 நடக்கேக்க தலைவர் வரச் சொன்னார். “”பால்ராஜ், ஆனையிறவுக்கான சண்டையெ நீதான் நடத்தப் போறெ’ என்றார். “”நீ பெரிய வீரன், பால்ராஜ். எத்தனையோ சோதனைகளெ உனக்கு நான் தந்திருக்கேன். எல்லாத்திலெயும் நீ வென்றாய். இது கடைசியா நான் உனக்கு வைக்கிற சோதனை. உன்னையும் 1,500 போராளிகளையும் தாளையடி கடற்பக்கம் சூசை தரையிறக்கி விடுவான் அவ்வளவுதான். சிக்கலென்டா உங்களை காப்பாற்றிக் கொண்டு வரக்கூட எங்களாலெ வர ஏலாது. நீ A9 நெடுஞ்சாலையை இடைமறிச்சு யாழ்ப்பாணத்திலிருந்து ஆனையிறவுக்கு வர்ற விநியோகத்தை வெட்டி முறிக்கணும். அதைச் செய்தா ஆனையிறவு தானா விழும். நீ உண்மையான வீரனென்டா ஆனையிறவெ விழ வச்சு நீ அந்தப் பக்கத்திலிருந்து 9 ரோட்டுலெ ஆனையிறவெ நோக்கி வர, நான் கிளிநொச்சியிலிருந்து இங்காலெ பக்கமா வர ரெண்டுபேரும் ஆனையிறவிலெ கை குலுக்கலாம்” என்றார்.

2000, மார்ச் 18-ந் தேதி சீறிப்பாய்ந்த கடற்புலிகளின் படகுகள் 1500 போராளிகளையும் தளபதி பால்ராஜையும் தாளையடி-குடாரப்பு- செம்பியன்பற்று கடற்பரப்பில் தரையிறக்கம் செய்யும் போதே கடும் சண்டை தொடங்கிற்று. விடுதலைப்புலிகள் போன்றதொரு அமைப்பு எதிரிப்படையை எதிர்கொண்டு ஒரே நேரத்தில் இத்தனைபேரை தரையிறக்குவதென்பதே மிகப்பெரிய சாதனை எனப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் ஆசிய பிராந்தியத்தில் நடந்த மிகப்பெரிய கடல்வழித் தரையிறக்கம் இது என ராணுவ ஆய்வாளர்கள் அப்போது வியந்தார்கள்.

பால்ராஜ் தொடர்ந்தார். “”இறங்கேக்கெயே கடும் சண்டை… சக்கை அடி அடிச்சான்… நாங்கள் மெதுவா நகர்ந்து வத்திராயனிலெ பாக்ஸ் வெட்டி நிலையெடுத்தம். சண்டையென்டா இதுதான் சண்டை ஃபாதர். குளிக்க ஏலாது, சப்ளை இல்லை… வெட்டி நிற்கும் குழிக்குள்ளெதான் சமையல், சாப்பாடு, தூக்கம் எல்லாம். காயம்பட்ட போராளிகளெ அதே குழிக்குள்ளே பராமரிக்க ணும். வீரமரணம் தழுவிய போராளிகளெ வணக்கத்தோட விதைக்கணும்… விமானத்தாலெ அடிப்பான்… டாங்கு கொண்டு அடிப்பான்… எறிகணை அடிப்பான்…”

“”என்ட ராசா… பழைய தமிழ் இலக்கியங்கள்லெ படிப்பம்தானே ஃபாதர், “இன்டு போய் நாளெ வா’ என்டு… அதுபோலத்தான் வத்திராயன் சண்டையும். வத்திராயன் இண்டைக்கு 400 மீட்டர் அவன் பிடிச்சா, நாளை 600 மீட்டர் நாங்க பிடிப்பம். அவன் 10, 20 டாங்குகளை வேகமா கலச்சுக் கொண்டு எங்களெ குழிக்குள்ளேயே உயிரோட புதைக்கலாமென்டு வருவான்… நாங்க பாய்ஞ்சு அவன் டாங்குகள் மேலெ ஏறி சுட்டுப்போட்டு அதே டாங்குகளெ திருப்பி நாங்க ஓட்டி அவனையே அடிப்பம். ஹாலிவுட் யுத்த படங்கள் பார்த்திருப்பிங்கதானே… அப்பிடித்தான் சண்டை நடந்தது.”

“”ரெண்டுநாள்… எட்டுநாள்… பத்துநாள்… சப்ளை துப்புரவா இல்லாத நிலை… கொண்டு வந்த சாமானெல்லாம் தீருது… சாப்பாடு தட்டுப்பாடு, சிங்கள ஆமிக்காரர்களெ பாய்ஞ்சு பிடிச்சு அவங்கட ஆயுதங்களெ எடுத்து சண்ட பிடிச்சம்… என்ட ராசா… சண்டையென்டா இதுதான் சண்டை…” -அப்படியொரு ரசனையுடன் வத்திராயன் பாக்ஸ் சண்டையை வருணித்தார் பால்ராஜ்.

வத்திராயனில் நிலை நின்று வரலாற்றுச் சமராடி, மெல்ல நகர்ந்து புதுக்காடு சந்திப்பு பகுதியில் A9 நெடுஞ்சாலையை இடைமறித்தார்கள். பல்லாயிரம் இராணுவத்தினரை அணி திரட்டி மீண்டும் மீண்டும் சிங்கள இராணுவம் முயன்ற முன் நகர்வுகளை நினைத்துப் பார்க்க முடியாத இதிகாச வீரம் காட்டி முறியடித்தனர் பால்ராஜின் போராளிகள். A9 நெடுஞ்சாலை வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து ஆனையிறவு முகாமில் இருந்த 14000 ராணுவத்தினருக்கு உணவு, ஆயுத விநியோகம் தடைபட்டது. இன்னொரு முனையில் ஆனையிறவுக்கு குடிநீர் வழங்கிய பரந்தன் பகுதியையும் புலிகளின் பிறிதொரு படையணி கைப்பற்ற, பால்ராஜும் 1500 போராளிகளும் குடாரப்பில் தரையிறங்கிய 34-ம் நாள், 2000 ஏப்ரல் 22-ம் நாள் ஆனையிறவு முகாம் விழத்தொடங்கியது. ஏப்ரல் 23-ம் தேதி ஆனையிறவு விடுதலைப்புலிகளின் முழுக் கட்டுப்பாட்டில் வந்தது.

பிரபாகரனும், பால்ராஜும் தங்களுக்குள் செய்துகொண்ட வரலாற்றுச் சபதம் நிறை வேறியது. புதுக்காடு சந்திப்பிலிருந்து வந்த பால்ராஜும் கிளிநொச்சியிலிருந்து வந்த பிரபாகரனும் ஆனையிறவில் கை குலுக்கினார்கள். ஆனால் பொதுவாக சிறு வெற்றிகளுக்கே தாராளமாய் பாராட்டி மகிழும் பிரபாகரன் ஒரு வார்த்தைகூட பால்ராஜிடம் சொல்லவில்லை. அமைதியாக ஒரு நிமிடம் பால்ராஜையே பார்த்தவர்… ”என்ன பால்ராஜ், நான் ஒண்டும் பாராட்டிச் சொல்லெலியே என்டு யோசிக்கிறியா. இந்தா கேள் உன்ட எதிரி உன்னைப் பற்றி என்ன சொல்றா னெண்டு? எனக் கூறிக்கொண்டே ஒரு “வாக்மேன்’ (ரஹப்ந்ம்ஹய்) பிளேயரையும் குறுந்தகடையும் கொடுத்திருக்கிறார். யாழ்ப்பாணப் படைகளின் கட்டளைத் தளபதி ஹெட்டியாராட்சிக்கும் அப்போதைய இராணுவ மந்திரி அனுருத்த ரத்வத்தேக்கும் வதிரையன் பாக்ஸ் சண்டையின் இறுதிக் கட்டத்தில் நடந்த காரசாரமான உரையாடலை தனது கட்டளை மையத்தில் இருந்துகொண்டு பதிவு செய்திருக்கிறார் பிரபாகரன்.

ஆனையிறவு விழக்கூடும் என்ற நிலையில், அது தென்னிலங்கையில் பெரும் அரசியல் கொந்தளிப்பை உருவாக்குமென்ற அச்சத்தில் பலாலி இராணுவத் தளத்திற்கு பறந்து வருகிறார் இராணுவ மந்திரி ரத்வத்தே. அங்கிருந்து தளபதி ஹெட்டியாராட்சியை காய்ச்சி எடுக்கிறார். ”வேசி மகன்களே… 40,000 பேர் படையைக் கொண்டு, சப்ளை இல்லாமல் சண்டையிடும் 1500 பேரை சமாளிக்க முடியாத நீங்களெல்லாம் ஒரு இராணுவமா? த்தூ…” இப்படிச் சொல்ல முடியாத அசிங்க வார்த்தைகளால் அர்ச்சிக்கிறார். எல்லாம் கேட்டுவிட்டு ஹெட்டியாராட்சி பொறுமையாகச் சொன்ன பதில் ”ஐயா பிரபாகரன் நேரா வந்து சண்டையிட்டாக் கூட சமாளிச்சிடுவேன். வந்திருப்பது பால்ராஜ். அவன் வந்து உட்கார்ந்தானென்றால் கிளப்ப முடியாது” -இந்த உரையாடலைத்தான் பதிவு செய்து பால்ராஜுக்கு கொடுத்தார் பிரபாகரன். “”உன்ட எதிரியே உன்னெ இப்படி பாராட்டியிட்டான். இதுக்கு மேலெ நான் என்ன சொல்றதாம்? வெண்டுட்டெ பால்ராஜ்” என்று சொல்லிக்கொண்டே பாசமுடன் கட்டித் தழுவிப் பாராட்டினாராம் பிரபாகரன்.

1996 ஓயாத அலைகள் 1-ன் போது இதே முல்லைத்தீவில் சிங்களப் படைகளை துவம்சம் செய்து துரத்தியடித்த பால்ராஜ், 1998 ஓயாத அலைகள் 2-ல் மின்னல் வேகத் தாக்குதலில் கிளிநொச்சி இராணுவ முகாமைத் துடைத்தெறிந்து புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பால்ராஜ், 2000-ல் ஆனையிறவை வீழ்த்திய பால்ராஜ், அதன் பின்னர் இறுதியாக ஆனையிறவை மீளக் கைப்பற்ற சந்திரிகா அரசு 2001-ல் மேற்கொண்ட “அக்னிஹேலா’ பெரும் எடுப்பை எதிர் கொண்டு தகர்த்தெறிந்த பால்ராஜ், 43-ம் வயதில் 2008 -கடந்த ஆண்டு மே 23-ம் நாள் மாரடைப்பால் மரணமடைந்தார்.

சில களங்களில் புலிகளுக்கு தோல்வி என்ற நிலை வரும் போதும் சண்டைக்களத்தில் திடீரெனப் பிரவேசித்து புதிய வியூகங்களை அமைத்து சண்டையை வெற்றிப் பாதையில் திருப்பிய சமர்க்களங்களின் சரித்திர நாயகர் பால்ராஜ். உதாதரணமாக பூநகரி, யாழ்தேவி, ஆகாயக்கடல் வெளிச்சமர் ஆகியவற்றைச் சொல்லலாம்

Tuesday, June 30, 2009

பிரிகேடியர் தீபன்


25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல்...
புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது.
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணிதான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.

தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் - கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது.

தீபனை இயக்கத்தில் சேர்த்த மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய காரணமாகவிருந்த‌ 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற‌ வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார்.

1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட‌ பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் "தாங்கோ பாப்பா" ஆகும்.

இவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாது காப்பாளரானார்.

1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான‌ அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

அக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும். இக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.

1988ம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தீபன் இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள்.

இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும்.

பால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட‌ ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்களவான வெற்றியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை.

1992ல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது.

தீபனின் திறமையும் வீரமும் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காக‌ யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புறள வைத்த பெருமை தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே பால்ராஜ் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் தீபனே முறியடிப்புச்சமருக்குத்தலைமை தாங்கினார்.

தீபனின் தந்திரத்தின்படி மண் கும்பிகளுக்குள் மணித்தியாலக்கணக்காக காத்திருந்த புலிகள் முன்னேறிய‌ இராணுவம் மிக அருகில் வந்ததும் திடீர்த் தாக்குதலைத்தொடுத்து அவர்களை நிலை குலைய செய்ததுடன் புலிகள் இரண்டு ரி‍ 55 டாங்கிகளை கைப்பற்றுவதற்கு வழி சமைத்துக்கொடுத்தது.

இந்த‌ இரண்டு ரி‍ 55 டாங்கிகளில் ஒன்றை மண்ணுக்குள் புதைத்து பயன்படுத்தியே இரண்டு டோரா பீரங்கிப் படகுகளை சாலைப்பகுதியில் ஒரே நாளில் புலிகள் தகர்த்து சாதனை புரிந்தனர்.

1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் பூநகரி முகாமை தீபன் தலைமையிலான போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு தலைமையிலான போராளிகளும் தகர்த்தனர். இங்கே கைப்பற்றப்பட்ட 5 நீருந்து விசைப்படகுகளே கடற்புலிகள் தோற்றம் பெற்று பலம் பெற உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகா.

1994ல் தீபன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. 1995ல் முறிவடைந்த பேச்சு வார்த்தை 3ம் ஈழப்போருக்கு வழி சமைத்தது.

1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார்.

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் பால்ராஜ் சொர்ணம் தலைமையிலும் பின்னர் தீபன் பானு தலைமையிலும் புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். தீபன் தலைமையிலான போராளிகள் நவம்பர் 27 மாவீரர் நாள் முடியும் வரை யாழ்ப்பாணம் படையினர் கைகளில் வீழ்வதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.

யாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல்‍ மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள். தீபனை அழைத்த தலைவர் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ரெக்கியை ஆரம்பவிக்கவும் தாக்குதல் திட்டத்தை தீட்டவும் உத்தரவிட்டார்.

தீபனின் திறமையான திட்டத்தினால் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இங்கே கைப்பற்றப்பட்ட இரண்டு 122mm ஆட்லறி பீரங்கிகளே பின்னாளில் புலிகள் மரபு ரீதியாக தமது இராணுவத்தைக் கட்டமைக்க உதவின.

ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது புளியங்குளத்தை தக்கவைக்கும் பொறுப்பு தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும் நெடுங்கேணியையும் இலகுவாக கைப்பற்றிய இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்ற முடியாமல் மாற்றுப்பாதையில் கனகராயன்குளத்தையும் கரிப்பட்டமுறிப்பையும் கைப்பற்றியபோது புளியங்குளம் கைவிடப்படவேண்டியிருந்தது.

இதன்போது தீபனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக விக்கீஸ், அறிவு மற்றும் லோரன்ஸ் விளங்கினார்கள்.இந்தக்கூட்டணியின் கண்டு பிடிப்பான மண் அணைக்கட்டும் அகழியுமே இலங்கை இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.

இன்றைய தேச நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கின்ற கேணல் கருணா அம்மான் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை காலத்தில் தானே வன்னிப்பகுதியின் கட்டளைத்தளபதியாக நியமிக்கப்பட்டேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் தீபனுடன் இணைந்தே இந்தப் பொறுப்பை வகித்தார் என்பதும் இவர் தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு வேலைகளை கவனித்தபோது ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தவர் தீபன் என்பதையும் குறிப்பிடத்தவறிவிட்டார்.

1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத அலைகள்‍ 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதே. இத்தாக்குதலிலும் தீபனின் பங்களிப்பு மிகக்காத்திரமானதாகும்.

1999ல் புலிகள் ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து படையினர் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே வாரங்களில் மீளக்கைப்பற்றிக்கொண்டனர்.

ஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாக அமைந்தது ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991 ல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத் தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம்.

இத்திட்டத்தை தலைவர் சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜுக்கு விளக்கியபோது சற்றுத்தயங்கினாராம் பால்ராஜ். பின்னர் தீபன் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கியபின்பு தீபன் மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக களத்தில் இறங்கினாராம் பால்ராஜ்.

குடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றபின் செம்பியன்பற்றிலிருந்து வெற்றிலைக்கேணி கட்டைக்காடு வரை நிலை கொண்டிருந்த படையினரை விரட்டி அடித்தும் ஆனையிறவு முகாமை பின் பக்கமாக தாக்கியும் ஆனையிறவு முகாம் கைப்பற்றலில் முக்கிய பங்காற்றினார் தீபன்.

2000 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை சின்னாபின்னமாக்கியது தொட்டு 2009 ஜனவரி வரை 55ம் மற்றும் 53ம் படையனியின் ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எத்தனையோ முயற்சிகளை தவிடு பொடியாக்கியவர் வட போர்முனைக் கட்டளைத்தளபதி தீபன்.

அதே போன்று கிளிநொச்சியை சுற்றி 18km நீளமான 'L' வடிவிலான மண் அணைக்கட்டு அமைத்து கிளிநொச்சியின் வீழ்ச்சியை பல மாதங்கள்(2009 ஜனவரி 1 வரை) தள்ளிப்போட்டவர் தீபன்.

கடைசியாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் ஏப்ரல் 1ம் திகதி பல படையணித்தளபதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டார் தீபன். ஆனால் காலன் வேறு விதமாக திட்டமிட்டான் போலும். ஏப்ரல் 1ம் திகதி அன்றும் 2ம் திகதி அன்றும் தீபனுக்கு நெஞ்சிலே காயம் பட்டது.ஆனாலும் தொடர்ந்து போராடிய தீபன் எதிரியின் நயவஞ்சகமான நச்சுக் குண்டுத் தாக்குதலில் வீரகாவியமானார்.

25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 4ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது.

சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜ் என்றால் எந்தவித சந்தேகங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை நாயகன் இந்த தீபன் அம்மான் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்க‌ப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி, பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை "என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்."

தமிழனை தலை நிமிர வைத்த இந்த இரண்டு வீரர்களும் இன்று நம்மிடையே இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களின் நினைவுகள் எம்மனங்களில் நீங்காதிருக்கும் என்பதும்.

-சாணக்கியன்-

Friday, October 31, 2008

கப்டன் மயூரன்

இயற்பெயர்: பாலசபாபதி
செல்லப் பெயர்: சபா
பிறப்பு: 01-11-1971.
வீரமரணம்: 11-11-1993

தந்தை: சபாபதிப்பிள்ளை தியாகராஜா,
தாய்: சிவகாமசுந்தரி தியாகராஜா.
பிறப்பிடம்: ஆத்தியடி, பருத்தித்துறை

பங்குபற்றிய இறுதித்தாக்குதல்: பூநகரி தவளைப் பாய்ச்சல்

தமிழீழ விடுதலையை நோக்கி இயக்கத்தில் இணைந்தது
1987- தை

இணைவதற்கு தூண்டு கோலாக அமைந்த சம்பவம்
யாழ் மாவட்டப் பகுதியில் சிங்கள அரச இராணுவத்தின் கட்டு மீறிய அட்டூழியம். மற்றும் சகோதரான் கப்டன் மொறிஸ் இன் விடுதலை இயக்கப்பணிகளும் அவன் இணைந்து பணியாற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழின விடுதலை நோக்கும் அசைக்க முடியாத உறுதியும்!

போராட்டத்தில் இணைந்தவுடனான ஆரம்ப பயிற்சி
போராளிகளின் பாலை(காடும் காடு சார்ந்த நிலமும்)நில வாழ்வுடனான போராட்டப் பயிற்சி.

இணைந்திருந்த பயிற்சிக் குழு
ஆரம்பத்தில் கிட்டுமாமா தலைமை.
பின்னர் வீரமரணம் அடையும் வரை சொர்ணம் தலைமை.

பணியாற்றிய குழு
'ஓ' குறூப் அல்லது 'சைவர்' குறூப் எனப்பட்டது.

போராட்ட காலம் முழுவதும் வாழ்ந்தது தலைவரின் அருகாமை.
தலைவரின் குடும்ப உறுப்பினர்களுடன் உறவாடி... விளையாடி... அதனோடு மண்ணிற்காய் போராடி வாழ்ந்தவன் மயூரன். தலைவரின் குழந்தைகள் அவனால் அவ்வப்போது தாலாட்டி உணவூட்டப்பட்ட கதைகளும் உண்டு.

மென்மையான உள்ளம், தளராத மனவுறுதி, தன்னிகரற்ற துணிச்சல் இவற்றிற்கு அவன் உதாரணமானவன்.

1988 காலப்பகுதிகளில் காடுகளில் வாழும் தமிழ் போராளிகளை அழிக்கும் நோக்கில் ஈழப்பகுதியில் காலடி வைத்திருந்த இந்திய இராணுவத்தினரின் தந்திரமான காடு வளைப்புத் தாக்குதல்களில் பெரும்பாலும் மயூரன் பங்குபற்றி இருந்தான். ஒரு தடவை இராணுவத்தினரின் முரட்டுத்தனமான தாக்குதல்களிலிருந்து மீளும் பொருட்டு, போராளிகள் பின்வாங்கும் படி அறிவுறுத்தப்பட்ட பின்பும், மயூரன் தனியாக நின்று 70க்கு மேற்பட்ட இந்திய இராணுவத்தினரை அழித்தும் காயப்படுத்தியும் இருப்பிடம் திரும்பிய கதைகள் சக போராளிகளால் சிலாகித்துப் பேசப்பட்ட சேதிகளாக ஒலித்துக் கொண்டிருந்தன.

காட்டு வாழ்க்கையின் ஒரு முக்கியமான அம்சமான உணவு உறையுள் என்ற மிகச் சிரமமான விடயங்களை மிக இலகுவாக கையாளத் தெரிந்த மதிநுட்பம் நிறைந்த போராளிகளில் இவனும் முக்கியமானவன். போராளிகளிற்கான உணவுத் தேவைகளை இயற்கையுடன் ஒன்றிய வழிகளில் தேடிக் கண்டு பிடித்து தயார்ப்படுத்துவதில் திறமை பெற்றிருந்தான். அதற்காகவே தோழர்கள் இவனைத் தேடிப்பிடித்து அழைத்துச் செல்வது ஒரு வழமையான வேலையாக இருக்கும்.

கையினால் அவனாற்றும் பணிகள் கடுமையாக இருந்ததால் கை விரல்கள் இயங்க மறுத்த சுகவீன நிலைகளிற்கும் அவ்வப்போது ஆளாகி சிகிச்சை பெற்றிருந்தான்.

அம்மா, அப்பா, அண்ணாக்கள், அக்காக்கள், தங்கை... என்ற பெரும் உறவுகளுடன் உறவாடி வாழ்ந்த இனிய வாழ்க்கையின் நினைவுகள் அவனுக்குள் எப்பவும் ஒளிந்து கிடந்தன! இதனால் எப்போவாவது கிடைக்கும் அருமையான தனிமையில்.. பிரிவுத் துயரில் தோய்ந்து தொலைந்து போயிருக்கிறான். அது தலைவருக்கும் தெரிந்ததால் அவனை அவ்வப்போது உறவுகளைப் பார்த்து வரும்படி அனுப்பி வைத்திருக்கிறார்.

மோட்டார் வாகனம் எப்பவும் அவனின் பயணத் துணையாக இருந்தது.

கப்டன் மயூரன் பங்கு பற்றிய முக்கிய தாக்குதல்கள்
* இதயபூமி
* ஆகாய கடல் வழிச்சமர்
* ஆனையிறவுச்சமர்.
* மண்கிண்டி மணலாறு வெற்றிச்சமர். (1991)
* பூநகரி 2வது சமர்.
* பூநகரி தவளைப் பாய்ச்சல் வெற்றிச் சமர்(1993 கார்த்திகை)

அவனின் இறுதிச் சமரான இந்தச் சமருக்கு அவன் செல்ல விரும்பிய போது "இப்போ அவசரப்பட வேண்டாம்" என்று தலைவரால் அறிவுறுத்தப் பட்டதும், "இல்லை நான் போகப்போகிறேன்" என்று பிடிவாதமாக விருப்பப்பட்டு அவன் சென்றதும் நெஞ்சில் பதியும் குறிப்பிடத்தக்க விடயங்கள்.

பூநகரித் தவளைப் பாய்ச்சல் என்ற பெயரில் நிகழ்ந்த மாபெரும் முகாம் தாக்குதலில் முதல் அணியாக சென்று காற்றும் தீயும் கலந்த கானக வெளியில் மூச்சும் வாழ்வும் நம் மண்ணிற்கே என்று கரைந்து போன உத்தமர்களில் மயூரனும் கலந்து மாவீரன் ஆனான்!!

கப்டன் மயூரன் வீரமரணம்: 1993 கார்த்திகை 11ம் நாள்.
பூநகரி தவளைப்பாய்ச்சல் வெற்றிச் சமர்.


அவனது மரணத்தின் பின் அவனின் இளைய சகோதரி சந்திரா.இரவீந்திரன் அவர்கள் லண்டனிலிருந்து ஷஎரிமலை இதழுக்கு எழுதிய கவிதை வரிகள்

'கடல் கொந்தளித்தது...
ஜனங்களின் மனங்களைப் போல...
பனிக்காற்று உடலைத் துளைத்தது...
கூரிய ஊசிகளைப் போல...
மேகம் நிலவுக்கு விடைகொடுத்து
மூளியாய் இருண்டு கிடந்தது!
வலது கண் அடிக்கடி துடித்தது..!
கனவுகள் திரைகளாய் தூக்கத்தை மறைத்தது!
இதயம் தாய் மண்ணை நினைத்துத் தவித்தது!
நாழிகள் மரத்தனமாய் ஓட மறுத்தது..!
மின்னல் கோடிட்டு இடிகள் முழங்கின..!
கம்பிகளுடாய் சேதிகள் வந்தன..!
களத்தில்.. அவன் காவியமானான் என்று...!!
கடலும் காற்றும் பனியும் மேகமும்...
நிலவும் உலக ஒலிகளும்...
எங்கோ ஒரு அந்தந்தத்தில் அடைந்து போயின!
ஸ்தம்பித்த பூமியில்... ஜில்லிட்ட குருதியில்...
`சபா´ என்ற கூவலின் நீண்ட கேவல்..!
மௌனத்தின் விறைப்பில் ஏமாந்த கோபத்தில்...
´மயூரன்` என்ற விநோதமான விக்கல்..!

என் இனிய உடன் பிறப்பே..!
என் ஆசைத் தம்பியே..!
அழகிய அந்த ஈழ பூமியில்....
நீ எங்கே உறைந்து கொண்டாய்..?

கடல் கடந்து...வான்பறந்து...
மலை தாண்டி... மண்குதித்து...
படை மீறி வந்தாலும்...
நானுன்னை இனி எங்கு தேடுவேன்..!?
தம்பி! நானுன்னை இனி எப்படித் தழுவுவேன்!?
கொடிய பசியுடன் கூடவே தோழருமாய்...
திடுமென்று என் வாசலைத் தட்டிய போதெல்லாம்
நானிட்ட சாதமும் சாதாரண குழம்பும்
ருசியென்று உண்பாயே!
ஒரு கையில் சுமையேந்தி...
மறு கையால் உதவி செய்வாய்!
பிறர் கஷ்டம் பொறுக்காத...
தூயவனே... மயூரா...!
நானுன்னை இனி எங்கு தேடுவேன்...?
தம்பி... நானுன்னை இனி எப்படித் தழுவுவேன்..!?'

கப்டன் மயூரனின் இளைய அக்கா
சந்திரா இரவீந்திரன்.

Sunday, November 04, 2007

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன்


பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன்
1967 - 2.11.2007


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப் பெற்று தமிழகத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.

1986 இல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழகத்திலிருந்து தமிழீழ தாயகம் வருவதற்கு முன் தாயகத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் சு.ப.தமிழ்ச்செல்வன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.

தேசியத் தலைவர் அவர்களுடன் தாயகம் திரும்பிய அவர், 1987 மே மாதம் யாழ்.தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

1991 வரை அப்பதவியில் அவர் நீடித்தார். இந்தியப் படைகளுக்கு எதிரான போரில் தென்மராட்சியில் நின்று தாக்குதல் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.

1991 இல் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார்.

1993 இல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற நிலையை அவர் பெற்று கடைசிவரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.

1994-1995 இல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.

2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார்.

அமைதிப் பேச்சுக்களில் வெளிநாடுகளின் முதன்மைப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு சிறிலங்கா அரசின் அமைதிப் பேச்சுக்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.

படைத்துறை வழியில் அவரின் செயற்பாடுகள்

1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கையிலும்

1992 இல் சிறிலங்கா படையினரின் “பலவேகய - 02″ எதிர்ச்சமரிலும்
முதன்மையானதாக இருந்தது.

மேலும் தச்சன்காடு சிறிலங்காப் படைமுகாம் மீதான தாக்குதல்

காரைநகரில் சிறிலங்காப் படையினர் மீதான தாக்குதல்

ஆகியவற்றிலும் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் முதன்மைப் பங்காற்றினார்.

1991 இல் மன்னார் சிலாபத்துறை சிறிலங்காப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அவர் தளபதியாக செயற்பட்டார்.

ஆகாய கடல்வெளிச் சமரில் அவர் விழுப்புண் பட்டார்.

பூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான “தவளை நடவடிக்கை”யில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் விழுப்புண் பட்டார்.

“ஒயாத அலைகள் - 03″ நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக அவர் பங்காற்றினார்.

தன்னுடைய அரசியல் பணி மூலம் அதிகம் மக்கள் மனதில் நிறைந்தவராக சு.ப.தமிழ்ச்செல்வன் விளங்கினார்.

தாயகத்திலும் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக அவர் விளங்கினார்.

அமைதி நடவடிக்கையில் தமிழினத்தின் விடுதலைக் கொள்கையில் உறுதியாக நின்று எதிரிகளின் ஏமாற்று நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவர் அவர்.

மேலும் பன்னாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பெருமதிப்பை பெற்றிருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன்

தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் வீரச்சாவு
[வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2007, 01:21 PM ஈழம்] [தாயக செய்தியாளர்]
தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
கிளிநொச்சி
2007.11.02

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு

இன்று காலை ஆறு மணியளவில் எமது அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களும் லெப். கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், கப்டன் நேதாஜி, லெப். ஆட்சிவேல், லெப். வாகைக்குமரன் ஆகியோரும் சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்தனர் என்பதனை தமிழீழ மக்களுக்கும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் பன்னாட்டுச் சமூகத்திற்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சோ.சீரன்,
செயலர்,
தலைமைச் செயலகம்

Wednesday, October 03, 2007

லெப்.கேணல் இம்ரான், பாண்டியன்



இம்ரான்-பாண்டியன்
யாழ்ப்பாணம், கொக்குவில், பிரம்படி

பாண்டியன்(செல்லத்துரை சிறிகரன்)
கொக்குவில் - யாழ்
23.03.1960 - 09.01.1988
(விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர். காரைநகரில் இந்தியப் படையினர் முற்றுகையிட்டபோது தன்னைதானே சுட்டு வீரச்சாவடைந்தார்.)

இம்ரான்-பாண்டியன் இருவரும் உற்ற நண்பர்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி என்ற இடத்தில் பிறந்து பக்கத்துப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த நண்பர்களாக இருந்து நண்பர்களாகவே போராட்டத்தில் இணைந்து நண்பர்களாகவே களமுனைகளில் களமாடி நண்பர்களாகவே தங்களுடைய இலட்சியத்திற்காக வீரச்சாவைத் தழுவிக் கொண்டவர்கள்.

எங்களுடைய புகழ் பூத்த மூத்த தளபதி கேணல் கிட்டு அண்ணாவின் தலைமையில் யாழ் மாவட்டம் எங்களுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போது சுன்னாகம் சிறிலங்கா காவல் நிலையம் முற்றுகையிட்டு தாக்கப் பட்டது.

சுன்னாகத்திலிருந்த சிறிலங்கா காவல்துறையினர் அனைவரும் தப்பியோடினர். சிறிலங்கா காவல் நிலையத்தை கைப்பற்றும் நோக்கோடு இறங்கிய அணித் தலைவர்களில் இம்ரானும் ஒருவர். இம்ரான் அந்தக் காவல் நிலையத்துக்குள் நுழையும் போது அவர்களுடைய சூழ்ச்சிப் பொறியில் சிக்கி அவரது வலது தொடை எலும்பு முறிந்து பாரிய ஒரு விழுப்புண்ணை அடைந்தார். அந்தத் தாக்குதல் என்பது எங்களுடைய ஒரு வரலாற்றுப் பதிவாக இன்றும் நாம் பேசக்கூடிய ஒரு தாக்குதலாக உள்ளது.

கால் முறிந்தவுடன் இம்ரான் மருத்துவத்திற்காகத் தமிழ்நாட்டுக்குச் சென்றார். அப்போது யாழ் மாவட்டத்தில் கிட்டண்ணாவினுடைய தலைமையில் பாண்டியன் பல்வேறு தாக்குதல்களில் பங்கேற்று தனது கடமையைச் செய்தார். அதே காலத்தில் தலைவர் தன்னுடைய பாதுகாப்பிற்காக ஒரு அணியை ஒழுங்கு செய்து கொண்டிருந்தார். அந்தப் பாதுகாப்பு அணியில் இம்ரான் இணைக்கப் படுகின்றார். இம்ரானுடைய அந்த வருகை பாண்டியனையும் அந்த அணிக்குள் உள்வாங்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்துகின்றது.

தலைவருடைய பாதுகாப்பிற்குக் களங்களில் நின்ற, அனுபவம் வாய்ந்த போராளிகளைத் தெரிவு செய்யும் போது பாண்டியனும், இம்ரானும் உற்ற சிநேகிதர்கள். அவர்கள் ஒன்றாகப் படித்து ஒன்றாக விளையாடி ஒன்றாகப் போராளிகளாக இணைந்து ஒன்றாகக் களமாடியவர்கள். அவர்களுடைய அந்த ஒற்றுமை, அவர்கள் களங்களில் காட்டிய வீரம் ஆகியவற்றால் அந்தப் பாதுகாப்பு அணிக்கு அவர்கள் தெரிவு செய்யப் பட்டனர். இருவருமே பாதுகாப்பு அணியில் ஒரு முக்கிய தளபதிகளாகப் பொறுப்பாளர்களாக, நடத்துனர்களாகத் தலைவருடைய பாதுகாப்பு அணிகளை ஒழுங்கு செய்து கொண்டிருந்தனர்.

அந்தச் சூழலில் இந்திய இராணுவம் வந்தது. யாழ் மாவட்டம் முற்று முழுதாக இந்திய ஆக்கிரமிப்புப் படையால் கைப்பற்றப்பட்டு எங்களுடைய போராளிகளுக்குப் பின்னடைவு நிலையை ஏற்படுத்தின யாழ் மாவட்டத்தினுடைய தளபதியாக பாண்டியன் பொறுப்பேற்றார். பாண்டியன் பொறுப்பெடுத்து குறிப்பிட்ட காலங்களிலேயே அவர் முற்றுகையிடப்பட்டு அவர் தன்னைத் தானே சுட்டு எதிரியிடம் பிடிபடாது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

அதன் பின்பு இம்ரான் அந்தப் பொறுப்புக்கு தலைவரால் நியமிக்கப் பட்டார். இம்ரானும் எங்களுடைய இயக்கத்தினுடைய செயற்பாடுகளுக்கு வடிவம் கொடுத்து தாக்குதல்களை நடத்தினார். இந்திய இராணுவத்தினருடனான நேரடி மோதல் ஒன்றின் போது அவரும் வீரச்சாவை அடைந்தார்.

அவர்கள் இருவரும் தலைவருடைய மெய்ப்பாதுகாப்பு அணியிலே இருந்து பொறுப்புகளை ஏற்று, களங்களில் வீரச்சாவை அடைந்தவர்கள்.

கட்டைக்காட்டு முகாம் மீதான தாக்குதலின் போது எங்களுடைய படையணிக்கு பெயர் சூட்டுவதற்காக நாங்கள் தலைவரோடு பேசிய போது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படுகின்ற மாவீரர்களான "இம்ரான்-பாண்டியன்" பெயரை அவர் சூட்டினார். அது எங்களுக்கு பெருமையாக இருந்தது. ஏனெனில் எங்களுடைய பாதுகாப்பு அணியை யுத்த களங்களிலும் மற்றும் தேவைகளின் போதுமான அந்தப் படையணியை உருவாக்குவதற்காக அவர்கள் அயராது பாடுபட்டு உழைத்தவர்கள்.

இந்த இம்ரான்-பாண்டியன் படையணி, தொடக்க காலத்தில் தலைவருடைய மெய்ப்பாதுகாப்பு அணியாக வலம் வந்தது.