Wednesday, April 20, 2005

2ம் லெப்.தமிழழகி

17.04.1999

மிக இளைய பராயத்திலேயே அறிவியல் புத்தகங்களிலிருந்து ஆராய்ச்சிப் புத்தகங்கள் வரையிலும் சிற்றிதழ்களிலிருந்து சிறுகதைகள், நாவல்கள் ஈறாக ஊடாடிய உயரம் அவள்.

அவளது வாசிப்பாற்றலே, அவளது பல்துறை ஆற்றலினதும் அளவுகோல். புத்தகம் என்றால் சந்தடிஎல்லாமே சமாதியாகிவிடுவாள். ஊன் உறக்கம் எல்லாம் அடுத்த பட்சம், கடமை மட்டும் நீங்கலல்ல.

கடமை நீங்கல் ஆகையில், காணிக்கை அதிகம் வேண்டியிருக்கும். ஓய்வொழிச்சல் நேரங்கள் இரையாகும். நித்திரா தேவிக்கு நிந்திப்பு நடக்கும். நள்ளிரவு தாண்டியும் வாசிப்பு நீளும். அதிகாலையும் கண்டு, அடுத்தநாள் கடமையும் அரவணைத்த நாட்கள் அவள் பதிவில் இருக்கிறது.

தன் பணிசார்ந்த வேலையோ எதுவோ எடுத்த காவடி ஆடி முடித்துத்தான் இறக்கப்படும். இரவுபகல். மாற்றங்கள் அவளை வரையறுத்துக் கொண்டதில்லை. கற்பதில் ஆர்வம் எப்பவும் சாதிக்க வேண்டும் என்ற ஓர்மம் எவ்வேலையானாலும், வேளையானாலும் கற்றுத் தனித்தியங்கும் துடிப்பு.

சமையலிலும் சமர்த்து. தொடர்சமையல்தான் பணியென்றாலும் சலியாத சிருஸ்டி பலமைல்கள் பொதி சுமந்து பொசுங்காத பூரிப்பு. கோபம் கோலமிடுக் கண்டதில்லை. வயதுக்கு மீறிய வளர்த்தி மட்டுமல்ல வனப்பும் ஆர்வ வளமும் அவளிடம்.

துன்பப்படுபவர்கள், பெரியவர்களோ, சிறியவர்களோ, பொறுப்பாளரோ பணியாளரோ மந்திராலோசனை நடக்கும் ஒவ்வொன்றையும் எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்றே எதிர்வு கூறல்கள் விளக்கங்கள், வியாக்கியானங்கள் முன்மொழியப்படும். சிறியவளளிற்க்குள் இருக்கும் சீமாட்டி வெளிப்பட்டு கட்டிடபோடும் துணுக்குற்றவரை.
ஆச்சி அளந்து கொண்டே போவாள்.

அவள் அடிப்படைப் பயிற்சி முடித்து வெளிவந்தபோது அவள் வயதை ஒத்தவர்கள் அடிப்படைக் கல்வி பெற தேர்வாக்கப்பட,அவள் கணிணிக்கற்கை நெறிக்காய்த் தேர்வானாள். அவள் கணிணியைக் கற்றுக்கொண்டே கடமையைத் தொடர்ந்தாள். அவள் வேலைகளின் ஐக்கியம் ஆழ அகலப் பரிமாணங்கள் பொருத்தங்கள் முரண்களாய் வெளிபடுத்தப்படும்.

போராட்ட வாழ்வில் அலுவலகப்பணியென்பது அதிமுக்கிய பணியாகிற போதும் பற்றிப் பிடிக்கச் செய்யும் பணியன்று. போர்களப் பணிக்காய் தாக்கல் செய்ய வைக்கும் மகிமை அதற்குண்டு.

தமிழழகிக்கு மட்டும் விதிவிலக்கு. ஞாபகத்திரையில் அத்தனையும் டாலடிக்கும். பணிச்சிரத்தையின் பரிசு என்று பாராட்டுதள் வேறு கிடைக்கும்.அசிரத்தை அவளிடம், தன்னைக் கவனத்தில் கொள்வதை மட்டுமே. டக்(Duck) டக்கி என்று செல்லமாயும் காரணமாயும். (வாத்துப்போல் நடப்பதனால்) அழைக்கப்படும் அவள் டக்கேதான்.

ஓயாத அலைக்கரம் அகன்று கொண்டபோது சண்டை அனுபவத்திற்கான வாய்ப்பு அவளுக்கு வாய்த்தது. நிர்வாகப் பணியிலேயே நிலைத்து விட்டவளுக்கு சுட்டதீவுக் களம் சுக்கான் கொடுத்தது.

"அக்கா அப்படியே கிடக்கட்டும் நான் வந்து கவனிக்கிறேன். திரும்பத்திரும்பச் சொல்லிப்போன அவள் வார்த்தைகள் எதிரெலிக்க அவள் வருகைக்காய் யாவும் அப்படியேதான இருந்தது.

இந்தச் சண்டையில் நான் செத்திட வேணும் என்ற வெளிப்பாடுகளுக்கு நடுவில் அவள் உறுதியாய்ச் சொன்னாள் "நான் சாக விரும்பேல்ல" சாதிக்க வேணும் வாழ வேணும் வருவன் வருவன்; என்று.

18.03.1999 களமிறங்கினாள் 17.04.1999 வரலாறாகிப் போனதாய் கிளிநொச்சி பரந்தன் சுட்டதீவுப் பகுதியில் எதிர்பாராத நேரடி மோதல் சொன்னது.

காலத்தின் கட்டளையில் கடமையுனர்ந்தவள். கட்டுமாணப் பணிக்காய் 3 வருடங்கள் கணிப்பொறியில் கணிப்புச் செய்தவள். கால நீட்ச்சியில் கடமை நீட்ட காலன் கணக்கு வைக்க வில்லை. அவள் தண்டனை பெற்று தட்டி நிமிர்த்தப்பட்டது. மிகக் குறைவு. சுய திட்டமிடலில் பணி பகிர்ந்து பணி இலகுவாக்கும் பக்குவத்தால் எப்பணியும் அவளுக்கு பஞ்சு.

முடியாது என்பது அவள் அகராதியில் கிடையாது. அவளும் ஜெனரேட்டரும் என்று கதையே எழுதலாம்.அவள் ஜெனரேட்டர் ஸ்ரட் செய்ய எடுத்துக்கொணட் முயற்சியை நினைக்க.

ஆண் போராளிகளே வழமையாக அந்த ஜெனரேட்டரை ஸ்டார்ட் செய்வது வழக்கம். அன்று இவள்தான் ஸ்ராட் செய்வாதாக சொன்னாள். சாதாரண பொறிகளைவிட இயல்பான இயக்கத்தில் இயக்கம் பெறும் இயல்பை அது இழந்தே இருந்தது. அவள் விடுவதாய் இல்லை. அன்று முழு நாள் அதே முயற்சியிலேயே அவள்.

முயற்சி வெற்றியாய் முடிந்ததிலிருந்து அதன் இயக்குநர் அவளேதான். காலம் மட்டும் ஆயுட்காப்புறுதி செய்திருக்குமானால் கனதியாய் அவள் சேவையை தாயகம் பெற்று பெருமைப்பட்டிருக்கும்.

நன்றி - எரிமலை Jan-2005