Saturday, July 03, 2004

கரும்புலி மேஜர் டாம்போ

காசிப்பிள்ளை தயாபரன்
நாச்சிக்குடா மன்னார்
17.8.1967 - 19.3.1991


1991 மூன்றாம் மாத நடுப்பகுதி:
சிலாபத்துறை இராணுவ முகாம்மீது ஒர் பாரிய தாக்குதல் நடத்துவதென தீர்மானக்கப்பட்டது.

"அண்ணை, மன்னாரில நடக்கிற முதலாவது கரும்புலித் தாக்குதலை நான்தான் செய்யவேணும்" இது கரும்புலி மேஜர் டாம்போ மிகத் தெளிவாகத் தன் தளபதியிடம் கூறிக்கொண்டது. தாக்குதலுக்கான நாள் வந்தது. அவனது விருப்பப்படியே அம் முகாம் மீதான தாக்குதலுக்காக, வெடி மருந்து நிரப்பிய வண்டியை ஓட்டிச் செல்வது டாம்போதான் எனத் தீர்மானிக்கப்பட்டது.

சண்டை தொடங்கி சிறிது நேரத்திற்குள்ளேயே படை முகாமின் கணிசமான பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. குறித்த நேரத்தில் கொண்டச்சி வீதி வழியாக வெடிமருந்து வண்டியை கொண்டு செல்வதற்கு வசதியாக போராளிகள் பாதையை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறார்கள். டாம்போ அந்த இறுதி நேரத்திற் கூட எந்தவித படபடப்புமின்றி காயமடைந்த போராளிகளுக்கு மருந்து கட்டுவதிலும், பிற உதவிகள் செய்வதிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றான். "எல்லாம் சரி. சக்கை வண்டியை அனுப்பலாம்" களத்தில் கட்டளை பிறக்கிறது. என்னால முடிஞ்ச அளவு முகாமின்ர உள்ளுக்க போய் மோதுறதுதான் என்ர நோக்கம்" சொல்லி விட்டு டாம்போ வாகனத்தில் ஏறத் தயாராகிறான். பக்கத்தில் நின்ற தோழனைக் கட்டியணைத்து முத்தமிடுகின்றான். "நானும் கொஞ்சதூரம் வாறன்" நண்பன் கூற, "வேண்டாம், ஏதும் தவறெண்டாலும் ஏன் வீணா எல்லாரும் சாவான்"

கூறிவிட்டு, வெடிமருந்து வண்டியை எடுத்துக் கொண்டு விரைகிறான் டாம்போ. எதிரியின் ஒருமித்த தாக்குதல் டாம்போவின் வாகனம் நோக்கி திரும்புகிறது. இலக்கை அடையுமுன்னரே அந்தக் கரும்புலி வண்டி வெடித்து சிதறுகிறது.

மன்னார் நாச்சிக்குடா மண்ணில் 17.08.1967 இல் காசிப்பிள்ளை என்பவருக்கு மகனாகப் பிறந்த தயாபரன்தான், 1986 களின் நடுப்பகுதியில் தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைத்துக் கொண்டான். எதிரிகளுடனான மோதலொன்றில் காலில் காயமடைந்தபின் தமிழ்நாட்டிற்கு போக வேண்டியேற்பட்டது டாம்போவுக்கு. அங்கு ஏனைய தோழர்களுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டாம்போ காலப்போக்கில் வவுனியா சிறைக்குக் கொண்டுவரப்பட்டான். அங்கு நடந்த சிறையுடைப்பில் டாம்போவும் வெளியேறினான். பின்னர் தன்னை கரும்புலிகள் அணியில் இணைத்து, இயக்க வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தான். பல வழிகளிலும் தன் திறமையை வெளிப்படுத்திய டாம்போவிடம் விஞ்சி நின்றது, வாகனத்தை இலாவகமாக ஓட்டும் சாரதித் திறமையே.

கரும்புலியாய் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு டாம்போ தன் கிராமத்திற்குச் சென்றான். தன் தாய், தந்தையுடன் மகிழ்ச்சியாய் இருந்தான். தாயைக் கட்டியணைத்துக் கொஞ்சினான். அவனது செயற்பாடுகள் தாய்க்கு விசித்திரமாக இருந்தது. சிரித்தாள். அவர்களுக்கு எங்கே புரியப்போகிறது, மகன் சாவுக்கு திகதி குறித்துவிட்டான் என்று. தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பாசறைக்குச் சென்றான் டாம்போ. புதிய போராளிகளுடன் மகிழ்ச்சியாக இருந்தான். தான் கரும்புலியாகப் போவதாக அவர்களுக்கு கூறினான். "டாம்போ அண்ணை பகிடி விடுகிறார்" என்று எல்லோரும் சிரித்தார்கள். இரவு ஏனைய போராளிகளுடன் தானும் வேட்டைக்குச் சென்றான். யார்தான் நம்புவார்கள் இவன் நாளைக்கே காற்றோடு கரைந்து விடுவானென்று.... மறுநாள் காலை, அதே முகாமில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த தனது சொந்த தம்பியை அழைத்தான்.

"நான் போறன், வருவனோ தெரியாது" என்றான் டாம்போ. தம்பிக்கு எதுவுமே புரியவில்லை. அண்ணனை மரியாதையுடன் பார்த்தபடி அவ்விடத்திலிருந்து விலகுகிறான். டாம்போவும் தன் இறுதிப் பயணமாய் பாசறையை விட்டு வெளியேறுகிறான் பாசறையின் வாசலில் நின்று திரும்பி சில நிமிடங்கள் பாசறையையே பார்க்கிறான். சில தோழர்கள் கையசைக்கின்றனர். அவனும் கையசைத்துச் செல்கிறான். அவனது பாதத்தின் சுவடுகளைத் தாங்கிக் கொண்டிருந்த மண் நிச்சயம் மகிழ்வு கொண்டிருக்கும்.

டாம்போ, நீ சென்ற பாதையில் எத்தனை எத்தனை போராளிகள்... அவர்களில் மட்டுமல்ல, ஈழத்தின் காற்றில் கூட நீயும், நீ சொன்னவைகளும் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றன - அந்தப் பெருமரத்தின் அடியில் இருந்து கொண்டு, நீ சொன்ன உன் சோகம் ததும்பும் குடும்ப வாழ்வும், கரும்புலியாய் ஆனபின் கொண்ட மன நிறைவும்.... நினைத்துப்பார்க்கிறோம்....

"வீட்டில் நான்தான் மூத்த பிள்ளை, இரண்டு தம்பிகளுக்கு பிறகு கடைக்குட்டியா தங்கச்சி பிறந்தாள். என்ர சின்ன வயதிலேயே அப்பாவுக்கு ஏலாமல் போட்டுது. அம்மாதான் கூலி செய்து எங்களை வளத்தவா. நானும் வளந்தாப் பிறகு அம்மாவுக்கு கொஞ்சம் உதவி செய்தன். தம்பி தங்கச்சி நல்லாப் படிக்க வேணும்மெண்டு ஆசைப்பட்டேன். எங்கட வீட்ட எல்லாரும் தங்கச்சியிலதான் உயிர். அவளின்ர சாமத்திய வீட்டுக்கு சொந்தக்காரர் எல்லாருக்கும் சொல்லி, எங்கட வசதிக்கேற்ற மாதிரி பெரிசாச் செய்தம். ஆனா... சாமத்திய வீடு நடந்து பத்தாம் நாள் தம்பிக்கும், தங்கச்சிக்கும் சும்மா ஒரு சின்ன சண்டை. அதால அம்மா தம்பிக்கு அடிச்சுப் போட்டா. தன்னாலதான் அண்ணாவுக்கு அடி விழுந்ததெண்டு நினைச்சு, எங்கட ஆசைத் தங்கச்சி நஞ்சு குடித்து செத்துப்போயிட்டாள்.

இதுக்குப் பிறகு ஒரு நாள் பயணம் போன தம்பியை நேவிக்காரர் பிடிச்சவங்களாம். அதுக்குப் பிறகு அவன் எங்க எண்டே தெரியாது. உயிரோட இருக்கிறானோ, இல்லையோ எண்டே தெரியாது. தங்கச்சி செத்து ஒரு மாதத்துக்கு முதலே மற்ற தம்பி இயக்கத்துக்கு வந்திட்டான். எங்கட குடும்ப நிலவரத்தை அறிஞ்ச சுபன் அண்ணை தம்பியை வீட்டை போகச் சொல்லியும் அவன் போகேல்ல, பிறகு இஞ்ச இந்தக் காம்பிலதான் ஓடித்திரியிறான். நான் தான் ஏத்தியந்து இந்தக் காம்பில விட்டனான்.

நான் கரும்புலியாப் போகப்போறேன் எண்டு தம்பிக்குச் சொல்லிப்போட்டன். ஒருக்கா என்ர முகத்தைப் பார்த்திட்டு பிறகு எங்கயோ பார்த்தான்.

நான் உண்மையாச் சொல்லுறன்ரா, இப்படியொரு நிறைவான சாவு எல்லாருக்கும் வராது...


ஆம்! நீ சொன்னது இன்னும் தெளிவாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

- கதிரவன் -