Thursday, February 19, 2004

மேஜர் மாறன்

சின்னத்துரை சுகுமாரன் - வவுனிக்குளம்
23.6.1960 - 26.6.1989


பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தை இறுதிவரை எதிர்த்து நின்று போராடி வீர வரலாறுபடைத்த தமிழ் மன்னன் பண்டாரவன்னியனால் பெருமைப்படுத்தப்பட்ட மண் வன்னிப் பெருநிலப்பரப்பு. காடுகளும், குளங்களும், விளைநிலங்களும், காட்டு விலங்குகளும், மந்தைகளும் இம்மண்ணின் செல்வங்கள். இத்தகையதொரு விவசாயக் கிராமமான வவுனிக்குளம்தான் சுகுமாரன் என்ற இயற்பெயரோடு மேஜர் மாறன் பிறந்த ஊர்.

சிறுவயதிலேயே ஒழுக்கமும், இரக்க சுபாவமுடைய இவன். ஆரம்பக் கல்வியை பிறந்த ஊரிலேயே முடித்துக் கொண்டு உயர் வகுப்புப் பயில மத்தியமகாவித்தியாலயத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். அப்பாடசாலையில் உயர் வகுப்பில் கல்வி கற்கும் பொழுது மாணவர் மன்றத்தின் தலைவராக இருந்த மாறன் சக மாணவர்களின் நன்மதிப்பையும், அன்பையும் பெற்றுக் கொண்டான்.

தமிழீழ மக்களை அடக்கி ஒடுக்கி நயவஞ்சகமாக தமிழின விரோதச்சட்டங்களைப் பிரகடனப்படுத்தி ஓர் இன அழிப்பு நடவடிக்கையில் சிங்கள அரசுகள் இறங்கியிருந்த அக்காலகட்டத்தில், தனது பாடசாலை மாணவர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்த மாறன் பல வழிமுறைகளைக் கைக்கொண்டான். கலை நிகழ்ச்சிகளிற்கூடாகவும், கட்டுரை வடிவங்களிலும், கிராமங்கள் தோறும் பிரச்சாரம் செய்து மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை உண்டுபண்ணினான். அத்துடன் சிங்கள இனவாதத்தின் அடக்குமுறைக்குட்பட்ட நிலையிலும் தமிழர்கள் மத்தியில் தலைதூக்கிக் கொண்டிருந்த சாதிக்கொடுமைகளுக்கு எதிரான கருத்துக்களை மக்களுக்கு குறிப்பாக மாணவர்களுக்கு வழங்கினான்.

சிங்கள இனவாதப் பிடியிலிருந்தும், பிற்போக்குத் தமிழ் தலைமைகளிலிருந்தும் தமிழீழ சமூகம் விடுவிக்கப்பட்டு ஒரு புரட்சிகரத் தலைமையினால் வழிநடத்தப்படும்போதுதான் இத்தகைய சமூக ஏற்றத்தாழ்வுகளையும், சமூகஒடுக்குமுறைகளையும் களைந்தெறிய முடியும் என்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொள்கையை எடுத்துக்கூறிய மாறன் 1983ஆம் ஆண்டின் முற்பகுதியில் தன்னையும் இணைத்துக் கொண்டான்.

கிளிநொச்சி மாவட்ட விடுதலைப் புலிகளின் அரசியற் பொறுப்பாளனாக இருந்தபோது மக்கள் மீது அவன் வைத்திருந்த நேசமும், அக்கறையும் அவனை ஒரு சிறந்த போராளியாக மக்கள் மத்தியில் வெளிக்காட்டியது. சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் கிராமங்களே மாறனின் கவனத்தை விசேடமாக ஈர்த்தன. அம்மக்களின் நல்வாழ்விற்காக மாறன் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது.
சிங்கள வெறியர்களின் காடைத்தனங்களால் தமது சொந்தக் கிராமங்களைவிட்டு ஏதிலிகளாகத் துரத்தப்பட்ட தமிழ் மக்களிற்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் விடுதலைப் புலிகளின் செயற்திட்டங்களுக்கு சரியான முறையில் மாறன் செயல் வடிவம் கொடுத்தான். மேலும் மக்களுக்கிடையில் ஏற்படும் சாதாரண பிரச்சினைகளை சரியான கோணத்திலிருந்து அணுகி அதனைத் தீர்த்து வைக்க மாறன் கையாளும் அணுகுமுறைகள் மக்கள் மத்தியிலிருந்த அவனது மதிப்பை மேலும் உயர்த்தியது. எந்தப் பிரச்சினைகளானாலும் அவற்றைத் தீர்த்துவைக்க முற்படுகின்ற பொழுது அப்பிரச்சினைகளின் தோற்றம், அதற்கான காரணங்கள், அக்காரணிகளைத் தோற்றுவிக்கும் சமூகப்பின்னணிஎன்பனவற்றை ஆராய்ந்த பின்பே தீர்ப்புக்களை வழங்குவான்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில், விடுதலைக்கெனப் புறப்பட்டு பிழையான தலைமைகளால் வழி நடாத்தப்பட்டு, திசை மாறி சமூகவிரோத சக்திகளாகிய சில அமைப்புக்களால் மக்கள் துன்புறுத்தலுக்குள்ளாகிய வேளையில், அவதானத்துடன் அதேவேளையில் தீர்க்கமுடன் மக்களை அச்சக்திகளிடம் இருந்து காத்தான்.
அமைதிப்படை என்ற போர்வையில் எமது மக்கள் மீது ஆதிக்கத்தினைச் செலுத்த வந்த இந்திய அரசின் வஞ்சக நோக்கத்தை எமது மக்களிற்கும், உலகத்திற்கும் காட்டுவதற்காக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றி மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கப் பாடுபட்டான்.
இந்திய ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிரான யுத்த காலகட்டத்தில் எமது கருத்துக்களையும், உண்மைச் செய்திகளையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக எமது இயக்கத்தால் வெளியிடப்படும் 'உணர்வு', 'சுதந்திரப்பறவைகள்' ஆகிய பத்திரிகைகளின் உருவாக்கத்திற்கும், அவற்றை மக்களிடம் கொண்டு செல்லவும் மாறன் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண் போராளிகளுடைய பங்கின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அவர்களை அணி திரட்ட வேண்டிய அவசியத்தைப் பற்றியும் அடிக்கடி வலியுறுத்திக் கூறுவதுடன் அவைகளுக்கு செயல் வடிவமும் கொடுத்துள்ளான். வவுனியா, கிளிநொச்சி, முல்லை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னிப்பிராந்தியத்தில் பெண்களுக்கிடையில் அரசியல்ரீதியான விழிப்புணர்ச்சியை உண்டு பண்ணி எமது இனத்தின் விடுதலைப் போராட்டத்தில் அவர்களையும் பங்குகொள்ள வைக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளான்.

இவ்வாறாக விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத்திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டுசென்று சரியான முறையில் செயற்படுத்திய வேலைத்திறனும், மக்கள் மீது குறிப்பாக சமூக ஒடுக்குமுறைக்குள்ளாகிய மக்கள் மீது மாறன் காட்டிய நேசமும் அவனை வன்னிப் பிராந்திய அரசியல் பொறுப்பாளனாக உயர்த்தியது.

26.06.1989 அன்று வவுனியா மாவட்டத்திலுள்ள பன்றிக்கெய்த குளம் என்னும் இடத்தில் வன்னிப்பிராந்திய அரசியற் பொறுப்பாளர் மேஜர் மாறன் உட்பட லெப். நித்திலா(மகளிர் படைப்பிரிவு), லெப். அருள், சுதன், மகேந்தி, சபா, பொபி, அகிலன், கேசவன், அச்சுதன், நவம், விஜயன், முரளி, ரூபன் ஆகிய 14 விடுதலைப் புலிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

Thursday, February 05, 2004

கேணல் சங்கர்


வைத்தியலிங்கம் சொர்ணலிங்கம் - யாழ்

வீரமரணம்-26.9.2001

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற் றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்துவிட்டது. ஈழ விடுதலைக்காய் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.

26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். அன்றைய தினத்தில் தியாகி திலீபனின் நினைவெழுச்சி நிகழ்வுகளில் தமிழீழ மக்களும், போராளிகளும் உணர்வுபூர்வமாக சங்கமித்திருந்த வேளையில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட அநாகாPகச் செயலானது சிறீலங்கா அரசின் போர்மீது உள்ள விருப்பைக் காட்டுவதுடன், தமிழீழ மக்களினதும், போராளிகளினதும் நெஞ்சங்களில் அனலை மூட்டிவிட்டிருக்கின்றது.

பதின்நான்கு ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில் தமிழீழம் முன்பொருமுறையும் நெஞ்சில் அனல் சுமந்து பொங்கிப் பிரவாகித்தது. சிறீலங்கா அரசின் அடக்குமுறைக்குள் சிக்கிச் சின்னாபின்னப்பட்ட தமிழீழ மக்களுக்கு வசந்தத்தின் வாசலைத் திறந்துவிடுவதாகக் கூறி அமைதிப்புறா வேடமணிந்து எம் மண்ணில் காலூன்றியது இந்தியப்படை. ஆனால், காக்கவந்தவர்கள் தம்மைத் தாக்கத் தயாரானபோது ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தண்ணீருமின்றி உண்ணா நோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்து, பாரத அரசின் உண்மை முகத்தை உலகறியச் செய்து காவியமானான் தியாகி திலீபன். அவனது உயிர்பிரிந்தபோது வரலாற்றில் என்றுமில்லாதவாறு, நெஞ்சில் அனல் பற்றியெழ பொங்கி எழுந்தது ஈழத் தமிழினம். அங்கே பிரகாசிக்கத் தொடங்கியது மக்கள் புரட்சி என்னும் புதிய விடுதலை ஒளி.
14 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் அதே தினத்தில் தான் மேற்கொண்ட அநாகாPகச் செயலால் தமக்கெதிராகப் போராடும் ஈழமக்களது உணர்வுகளையும், போரிடும் வீரியத்தையும் இன்னும் இன்னும் அதிகரிக்கச் செய்திருக்கின்றன சிங்களப் படைகள்.

தலைவனுக்கு உற்ற தோழன். போராளிகளுக்கு நல்ல ஆசான். பழகுவதற்கு பண்பானவன். மக்களுக்கு அரசியல், இராணுவ அணுகுமுறைகளில், எதிரிக்கு ஒரு சவால் என இருபது வருடம் நன்கு செழித்து வேர்விட்டு விழுதெறிந்த ஆலமரம் கேணல் சங்கர்.

வல்வெட்டித்துறை மண் தந்த வீரப்புதல்வர்கள் வரிசையில் வழிவந்தவர்தான் கேணல் சங்கர். 1981இன் ஆரம்பகாலங்களில் தனது சகோதரன் மூலமாக தமிழீழ விடுதலைப் போராட்டப்பாதையில் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட சங்கர் அவர்கள் 1983இல் தன்னை முழுமையாக போராட்டத்துடன் இணைத்துக் கொண்டார். அன்றிலிருந்து தனது இறுதி மூச்சுவரை தமிழீழ விடுதலைப் போராட்டப் பாதையில் விடுதலைப் புலிகளின் சகல நடவடிக்கைகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டார். தேசியத் தலைவர் அவர்களது எண்ணப்படி விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய புதிய பரிமாணங்களுக்கும், கட்டுமானங்களிற்கும் செயல்வடிவம் கொடுத்து விடுதலைப் போராட்ட போரியல் வரலாற்றில் புதிய திருப்புமுனைகளை ஏற்படுத்தியவர் கேணல் சங்கர்.

ஈழப்போரில் கடற்பரப்பின் முக்கியத்துவம் கருதி தலைவரின் சிந்தனைப்படி 'கடற்புறா' என்னும் பெயரில் கடற்புலிகள் அமைப்பை உருவாக்கியது மட்டுமன்றி, முதன்முதலில் சிறீலங்காக் கடற்படையின் பாரிய யுத்தக் கட்டளைக் கப்பல் ஒன்றின் மீதான கடற்கரும்புலித் தாக்குதல் ஒன்றுக்காக கடற்புலிகளான காந்தரூபன், கொலின்ஸ், வினோத் ஆகியோரைப் பயிற்றுவித்து, நெறிப்படுத்தி வெற்றிகரமான தாக்குதலொன்றை செய்துமுடித்தவர். இதேபோன்று விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் உருவாக்கத்திற்கும் உதவி புரிந்தவர். சகல போராளிகளுக்கும் போரியல் நுணுக்கங்களையும், ஆயுத, வெடிபொருட்பாவனையின் நுட்பங்களையும், காடுகளின ஒவ வொரு அங்குலங்களையும் அணுவணுவாகக் கற்பித்து, மரம், செடி, கொடி, விலங்குகள் என்பன பற்றிய தகவல்களை தெளிவுபடுத்தி பயிற்றுவித்த நல்லாசிரியர் கேணல் சங்கர். இறுதியாக தலைவரின் நேரடி வழிகாட்டலில் நடைபெற்ற ஓயாத அலைகள் நடவடிக்கையில் தலைவருடன் அருகில் நின்று இராணுவ அசைவுகளுக்கேற்ப போராளிகளின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தி சமர்களை, வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல உதவியவர். இராணுவ நடவடிக்கைகளில் மட்டுமன்றி, அரசியல் பேச்சுக்களிலும் பங்குபற்றி ஈழத் தமிழர்களது நியாயமான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியவர். இறுதியாக நோர்வே சமாதானத் தூதுக்குழுவினருடனான பேச்சுக்களின் போதும் தலைவருடன் கூட இருந்து சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டவர் சங்கர் அவர்கள். அமைதியாக இருந்தவாறு தனது ஆளுமையால், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பல்வேறு வகையிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டவர் கேணல் சங்கர் அவர்கள்.

இவர் மட்டுமன்றி இவரது குடும்பமும் தன்னை முழுமையாக விடுதலைப் போராட்டத்திற்கு அர்ப்பணித்து நிற்கின்றது.
1986இல் நாவற்குழி இராணுவ முகாம் மீதான தாக்குதல் முயற்சியில் இவரது சகோதரன் சித்தாத்தன், லெப். கேணல் பொன்னம்மான் அவர்களுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இவரே சங்கர் அவர்களை தமிழீழத் தேசியத் தலைவருடன் தொடர்புபடுத்தியவர். இவரின் இன்னொரு சகோதரன் கப்டன் கரன் இந்திய-சிறீலங்கா கூட்டுச் சதியால் லெப். கேணல் குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளில் ஒருவராக 'சயனைட்' அருந்தி வீரச்சாவை அணைத்துக்கொண்டார். 2000ஆம் ஆண்டில் ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது சிறீலங்கா இராணுவத்தின் எறிகணைவீச்சில் மேலும் இரு சகோதரர்கள் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட, மற்றொரு சகோதரன் கொழும்பில் தமிழ்த் துரோகக் கும்பல் ஒன்றினால் அழிக்கப்பட்டார். இவ வாறு கேணல் சங்கர் அவர்களது குடும்பம் தமிழீழ விடுதலைக்காய் இரத்தம் சிந்தி தன்னை முழுமையாக அர்ப்பணித்து நிற்கிறது.

தேச விடுதலைக்காய் தன்னால் மட்டுமன்றி, தன் குடும்பத்தாலான முழுவதையும் தந்து நிற்கும் இவ வீரமறவன் மீது சிங்கள ஊடுருவல் படை மறைந்திருந்து தாக்குதல் நடத்தி மண்ணில் சாய்த்ததானது, தமிழீழ மக்களினதும் போராளிகளினதும் நெஞ்சங்களில் என்றும் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும். இதற்கான பதிலை சிறீலங்கா வெகு விரைவில் பெற்றுக்கொள்ளும் நாட்கள் வரும்.

நன்றி: எரிமலை(செப்ரெம்பர் மாத இதழ்)