Monday, December 08, 2003

வீரவேங்கை பகீன்


அன்னலிங்கம் பகீரதன்
மண்டைதீவு
வீரமரணம்-18.05.1984


வீரவேங்கை பகீனுக்கு எப்போதும் சந்தேகம் இந்த சயனைட் வேலை செய்யுமாவென்று. தமது சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அடிக்கடி தனக்கு மேலுள்ள பொறுப்பாளரிடம் கேட்பார் "அண்ணை இது வேலை செய்யுமோ?" என்று
"அது வேலை செய்யும் போடா" என்று அந்தப் பொறுப்பாளரும் அவரை அனுப்பி வைப்பார். எத்தனை தரம் அந்தப் பொறுப்பாளர் பகீனிடம் கூறினாலும் அதில் அவருக்குத் திருப்தி யில்லை.

ஒரு நாள் நள்ளிரவு களைத்துப்போன நிலையில் பகீனின் பொறுப்பாளர் படுக்கைக்குச் செல்கிறார். அப்போதும் பகீன் அந்தப் பொறுப்பாளரிடம் வினவுகிறார் "அண்ணை, இது வேலை செய்யுமோ?" பொறுப்பாளருக்கு வந்ததே எரிச்சல் "வேலை செய்யாது போலக் கிடக்கு, உன்னிலைதான் ரெஸ்ற் பண்ண வேணும் போலக் கிடக்கு.. போய்ப் படடா" என்று அதட்டிவிட்டு அயர்கிறார் அந்தப் பொறுப்பாளர்.

ஆனால் 18.05.1984 அன்று புதிய சாதனை படைத்து மண்ணின் விடியலுக்கு மறைந்தார் வீரவேங்கை பகீன். எந்த சயனைட் மீது சந்தேகப்பட்டாரோ அந்த சயனைட் அருந்தி எதிரியிடம் பிடிபட்டு விடக்கூடாது என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் உயரிய இலட்சியத்திற்கு அமைய வீரச்சாவடைந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் சயனைட் அருந்தி களப்பலியான முதல் வீரவேங்கையாக வரலாற்றில் பதிந்து கொண்டார்.

அன்னலிங்கம் பகீரதன் இது வீரவேங்கை பகீனின் சொந்தப்பெயர். மண்டைதீவைச் சேர்ந்தவர். குடும்பச் சூழல் காரணமாக ஜேர்மனியில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். தமிழீழத் தேசியத் தலைவர் மீதும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் அளவிலா பற்றும் விசுவாசமும் மிக்க பகீன் ஜேர்மனியில் வசித்த காலத்திலேயே விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக வேலை செய்தார்.

பின்னர் இங்கிலாந்திற்குச் சென்று அங்கிருந்தவாறும் தாயக விடுதலைக்கு வலுச்சேர்த்தார். 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் தமிழீழம் சிங்களக் காடையர்களால் பற்றி எரிந்து கொண்டிருந்தபோது தாங்கிக் கொள்ள முடியாத இந்த வேங்கை பறந்து வந்தது தாயகம் நோக்கி. தாயகத்தில் தலைவனின் அணியில் இணைநது பணியாற்றியது.

1983-1984 காலகட்டம் தமிழீழ வரலாற்றில் மிகவும் நெருக்கடி மிகுந்த காலம் தமிழீழத் தேசமெங்கும் சிங்களத்தின் கொடும் படைகளும், காட்டிக் கொடுப்போரும் நிறைந்த காலகட்டம். யார் வல்லவர், நல்லவர், நயவஞ்சகர் என்பது பிரித்தறிய முடியாத காலம். ஒரு விடுதலைப் போராளி இனங்கண்டு தரமறிந்து தன் செய்கருமம் ஆற்ற வேண்டிய இக்கட்டான சூழ்நிலை. சுற்றும் சிறீலங்கா இராணுவ வல்லூறுகளுக்கு மத்தியில் தனது உந்துருளியில் சுழன்று பணியாற்றினார் பகீன்.

18.05.1984 அன்று அமைப்பின் அரசியல் பிரச்சார வேலைகளுக்காக வல்வெட்டித்துறையில் இவர் உந்துருளியில் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியை முற்றுகையிட்டது சிங்கள இராணுவம். நிராயுதபாணியாய் நின்ற நிலையிலும் நிலை கலங்காத இளவேங்கை வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் புகுந்து பாவனை செய்யத் தொடங்கினார். ஆனால் சிறீலங்கா இராணுவத்தால் இனங்காணப்பட்டு விட்டார். வெறிக்கூச்சலுடன் சூழந்து கொண்டனர் சிறீலங்காப் படைகள். தன்னைச் சித்திரவதை செய்து அமைப்பின் இரகசியங்களைக் கறந்து விடக் கூடாது, அதனால் விடுதலைக்குக் கேடாக தான் அமைந்து விடக்கூடாது என்ற கடுகதியில் சயனைட் அருந்தி ஈழத்தாயின் மடியை முதன் முதல் சயனைட் அருந்தி முத்தமிடுகிறார்.

"இந்த சயனைட் எங்கள் கழுத்தில் தொங்கும் வரைக்கும் உலகில் எந்த சக்திக்கும் அஞ்சமாட்டோம்" என்று யாழ் மீட்ட வீரன் கேணல் கிட்டு ஒரு பேட்டியின்போது குறிப்பிட்டிருந்தார். ஆம் எங்கள் பகீனும் இன்று விடியலின் துருவ நட்சத்திரங்களில் ஒன்றாய் அமைந்து பதினேழு வருடங்கள் கடந்து போயின. எனினும் பல ஆயிரம் பகீன்களின் பயணங்கள் இலட்சியத்தை நோக்கி நகருகின்றன.

Friday, December 05, 2003

லெப்.கேணல் கிறேசி

கணபதிப்பிள்ளை கோபாலபிள்ளை
இல.187, ஆறுமுகம் வீதி, வட்டக்கச்சி,
கிளிநொச்சி
19.08.1960 - 19.04.1991

மருதம், முல்லை, பாலை, நெய்தல், குறிஞ்சி எனப்படுகின்ற ஐவகை நிலங்களிலே மருத நிலம் மிக நிறைந்த பூமி கிளிநொச்சி. கிளிநொச்சியின் தலைசிறந்த விவசாயக் கிராமங்களில் ஒன்றுதான் வட்டக்கச்சி. வட்டக்கச்சி மண்ணில் கணபதிப்பிள்ளை தம்பதியருக்கு 19.08.1960இல் ஆண்மகவு ஒன்று பிறந்தது. கோபாலபிள்ளை என்ற இயற்பெயரோடு அவதரித்த குழந்தையே கிறேசி என்ற பெயரோடு ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிராக, தனது தாய் நிலத்தின் விடியலுக்காக செங்களமாடியது.

லெப்.கேணல் கிறேசி, தமிழீழ தேசத்தில் எங்கெல்லாம் ஆக்கிரமிப்பு இராணுவங்கள் நிலைகொண்டுள்ளதோ அங்கெல்லாம் அவரது சுடுகலனும் கனன்றிருக்கும். களமுனைகளில் தொடர்ச்சியாக ஓய்வு ள் ஒளிச்சலின்றி சுழன்றடித்த வீரன் அவர். செய்வோம் அல்லது செத்து மடிவோம் என்ற வசனத்தை அடிக்கடி சொல்பவர், அதனைச் செயலிலும் செய்து காட்டியவர். எந்த நேரமும் இயக்கத்தின் நலனையே சிந்தித்து செயலாற்றிய மண்ணின் மைந்தன் அவர். கிளிநொச்சிப் பிரதேசத்தில் எண்பதுகளின் நடுப்பகுதி தொடங்கி, தொண்ணுhறுகளின் ஆரம்பம் வரைக்கும் சிறீலங்கா இராணுவத்திற்கு எதிரான அனைத்துத் தாக்குதல்களிலும் காத்திரமான பங்கை லெப். கேணல் கிறேசி வகித்துள்ளார்.

1987ஆம் ஆண்டு யூலை மாதம் வட மராட்சியில் நெல்லியடி முகாம் தகர்ப்பில் அணியொன்றின் பொறுப்பாளனாகக் கலந்து கொண்டார். அதன் பின்னர் லெப்.கேணல் கிறேசி அவர்கள் கிளிநொச்சி மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்திய இராணுவக் காலத்தில் கிளிநொச்சி நகரில் கூடாரமிட்டிருந்த இந்தியப்படைகளுக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார். கிளிநொச்சியின் எல்லாமூலையிலும் இந்திய இராணுவம் தாக்கப்பட்டது. கூலிகள் அடித்து விரட்டப்பட்டனர். களமுனைகளில் நேருக்குநேர் கிறேசியினதும் அவரது அணியினரதும் தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாத ஈ.பி.ஆர்.எல்.எவ துரோகிகள் இவரது தந்தையாரான கணபதிபிள்ளை அவர்களை சுட்டுக்கொன்றனர். தந்தையாரின் இறுதிச்சடங்கிற்கு தனயன் வருவான் அப்போது வேட்டையாடுவோம் என ராஜீவின் இராணுவமும் துரோகக் கும்பலும் காத்திருந்ததாம். தனது விடுதலைப் பயணத்தில் எண்ணிறைந்த இடர்களையும், இழப்புக்களையும் சந்தித்த வேளையிலும் சலியாது கொண்ட கொள்கையில் உறுதி தளராத உரம் படைத்த நெஞ்சம் லெப்.கேணல் கிறேசியினுடையது.

இரண்டாம் கட்ட ஈழப் போர் ஆரம்பமாகிய வேளையில் மண்டைதீவுப் பகுதியூடாக முன்னேறி வந்த இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட எதிர்ச்சமரின் போது விழுப்புண்ணடைந்தார். அவ் வேளையில் விழுப்புண்ணடைந்து துடித்ததை விட இச்சம்பவத்தில் வீரச்சாவடைந்த சக போராளிகளின் நினைவில் துடித்தார்.

19.04.1991 அன்று மன்னர் பரப்புக்கடந்தான் பகுதியூடாக சிங்கள இராணுவம் முன்னேற முற்பட்டது. சிங்களத்தின் அம்முன்னேற்ற முயற்சியை முறியடிக்கும் நோக்கில் சென்ற விடுதலைப் புலிகளின் அணிகளுக்கு கட்டளைத் தளபதியாக களமுனையில் பணியாற்றிக் கொண்டிருந்தார் கிறேசி. எதிரியிடம் ஒரு அங்குல நிலம்தானும் பறி போய்விடக்கூடாது என்ற உறுதியோடு தனது அணியினரை வழிநடத்தி சமராடிக் கொண்டி ருந்த வேளையில் எதிரி ஏவிய குண்டொன்றினால் கிறேசி இந்த மண்ணைவிட்டுப் பிரிந்தார்.

1990.05.25ஆம் திகதி லெப்.கேணல் கிறேசி அவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணம் நடைபெற்று ஒரு வருடம்கூட நிறைவடையாத நிலையில் களமுனையின் முன்னிலையில் நின்று களமாடி தனது குடும்பம் என்ற சிறுவட்டத்தில் நில்லாது, தமிழீழத் தாயகம் என்ற பெரும் குடும்பத்தின் விடியலுக்காய் விழுதாகிப் போனார் லெப்.கேணல் கிறேசி. இவர் அணையாத தீபமாகிய பத்தாம் ஆண்டு நினைவில் நினைந்துறைவோம்.