Sunday, May 15, 2005

கப்டன் ஈழமாறன்

இராமையா தினேஷ்
மாதகல் - யாழ்ப்பாணம்

05.05.1973-11.11.1993
பூநகரித் தளம் மீதான தவளை நடவடிக்கையில் வீரச்சாவு


"டேய் மச்சான் என்னைக் கொண்டுபோய் வீடுறா... என்ர பெடியள் என்ன மாதிரியோ... விடடா மச்சான்..."

வைத்திய சாலையின் கட்டிலில் இருந்தபடி, காலில் குத்திய திருக்கை முள்ளைப் பற்றிப் பெரிதும் கவலைப் படாதவனாய், தன் அருகில் இருந்த போராளியிடம் கூறிக் கொண்டிருந்தான் "ஈழமாறன்" அவனின் நச்சரிப்பைத் தாங்காது வைத்தியரிடம் அவர்களுக்கு, அவரின் வார்த்தைகள் ஏமாற்றத்தையே கொடுக்கும்.

"விசம் உடனே இறங்காது தம்பி. இதால ஆக்கள் செத்துப்போயிருக்கினம். ஒரு இரண்டு நாள் பொறும்! பிறகு போகலாம்." என்ப் புன்னகை முகத்தில் தவழவிட்டவாறு சொல்வதை, ஏமாற்றத்துடன் பார்ப்பான் அவன். அதனையும் மீறிப் பொது மகன் ஒருவனின் சைக்கிளில் ஏறி பயிற்சி நடக்கும் இடம் வந்து விட்டான். பொறுப்பாளரின் கண்டிப்பான பார்வைதனைக் கண்டு, முகத்தைத் தொங்க விட்டவாறு மீண்டும் வைத்திய சாலைக்கு செல்ல நேரிட்டது.

கால் நோ மாறும் முன்னரே மூன்று நாட்களின் பின்னர் பயிற்சிப் பாசறை வந்து, தன் பிள்ளைகளுடன் பயிற்சிகளை மேற் கொண்டான். இவ்வாறு மனவியல்பைக் கொண்டவன் இவன். ஆம்...!

இப் பயிற்சியானது சிங்களப் பேய்களின் பற்களைப் பிடுங்குவதற்காய்.... ஆணவத்தைச் சிதைப்பதற்காய்.... தமிழ் மக்களின் உடல்கள் கடலுடன் கலப்பதை நிறுத்தவதற்காய்... சுமூகமான ஒரு பாதையைத் திறப்பதற்காய்...

பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல்களை மேற் கொள்வதற்காய், ஆண் பெண் போராளிகள் அனைவருமே கடல், தரையெனப் பாராது கடும் பயிற்சிதனை மேற் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவனாய் குழுவின் தலைவனாக ஈழமாறனும்...

மகிழ்வுடன் கடல் கரைதனைத் தழுவி மீளும்-ஆழத்துடன் அழகும் கொண்ட- கடற்கரைதனை அணையாக பெற்ற மாதகல்தனை தனத தாயாகக் கொண்டவன். கடலன்னையின் அணைப்பிலே திளைத்தவன். சுப்பிரமணியம், நாகேஸ்வரி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக 05.05.1973 இல் இம் மண்ணில் உதித்தான். ஏழு இரத்த உறவுகளையும் இவன் தனதாக்கிக் கொண்டான். தயக தாகத்தை தனது உயிராகவும் கொண்டான். எப்பொழுதுமே மெல்லிய புன்னகை தன்னை முகத்தில் பரவ விட்டிருப்பான். துடிப்புடன் வளையவருவான். பார்வையினாலே எல்லோர் மனதையும் கவர்ந்து விடுவான். "வெளிநாடு வா" என மூத்த உடன் பிறப்பு அழைத்துக் கூட இவன் தனது உறுதியைத் தளரவிடவில்லை. "அண்ணா நீ தாய்க்காக உழைத்துவிடு, நான் தாய் நாட்டுக்காக உழைக்கப் போகிறேன்" எனக் கூறித் தனது பணியைத் தொடர்ந்தான்.

ஆரம்ப கல்விதனை மாதகல் "சென். ஜோசப் பாடசாலை"யில் பயின்ற பின்னர், 1984ஆம் ஆண்டு தெல்லிப்பழை 'மகாஜனாக் கல்லூரி' யில் தனது கல்வியைத் தொடர்ந்தான். படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டுத் துறையிலும் திறமையாச் செயற்பட்டு கோட்ட மாவட்ட ரீதியில் பல பரிசில்களைப் பெற்று தனது படசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்தான்.

இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பால் மனமுடைந்த இவன் தனது சேவை இந் நாட்டுக்கு உடனடியாகத் தேவையெனப் புரிந்து 1990 இல் தன்னை முழுமையாக இயக்கத்தில் இணைத்துக் கொண்டான். பயிற்சிக் காலத்தின் போது திறமையாகச் செயற்பட்டு, அனைவரினதும் பாராட்டுக்களைடும் பெற்றான். பயிற்சி தவிரந்த ஏனைய நேரங்களில் சக போராளிகளை அருகில் இருந்தி விடுதலைப் போராட்டங்களைப் பற்றி விளங்கவைப்பான். பொறுப்பாளரின் வருகையை அறிந்தவுடனேயே தனது குட்டிப் பிரசங்கத்தை நிறுத்திவிடவான். ஆகையினால் மறைந்திருந்து இவனது பேச்சைக் கேட்டு ரசிப்பார்கள்.

பயிற்சி முடிந்த வேளை வரலாற்று முக்கியத்துவம் பெற்ற "யாழ். கோட்டைச் சண்டையில்" ஈடுபடும் வாய்ப்புக் கிட்டியது. திறமையாகச் செயற்பட்டதன் காரணமாக ஏழுபேருக்கு பெறுப்பாளனாக நியமிக்கப் பட்டவுடனேயே காரைநகர் சண்டைக் களம் அவனை அழைத்தது. அதன் பின்னர் மன்னார் பரப்புக் கடந்தான் நோக்கி முன்னேறிய இராணுவத்தை எதிர் கொள்ளவென இவனது அணிக்கு அழைப்பு வந்தது. கடும்சண்டை ஆரம்பமானது. புலிகளின் தாக்குதலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாத இராணுவம் பின்வாங்கியது.

மீண்டும் சண்டை மூள, ஒரு தோழனை இழக்க நேரிட்டது. மனம் கொதித்த தினேஷ் கடுமையான தாக்குதல் தொடுத்தவாறு முன்னேறினான்... எதிரியின் தாக்குதலால் காலிலும், கையிலும் காயமடைந்த இவனை தக்க முறையில் வைத்தியப் பிரிவுக்கு அனுப்பினார்கள் போராளிகள்.

காயம் மாறி முகாம் வந்தவேளை அவனுக்கு எல். எம். ஜி. கனரக ஆயுதம் வழங்கப்பட்டது. அதை எந்த நேரமும் பளிச்சென்று வைத்திருப்பான். தனது வெள்ளைப் பற்களைப் போல...

இவனுடன் பழகிய நாட்களை எடைபோட்டுப் பார்க்கிறேன்;. அவை மறக்க முடியாதவை. மனதில் இருந்து அகற்ற முடியாமல் ஆழத்தில் கிடந்து என்னுடன் மீட்டல் வகுப்புக்கள் நடாத்தும். அன்றொருநாள், பலாலியைச் சுற்றியுள்ள காவலரண்களில் ஒரு பகுதியில் எமது அணி நிற்கும் வேளை குறிப்பிட்ட நேரமில்லாமல், தூங்கி விழித்தவுடனேயே எதிரி தாக்குதலை ஆரம்பித்து முடிப்பான். அவ் வேளையில் கன்னத்தை உராய்ந்தபடி, காதைச் 'செவிடுபட வைக்கும்' அதிர்வோடு அருகினில் ஷெல் வெடிக்கும். நாம் அனைவரும் பாதுகாப்பினை எடுத்து நிற்கும் போது, தினேஷ் மட்டும் தலையை நிமிர்த்தி நிற்பான்.

"தலை போகப் போகுது பதியடா தலையை" எனக் கூறினால் "தலையை எல்லோரும் உள்ளுக்கை வைத்திருந்தால் அவன் வந்து தட்டி எழும்பு என்று தலையில் பிடித்து தூக்குவான்" என்பான். இக் கட்டான நேரங்களிற் கூட நகைச்சுவை உணர்வுடன் உரையாடுவான். இது அவனது சுபாவம். பலாலி என்றாலே பழவகைத் தோட்டம் கண் முன்னாலே தெரியும்.... இன்றைக்கு எல்லாத்தையுமே எதிரி சிதைத்து நிற்கிறான்.... எமக்கு பசியெடுக்கும் நேரமெல்லாம் பதுங்கி முன்னே சென்று, பழங்கள் பறித்து வந்து உண்பது வழக்கம். கூடவே தினேஷ் வருவான். ஒருநாள் நாம் முன்செல்ல ஆயத்தமான வேளை தினேஷைகட காணவில்லை. "பரவாயில்லை" நாம் போய் வருவோம் எனக் கூறி எமது அணி முன்னேறியது. பழம் பிடுங்குவற்காய்.

மரத்தில் ஏறியாகி விட்டது. பழங்களைப் பறித்து காற்சட்டைப் பையினுள் போட்டுக் கொண்டிருந்த வேளை... சிங்கள உச்சரிப்புக் கேட்டது. மிக அருகில் எதிரி இருப்பதினாலும், அவன் அடிக்கடி வந்து செல்லும் இடமானதாலும், நாம் மெதுவாக சத்தம் செய்யாது மரத்திலிருந்த இறங்கிப் பதுங்கி நின்றோம்.... வரவரச் சிங்கள உச்சரிப்பு மிக அருகிலேயே கேட்க ஆரம்பித்தது.... இந்த வேளையில் சண்டை பிடிப்பத எமக்கு இழப்பைக் கூடுதலாகத் தரும் மனதிற் கொண்டு, மிக வேகமாகப் பின்வாங்கினோம். எமது காவலரணில் நிலை எடுத்த நின்று கொண்ட தாக்குதலுக்குத் தயாரானோம். தினேசும் லெப்டினன்ட் சித்துவும் சரித்தபடி... மெது செருப்புக்களை எடுத்துக் கொண்டு... சிங்களம் கதைத்து... எம்மை வெட்கப்பட வைத்துவிட்டார்கள். நிலமையை ஒரு நொடியில் உணர்ந்து கொள்ள அசடு வழிந்தபடி அவர்களுடன் சேர்ந்த சிரித்தோம். இப்படி இவனது குறும்புகளைக் கூறிக் கொண்டே போகலாம்.

ஆறுமாதப் பிணைப்பால் ஒன்று பட்டு எமத பணி தொடர்ந்த வேளையில், வேறிடம் வரும்படி அழைப்பு வந்தது... எமது சோகங்களைப் பகிர்ந்து கொண்டு அவனுக்கு விடை கொடுத்தோம். கரும்புள்ளியாக அவன் மறையும்வரை கைகளை அசைத்த விடை கொடுத்தோம். எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து இலட்சியம் என்னும் பிணைப்பால் ஒன்றுபட்ட எங்களது பாசங்களை வார்த்தைகளால் வரைந்து விட முடியாத.

பிரிந்து சென்ற அவன் "மின்னல்" தாக்குதலில் ஏ.கே. எல்.எம்.ஜி. கனரக ஆயுதத்திற்கு உதவி இயக்குனராகச் சென்றான். மிகவும் பலம் வாய்ந்த ஒன்றாகச் சண்டை நடைபெற்றது. எதிரி தனத முப்படைகளினதும் உதவியுடன் மூர்க்கத் தனமாகத் தாக்கினான்.... ஆனால் எம்மிடமோ அசைத்துக் குலைக்க முடியாத உறுதி பக்க பலமாக இருந்தது.

இங்கும் அவனது தலை வீரத்தின் வடு ஒன்றினை ஏற்றுக் கொள்கின்றது... அவனது உடலில் காணப்படும் ஒவ்வொரு தழும்பும் ஒவ்வொரு சண்டைதனைப் பறை சாற்றி நிற்கும்... அவனது குருதியை எத்தனை முறை இந்த மண்மாதா ஏந்தியிருப்பாள்... நினைத்துப் பார்க்கிறேன்... காயம் ஆறிய பின்னர் இவனுக்கு மருத்துவ வீடு கடமை செய்யெனக் கூறியது... அன்பாகவும், பண்பாகவும் ஆதேவேளை வேதனையுடன் முனகும் போராளிகளுக்குத் தாய்குத் தாயாகவும் நின்று அரவணைப்பினையும் வழங்கியவன். சில காலங்களின் பின்னர் மீண்டும் அவனுடன் சேரும் வாய்ப்புக் கிட்டியது.

பசறையில் பயிற்சி வழங்கப்பட்டது... மகிழ்வுடன் பொழுதுகளைக் கழித்தோம். உடலலுப்பின் காரணமாக கடமை நேரத்தில் சிறிது கண்ணயர்ந்து விட்டான் தினேஷ். இவனுடன் யசி என்ற போராளியும் தான்...! "நித்திரை எமக்கு எதிரி. அதனால ஏறுங்கோ தென்னை மரத்தில" பொறுப்பாளரின் கண்டிப்பான குரல். இருவரும் மரத்தில் ஏறிவிட்டனர். ஆனால் அங்கும் அவனது குறும்புகள் நின்று விடவில்லை. சிரித்தபடியே மரத்திலிருந்து இளநீர் குடித்தான். கீழே நின்றவர்களுக்கும் போட்டான். அவனது இச் செயல்களால் அவனிடம் கோபம் பறந்து போக, இறக்கப்பட்டு பயிற்சிக்கு அனுப்பப்பட்டான்.

இவ்வாறு தான் செய்யும் சிறு தவறுகளாயினும் பெறும் தண்டனைகளை மகிழ்வுடன் ஏற்றுச் செய்யும் நிலை, அவனுக்கே உரியது தான். எமது கொட்டில் கலகலப்பாக இருக்கிறதென்றால் அங்கு தினேஷ் இருப்பது எல்லோருக்கும் தெரிந்துவிடும்.

நாம் அனைவரும் செல்லமாகச் "சம்மாட்டி" என்றுதான் அழைப்போம். அதற்கு ஒருநாளும் கோபித்தது கிடையாது. மெல்லிய புன் சிரிப்புடன் சென்றுவிடுவான். அராலித் துறையருகே இவனது அணி நின்றபோது, பிறந்த மண் எதிரியால் சூழப்படுகிறது. கொதித்தெழுந்த அவன்... தனது கடைசித் தங்கை மேகலாவை எண்ணி மிகவும் துயரமுற்றான். வீட்டில் தாயிடத்தும், கடைசித் தாங்கையிடமும் தான் இவனது பாசப்பிணைப்பு இறுகியிருந்தது. "என்ர கடைசித் தங்கச்சிக்கு ஒண்டு நடந்தா என்ர உயிரையே விட்டிடுவனடா, அவள் தான்ரா என்ர உயிர்" என்று தங்கை மீதுள்ள பாசத்தின் ஆழத்தை தனது சக நண்பனிடம் கூறி வைப்பான். அடுத்து மக்களின் போக்குவரத்திற்காகப் பயன்பட்ட கொம்படிப் பாதைதனை மூடிவிடும் நோக்கில் மக்களின் உணர்வைச் சிதைக்கும் நோக்கிலும் -எதிரியானவன் "பலவேகய - 2" எனப் பெயர் சூட்டப்பட்ட தாக்குதல் ஒன்றை மேற்கொண்டான். அங்கும் முளைத்தான் தினேஷ். இரண்டாம் நாட் சமரில் அவன் அடித்த தோட்டாக்களின் எண்ணிக்கை ஐந்து தான். "ஏன்ரா மச்சான் அடிக்கையில்லை?" எனக் கேட்ட நண்பனிடம் "இயக்கம் படுற கஷ்டத்தில கண்டமாதிரி அடிக்கக் கூடாது... ஒவ்வொரு தோட்டாவும் வாங்க இயக்கம் எவ்வளவு கஷ்ரப்படுகுது தெரியுமா?" என, தனது சொற்பொழிவைத் தொடங்கி விட்டான்.

ஆம்.... எதிரியானவன் சம்பளத்திற்காக வருபவன். அரசாங்கம் கடன்பட்டு வாங்கும் ஆயுதத்தை அவன் கண்டபடி அடிப்பான். கிலி கொண்டு அடிப்பான். ஏனென்றால் அவனுக்கு தன்னுயிர் முக்கியம். விடுதலைப் புலிகள் அப்படியல்ல. சண்டை நேரத்தில் கூட நிதானமாகச் செயற்பட்டு எவ்வளவு மீதப்படுத்த முடியுமோ அவ்வளவு மீதப்படுத்தி, எவ்வளவு அவனிடம் எடுக்க முடியுமோ அவ்வளவையும் எடுத்துக் கொண்டு வருவார்கள். "இலட்சியம் ஒன்றுதான் எங்களின் உயிர்..... அதற்காக நம் உயிர் போவது கூட எமக்குக் கவலையைத் தராது...."

சண்டை முடிந்தது சோகங்களை மனதில் தாங்கியவாறு சக தோழர்களின் சில உடல்களைத் தோழில் சுமந்தவாறும் மீளுகின்றோம்.

பழைய முகாம் களை கட்டுகிறது. "இனிப்புச் செய்வோமடா". ஒரு நண்பன் கேட்க, "ஓம் நான் நல்லாச் செய்வேன். தேவையானவற்றைக் கொண்டு வாங்கோ" எனக் கூறியபடி அடுப்பு வேலைக்கு அயத்தமானான் தினேஷ். சீனி, தேங்காய், மா வெனச் சேகரிக்கப்பட்டு வேலைகள் தொடங்கின. அடுப்பருகே இருந்த சட்டியில் பாணியை கிளறி விட்டுக் கொண்டிருந்தான் அவன். காதைச் செவிடுபடுத்துபடியாக எங்கிருந்தோ ஒர் ஷெல் வந்து விழுந்தது. போட்டதை அப்படியே போட்டுவிட்டு பாதுகாப்புத் தேடிய பின்னர் மீண்டு வந்து பார்த்தபோது, சட்டியில் இனிப்பு கறுப்பாக இருந்தது. அனைவரும் சேர்ந்து அதனைக் கேலிபண்ண ஆரம்பித்து விட்டார்கள்;.

"டேய் என்கென்ன செய்யத் தெரியாதோ...? கொண்டுவா, உங்களுக்கு இனிப்பு தந்தால் சரிதானே...?" மீண்டும் வேலைகள் ஆரம்பமாக சுவையான இனிப்பினை எல்லோருக்கும் வழங்கினான். சமையலிலும் தான் சளைத்தவன் அல்ல என்பதையும் தன்னால் செய்யமுடியும் என்ற அவனின் திடத்தையும் எண்ணிப் பார்க்கிறேன். இன்றும் அவன் தன் கையால் வழங்கிய இனிப்பின் சுவை என் நாவில் தித்திக்கிறது. அவனை இழந்த வேதனை நெஞ்சின் ஓரத்தே முள்ளாய் நெருடுகின்றது.

அன்று ஒரு நாள், கடும் பயிற்சிக்குப் பின்னர் பல மாத வேவுப் பணியின் பின்னர் - தாக்குதல்த் திட்டம் தீட்டப்படுகின்றது. 10.11.93 நள்ளிரவு புலிவீரர்களின் அணி புயலெனப் பாய்கிறது. சிதறி ஓடும் சிங்களப் படையதனின் சிரசில் வெடி பாய்கிறது. கடலில் பாயும் கோழையவன், கடற்புலிகளால் மடிகிறான். உதவிக்கு வந்த விமானம் குண்டுகளை எங்கே தட்டுவது என்று தெரியாது கடலில் கொட்டுகிறது. விமான எதிர்ப்பு ஒருபுறம் முழங்க கரும்பச்சை பேய்களைத் தரையிலே எதிர்க்க, நீல ஓநாய்களைக் குருதிக் கடலிலே சிதைக்க, எங்கும் புகைமயமாக இரத்தவாறு நிலத்திலே ஓடிக் கடலில் கலக்கிறது..... தமிழ் மக்களின் குருதியைக் கலந்திட வைத்த கறுப்பு நாய்களின் உடல்கள் பல மிதந்து சென்றன. அதே உப்பாற்றின் மீது...

சடுகுடு விளையாடுவதைப் போல் மிக அருகிலேயே நெருக்கமாக நின்று போரிடும் தன்மை அங்கு காணப்பட்டது. செய்வதறியாது திகைத்த எதிரி கடலில் பாய்ந்து நிற்கவும் தொடங்கினான். அங்கும் அவனுக்கு மரணப்பாடை கட்டப்பட்டது.

"அண்ணை குறிப்பிட்ட இடத்தைப் பிடிச்சுப்போட்டுத்தான் உங்களுக்குத் தொடர்பு எடுப்பன். இது சத்தியம்." உறுதியாகத் தளபதியின் கையில் அடித்துவிட்டுத் தனது அணியுடன் மின்னலென உள்ளே நுழைகிறான்.

குறிப்பிட்ட நேரம் தாண்டியும் அவனது அவனது தொடர்பு கிடைக்காதவிடத்து சக நண்பன் தொடர்பினை எடுக்கிறான். அங்கே... அங்கே... கடைசியாத் தனது உடலில் உள்ள குருதி அனைத்தையும் தமிழ் மாதாவுக்கு அர்ப்பணமாக்கிவிட்டு, ப+நகரி மண்மீது வீழ்ந்து கிடக்கிறான் வீரமறவன்.... அவனது தொலைத் தொடர்பு சாதனம் மட்டும் தொடர்ந்து அலறிக் கொண்டிருந்தது.

"அண்ணை எனக்கு தந்ததைப் பிடிக்காமல் திரும்பி வரமாட்டன்" அவனது உறுதி கலந்த குரல் காற்றினிடை ஒலிக்கின்றது.

அன்றொருநாள் எனது டயறியில், "என்ர நினைவாக இதை எழுதிறன் மச்சான். நான் செத்தாலும் இதை ஞாபகமாக வைத்திரு என்ன?" என்ற படி எழுத ஆரம்பித்தான்.

"நாம் அனைவருமே பல கொடியில் பூத்த மலர்கள். காலம் இட்ட கட்டளையால் எதிர்த்துப் போராட மாலையைச் சேர்ந்தவர்கள். பிரிவு எம்மை ஆட்கொண்டாலும் எமது தலைவனின் இலட்சியப் பாதை உறுதி தளராது"

இப்படிக்கு
தினேஷ்

அவனது இவ்வரிகள் என் இதயத்தில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.

"ஓமடா தினேஷ், இலட்சியப் பாதை எண்டைக்குமே உறுதி தளராது.!"

- த. பாரதி -

Friday, May 13, 2005

மேஜர் சோதியா

மைக்கேல் வசந்தி
கரவெட்டி, யாழ்பாணம்.
மகளீர் படையணின் முதற் தாக்குதற் தளபதி


பச்சைப் பசேல் என்ற குளிர்மைக்காடு அது. அதுதான் எங்கள் மணலாறு. பசுமை மரங்களின் நடுவே நாம் போராளிகளாக நிமிர்ந்த நாட்கள், போராளிகள் என்ற நிமிர்வு ஒருபுறம். அண்ணனுடன் இருக்கின்றோம் என்ற... தலைக்கிரீடம் ஒருபுறம்.. நிச்சயமாக... நிச்சயமாக என்னால் எம்மால் மறக்க முடியாத நாட்களாகிவிட்டன.

இந்திய இராணுவக் காலப்பகுதி, ஓ! அதுதான் மேஜர் சோதியாக்காவை நாம் கண்டு பழகி, வழிநடந்த, நேசித்த காலம்.

நெடிதுயர்ந்த பெண், வெள்ளையான நிமிர் தோற்றமான பெண். பல்வரிசை முழுமையாகக் காட்டிச் சிரிக்கும் மனந்திறந்த சிரிப்புடன் எம்மைப் பார்வையிட்ட அந்த இனியவர் அப்போ தலைமை மருத்துவராகக் காட்டில் வலம் வந்தவர்.

சோதியாக்கா வயித்துக்குத்து... சோதியக்கா கால்நோ... சோதியாக்கா காய்ச்சல்... சோதியாக்கா.... சோதியாக்கா.

ஓம் எப்ப வருத்தம் வந்தாலும் அவவைக் கூப்பிட நேரம் காலம் இல்லை. சாப்பிட்டாலும் சரி, இயற்கைக் கடனை கழிக்கச் சென்றாலும் பின்னுக்கும் முன்னுக்கும் நாய்குட்டிகள் போல் நாம் இழுபட்டுத்திரிந்த அந்தக் காலம். கடமை நேரங்கள் எங்களது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிய சோதியாக்கா. நெல்லியடி ஈன்றெடுத்த புதல்வி. கல்வியும் கலையும் கற்றுத்தேர்ந்த உயர் கல்வி மாணவி.

விடியல் - அதுதான் எம்மை பட்டைதீட்டி வைரங்கள் ஆக்கிய பட்டறை, இல்லை பாசறை எம்மை வளர்த்த பாசத்தாய்ப்பூமி என்பேன்.

அந்த இனிய கணப்பொழுதுகள் யாவும் இனிமையும் இளமையும் நிறைந்தவை. எங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்ற எழுந்த நாட்கள்.

காடு - ஆம் காடு விரிந்து பரந்து எங்கும் வியாபித்திருந்தது. எப்பவும் ஒரு குளிர்மை பயம் தரும் அமைதி. குருவிகள்கூட எம்மைக்கண்ட பின் சத்தம் குறைத்தே கீச்சிட்டனவோ? என எண்ணத்தோன்றும் அமைதி. மென்குரல்களில் உரசிக்கொள்ளும் எம் உரையாடல்கள்.

எங்கும் தேடல், எதிலும் தேடல். காட்டில் உள்ள அனைத்து வனத்தையும் சிதைக்காமல் சிக்கனமாக முகாம் அமைத்தோம். சிங்காரித்துப் பார்த்தோம். போர் முறைக் கல்வியும் புதிய பயிற்சிகளும் தலைவர் அவர்களால் நேரடிப்பார்வையில் நிறைவேற்றிய காலம்.

சமையல் தொடக்கம் போர்ப்பயிற்சி வரையான பெண்களின் தனி நிர்வாகத் திறமை வளர்த்தெடுக்கப்பட்ட முதல் படியும் அங்கேதான். அதில் சிறப்பாக எல்லாப் போராளிகளாலும் கீழ்ப்படிவுடனும், அன்புடனும் நோக்கப்பட்ட ஒரே ஒரு தலைவி மேஜர் சோதியாக்கா.

உணவுத் தேவைக்காகவும் வேறுதேவைகள் கருதியும் மைல் கணக்கா, நாள் கணக்கா, அளவு தண்ணி, அளவு சாப்பாட்டுடன் நடை... நடை. தொலைதூரம்வரை நடை. வானம் தெரியும் வெட்டைகளைக் கடக்கும்போது இரவு எம்முடன் கலந்துவிடும். தொடுவானம் வரை தெரியும் நட்சத்திரங்கள் எமக்கு உற்சாகமூட்டும். காலைப் பணியும், உடலில் எமனைத்தின்ற களைப்பும் சேர்ந்திருக்கும். ஆனால் நொடிப்பொழுதில் கிசு கிசுத்து நாம் அடித்த பம்பலில் யாவும் தூசாகிப்போகும். அன்று எம்முடன் இருந்து குருவியுடன் பாடிய, மரத்துடன் பேசிய தோழியர் பலர் இன்றில்லை. நெஞ்சுகனத்தாலும் தொடர்கின்றேன்.

கனத்த இரவுகளிலும் நுளம்புக் கடியுடன் எப்பவுமே, ஏன் இப்பவுமே அது எங்களுடன் தொடர்கின்றது. சோதியாக்கா யார் யார் எப்படி எவ்விதம் கவனிக்கவேண்டும். அவர்கள் உடல்நிலை எப்படியென்று கவனித்துத் தந்த பிஸ்கற், குளுக்கோஸ் உணவாக மாறிவிடும் அங்கே. அவரது பரிவும், இரக்கமும் எம்மைக் கவனித்து அனுப்பும் விதமும் எனக்கு என் அம்மாவை ஞாபகமூட்டும்.

கண்டிப்பும் கறாரும் கொண்ட கட்டளையை அவர் தந்த போதெல்லாம் எனக்கு என் அப்பா ஞாபகம் வரும்.

கல கல என பஜார் அடித்து சிரித்த வேளை என் பள்ளித் தோழிகள் நினைவில் வந்தனர்.

கள்ளம் செய்துவிட்டு அவர்முன் போகும்போது கிறிஸ்தவ பாதிரியாரை ஞாபகம் ஊட்டும் சோதியாக்கா... அதுதான் எங்கள் சோதியாக்கா.

பச்சை சேட், பச்சை ஜீன்ஸ் அதுதான் அவரது விருப்பமான உடையும், ராசியான உடையும் கூட. பச்சை உடை போட்டால் நிச்சயமாகத் தெரியும் அண்ணையைச் சந்திக்கப் போறா என்று. அண்ணையிடம் பேச்சுவாங்காத உடுப்போ என்று யாரும் கேட்க. ~கொல் எனச் சிரித்தவர்களை கலைத்து குட்டும் விழும். அந்த குட்டுக்கள் இனி...

காட்டில் சகல வேலைகள், முகாம் அமைத்தல், கொம்பாசில் நகர்த்தல், கம்பால் பயிற்சி என ஆளுமையுடன் வளர்ந்து வந்தோம். யாவற்றையும் திட்டமிட்டு சகல போராளிகளையும் விளக்கிக் கொண்டு, அவர்களது ஆலோசனைகளையும் கேட்கும் பண்பும், வேலைகளைப் பங்கிடும் நிர்வாகத் திறனும், மனிதர்களை கையாளும் திறமையும் மிக்க தலைவியாக வளர்ந்து வந்தவர். மற்றவர்கள் ஒத்துப்போகும் விருப்பை எம்மில் வளர்த்துச் சென்றவர்.

உழைத்து உழைத்து தேய்ந்த நிலவு ஒரேயடியாக மறையும் என்று யார் கண்டார்.. எமக்கெல்லாம் ~நையிற்றிங் கேலான அவர் நோயால் அவதியுற்றபோது துடித்துப் போனோம்.

அந்த மணலாற்றின் மடியில் புதையுண்டு போக அவர் விரும்பியும் அன்னை, தந்தை காண உடல் சுமந்து நெல்லியடி சென்றோம். ஊர் கூடி அழுதது. ஊர் கூடி வணங்கியது. மரணச்சடங்கில் மத வேறுபாடின்றி போராளியின் வித்துடலை வணங்க பல்லாயிரம் மக்கள் கண் பூத்;து அழுதபடி அஞ்சலித்த காட்சி, நாம் நிமிர்ந்தோம்.

வளர்வோம், நிமிர்வோம் என மீண்டும் புது வேகத்துடன் காடு வந்தோம். இன்று களத்தில் புகுந்து விளையாடும் வீராங்கனைகளையும் பெண் தளபதிகளின் நிமிர்வையும் கண்ட பின்பே ஆறினோம்.

சோதியாக்கா! நாம் படை கொண்டு நடத்தும் அழகைப் பாருங்கள். நாம் நிர்வாகம் செய்யும் நேர்த்தியைப் பாருங்கள்.

உங்கள் பெயரை இதயத்தில் ஏந்தி, உங்கள் பெயரைச் சுமந்த படையணியைச் பாருங்கள்.

- விசாலி -

Thursday, May 12, 2005

லெப்.கேணல் நவம் - டடி

செல்லப்பெருமாள் அருமைராசா
கொக்குத்தொடுவாய் முல்லை
2.2.1961-15.5.1989
விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதி


இராணுவப் பரிசோதனை ஒன்றின் போது கையை இழந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றான். ஒரு போராளி. வருவோர் போவோர் எல்லாம் அவனுக்கு ஆறுதலும், அனுதாபமும் தெரிவிக்கின்றனர். அது அவனுக்கு சினத்தை மூட்டுகின்றது. இறுதியாக அவனது தாய் வருகின்றாள். நீ போராடியது போதும். இனி உனக்கு ஒரு கையில்லை வீட்டிலேயே இரு. பாசத்தின் மேலீட்டால் இப்படியோரு கோரிக்கை விடுகின்றாள் தாய். அது அவனது மனக்கொதிப்பை அதிகரிக்கினறது. தனக்கு அனுதாபம் கூறவந்தவர்களுக்கு சொல்ல வேண்டியதைச் சொல்ல இதுதான் தருணம் எனத் தீர்மானிக்கின்றான்.

எனக்கு இன்னொரு கை இருக்கு. உறுதியுடன் தெளிவாக ஒலிக்கின்றது அவனது வார்த்தைகள். அவனுக்கு ஆறுதல் கூற முனைந்தவர்களும் தமது எண்ணி நாணுகின்றனர். கால் இழந்த போராளிகளுக்கு கிட்டு எப்படி நம்பிக்கை நட்சத்திரமாக, வழிகாட்டியாக திகழ்கின்றாரோ அதே போலத்தான் போராட்டத்தில் தமது கரங்களை இழந்த போராளிகளுக்கு வழிகாட்டியாக விளங்குகிறான் அவன். அவன்தான் டடி.

டடி-நவம் வன்னிக் காடுகளின் மூலை முடுக்குகள் எல்லாம் இவனுக்கு அத்துப்படி. இக்காடுகள் பற்றிய படம் இவன் நெஞ்சில் நிறைந்திருக்கும். இவன் பிறந்தது மலைப் பிரதேசத்தில். போராடியது வன்னிக் காளங்களில். வன்னியை நேசித்த.... வன்னிக் களத்திலே காயமுற்ற இவன் உயிர் பிரிந்தது தமிழகத்தில்.

பசிலனையும், லோறன்சையும் சேர்த்தால் அதுதான் நவம். இவனுடன் நெருங்கிப் பழகிய ஒரு போராளி கூறிய வார்த்தைகள் இவை. ஒவ்வொரு போராளிக்கும் தனித்துவமாக சில ஆற்றல்கள் இருக்கும். துணிச்சலுக்குப் பெயர் போனவன் பசீலன். சிறந்த மதிநுட்பத்திற்குப் பெயர் போனவன் லோறன்ஸ். இருவரது தன்மைகளையும் ஒருவரிடத்தில் கண்டதால்தான் நவத்தைப் பற்றி அப் போராளி இவ்வாறு குறிப்பிட்டான்.

அதிதியாக வந்தோரால் அகதியாக ஆக்கப்பட்டதுதான் மணலாற்று மக்களின் வரலாறு. இன்றோ தமது சொந்த நிலத்தை தாமே பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுடன் நிற்கிறார்கள் மணலாறு மக்கள். வரலாற்றில் இந்நிலையை ஏற்படுத்தியதில் கணிசமான பங்காளிகள் நவமும் அவனது தந்தையுமே. எப்போதும் துப்பாக்கியுடன் காணப்படும் ஓமர்முக்தார் என்று போராளிகளால் அழைக்கப்படும் இவனது தந்தையும் இவனும் இந்த மண்ணை விட்டு நாம் எங்கும் போவதற்கில்லை என்ற செய்தியை ஸ்ரீலங்கா அரசிற்கு அடிக்கடி உணர்த்தினார்கள்.

அரசன் ஒருவன் தான் கைப்பற்றும் பிரதேசங்களைத் தன் ஆட்சியின் கீழ் வைத்திருப்பதற்கு அவனுக்கு உதவுவது அங்கு அவன் விட்டுச் செல்லும் அவனது இராணுவ முகாம்கள் அல்ல. இதைவிட அவன் தனது பிதேசத்து மக்களை அங்கு குடியேற்றுவதன் மூலம் சிப்பாகச் செய்யலாம். பாரண்ம் அங்கு குடியேறும் மக்கள் அங்கு நிரந்தரமாக வசிக்கப் போகிறவர்களாதலால் அவர்கள் எவ்வித இடர்களையும் எதிர் கொள்ளவும்ää அவ்விடங்களைத் தமதாக்கிப் போராடுவதற்கும் தயாராக இருப்பார். இது இளவரசன் என்னும் நூலில் காணப்படும் மாக்கிய வல்லியின் கூற்று. இதை அப்படியே நடைமுறைப்படுத்தியதால்தான் இன்று அம்பாறை என்றொரு தொகுதியே முழுச்சிங்களத் தொகுதி என்றாகிவிட்டது. இதையே படிப்படியாக திருமலைää மணலாறு என விஸ்தரித்;து வருகின்றது சிங்கள அரசு. ஆனால் இது தமிழீழ மண் என்று எல்லை போட்டுக் காட்டியது நவத்தின் துப்பாக்கி. குடியேற்றக்காரர்கள் என்பது ஆக்கிரமிப்பு இராணுவத்தின் ஒரு வடிவமே என்பதை இவன் உணர்ந்து அதுக்கேற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டபடியால் இன்னொரு ஓதியமலை வரலாறு மீண்டும் நிகழாது தடுக்கப்பட்டது.

நெருக்கடி மிகுந்த காலகட்டங்களானää எங்கும் இந்திய இராணுவமணம் வீசிய அந்த நாட்களில் இயக்கத்தையும், இயக்கத் தலைமையயும் பாதுகாக்க இவன் மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் பற்றி இவனுடன் பழகிய ஒவ்வொரு போராளியும் கண்கள் பனிக்க கதைகதையாய் கூறுகின்றனர். சூழலுக்கேற்ற மாதிரியும், மக்களுக்கேற்ற மாதிரியும் அமைந்த இவனது ஒவ்வொரு செயலும் போராட்டம் பற்றிய தெளிவை புதிதாகப் போராட்டத்தில் இணைந்து கொள்ளும் இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் ஊட்டியது. நெருக்கடியான காலகட்டத்தில் பதட்டபடாமல் செயற்படும் துணிவை சகபோராளிகளுக்கு ஊட்டினான். காட்டில் நவம் நிற்கும் பகுதி ஒரு பாதுகாப்பு வலயம் என்றே கூறலாம். அந்தளவுக்குச் சிறந்த முறையில் ஒரு ஒழுங்கமைப்பை உருவாக்கியவன் அவன்.

ஒற்றைக் கையால் இவன் செய்யும் வேலைகளைப் பார்த்த ஒவ்வொருவருக்கும், இவனால் இது முடியுமானால் என்னால் ஏன் முடியாது என்ற தன்னம்பிக்கையை ஊட்டியது. அவ்வாறு உருவான போராளிகள்தான் வன்னி மாண்ணைக் காத்து நிற்கின்றனர். கணக்கற்ற களங்களைக்கண்ட இவனை நாம் இழந்தது உண்மைதான். ஆனால் இவனால் ஊட்டப்பட்ட ஒழுங்கமைப்பு, போராட்ட உணர்வு எதையும் மணலாற்று மண் மறந்து விடவில்லை. அவ்வப்போது மணலாறு பிரதேசத்தில் எதிரியிடமிருந்து இவனால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் திரியும் போராளிகளும், ஊர்காவல் படையும் சொல்லும் செய்தி இதுதான்.

Wednesday, May 11, 2005

லெப்.கேணல் மல்லி - அமுதன்

சின்னத்தம்பி பத்மநாதன்
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.
விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதி


லெப்.கேணல் மல்லி, விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவன். இவன் விடுதலைப்போராட்ட காலத்தில் பல களங்களில் தன் முத்திரையைப் பதித்தவன்.

இரு தேசங்களின் ஆக்கிரமிப்பு இராணுவங்களுடன் இவன் போராடினான். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு எனும் இடத்தில் பிறந்தான். நீண்ட போராட்ட வாழ்வில் ஒயாது கடுமையாக உழைத்தவன். தனைவருத்தி தன்னொளி பார்த்தவன். அமைதிப் போர்வையுடன் வந்த இந்தியப் படைகள் முள்ளியவளையில் முகாம் இட்டிருந்தன.1990ம் ஆண்டில் இம்முகாம் மீதான தாக்குதலில் பங்கேற்று நின்றான். இந்தக் காலப்பகுதியிலேயே அவர்களோடு கூட்டாக நின்ற கும்பல்கள், கிளிநொச்சி 18ம் போர் எனும் இடத்தில் முகாம் அமைக்க முற்பட்ட வேளையில் தேசத்துரோகிகள் மீதான தாக்குதலில் ஈடுபட்டான்.

1991களில் கொக்காவில், முல்லைத்தீவு, மாங்குளம் என தொடர்ந்து வீழ்ந்த இராணுவ முகாம்களின் தாக்குதல்களில் முன்நின்றான்.

1991 ஆ.க.வெ என விடுதலைப் புலிகளால் பெயர் சூட்டப்பட்டு நடாத்தப்பட்ட ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல்களிலும் 1992ல் வண்ணாங்குள முகாம் தாக்குதல்களிலும் 1993ல் பூநகரி முகாம் தாக்குதல்களிலும் புயலென நின்றான்.1990ம் ஆண்டு மாங்குள முகாமிலிருந்து மல்லாவிப் பக்கமாக முன்னேற முயன்ற இராணுத்தினருடன் நேரடி மோதலில் நின்றான்.

சிலாவத்துறையில் இருந்து அளம்பில் நோக்கி முன்னேற முயன்ற இராணுவத்தினருடனான நேரடி மோதலில் குதித்தான்.

யாழ்தேவி எனப் பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை அது. கட்டைக்காட்டிலிருந்து புலோப்பளையை நோக்கி முன்னேற மூயன்ற யாழ்தேவியை தடம்புரள வைத்தான். அன்பும் பண்பும் அகத்திருத்திய மனிதரைச் சுமந்து யாழ்தேவிவரின் வரலாமேயன்றி ஆக்கிரமிப்பு எண்ணங்கொண்டு எவரும் வருதல் இயலாது என்று எதிர் நின்றான். தாயை தாய்த் தேசத்தை தன் உயிரினும் மேலாகப் பூசிக்கின்றவன். போர் என்றால் நெஞ்சம் பூரித்து தோள்கள் வலுவுற நிமிர்ந்து நடந்தவன். எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன்.

Saturday, May 07, 2005

லெப் கேணல் அமுதசுரபி

கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் அமுதசுரபி - அல்பா
சின்னப்பு நந்தினி
யாழ்பாணம்.
26-10-2001
கடற்புலிகளின் மகளீர் படையணித் துணைத் தளபதி


தாயகத்தைக் காப்பதற்காய் கனத்த மடிகளாய் கரையைத் தேட முயலும் படகுகள் இயந்திரப் பிழைகளால் வேகம் குறைய, தொடரணியாய் எம் கடற்பரப்பில் நகரும் எதிரிகளோடு மாட்டுப்பட வேண்டிவரும் பொழுதுகளில், அல்பாவின் குரல் உயர் அலை வரிசைச் சாதனத்தில் ஒலிக்க நம்புவோம் நாங்கள், எங்கள் கரை தூரத்தில் இல்லை என்று.

"இந்த வாறன். இந்தா வாறன்" உயர் அலை வரிசைத் தாளத்தில் எங்களுக்கு நம்பிக்கையூட்டி, "விடாமல் அடியுங்கோ" என்று கட்டடையிட்டு எங்களின் படகுகளுக்கு தனது படகைக் கொண்டு வந்து காப்பிட்டு, பகைக் கலத்தோடு சண்டை பிடித்து எங்களுக்கு இழப்புகளின்றி கரையேற்றிய அந்த செயல்காரியின் துணிச்சலை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது.

சண்டைகளைப் போலத்தான் அல்பா நிர்வாகத்திலும் தனக்கென ஒரு அத்தியாயத்தை உருவாக்கிக் கொண்டிருந்தவள். இயல்பாகவே பெண்கள் என்றால் சமூகத்தில் அவர்களுக்கென்று ஓர் பதிவிருந்தது. அதை அவர்கள் மீறுவதைத் தடுக்குமுகமாக பல கருத்துக்கள் ஒரு திராளாய் உருவாக்கப் பட்டும் இருந்தது. காலகாலமாய் அந்தச் சூழலிற்குள் வாழ்ந்தவர்கள் அக்கட்டுடைத்து வெளிவரும் போது சில தயக்கங்களும் அவர்கள் கூடவே வந்து விட கடலிலும் அதே நிலைதான்.

தலைவர் அவர்களின் ஆழ் நுண்ணிய பார்வையால் உருவாக்கப்பட்ட கடற்புலி மகளீர் அணியின் செயற்பாடுகள் விரிவு படுத்தபடுகின்றன. ஆனால் அதே வேளை எம்மில் பலர் "பெண்கள் கடலில் இயந்திரத் திருத்தினராக போக முடியாது" எனக் கூறப்போனவர்களும் கடலிற்குப் புதியவர்கள் என்பதனால் திறமையாகச் செயற்பட முடியாமல் போக, இக் கூற்று எல்லோரிலும் படிய முயற்சித்துக் கொண்டிருக்க அல்பா விடவில்லை.

சூசை அண்ணாவோடு கதைத்து அவர்கள் எதில் தெளிவில்லாமல் இருக்கிறார்களோ அதை வகுப்புக்கள் மூலமாகத் தெளிவாக்கி, திரும்பவும் அவர்களைக் கடலில் இறக்கி தன்னோடும் கூட்டிக் கொண்டுபோய் பெண்களால் எதுவும் சாதிக்க முடியும் என்ற உண்மையை உணரவைக்கும்வரை அல்பா ஓய்ந்ததேயில்லை. இன்று திறமை மிக்கவர்களாகவும் அனுபவம் வாய்ந்தவர்களுமான பல இயந்திர திருத்துனர்களாக பெண் போராளிகள், "அல்பாக்கா இருந்திருந்தால் நாங்கள் இன்னும் எவ்வளவு சாதிச்சிருப்பம்" என்று சொல்லுமளவிற்கு அல்பா அவர்களோடு வாழ்ந்திருக்கிறாள்.

"அல்பாக்கா ஆசைப்படுகிற மாதிரி எல்லா நிலைகளிலும் நாங்கள் கடலில் வளரவேணும்." கண்களில் நீர் தேங்க கடலில் செயல்களினூடே வளர்ந்து வரும் இளைய போராளியின் குரலிது.

இந்தக் காலம் எமது தலைவர் அவர்களால் நல்லெண்ண அடிப்படையில் ஒருதலைப் பட்ச்சமான யுத்த நிறுத்தம் நடைமுறைப் படுத்தப்பட்டு இருந்தது. பகைவனைப் போலவே எமது தேவைகளும் உள்ளதால் நாங்களும் கடலோடிக் கொண்ருந்தோம்.

முல்லைத் தீவியிற்குயரே எதிரியின் டோறாவிற்கு எதிரே எங்களது விநியோகப் படகுகள் மாட்டுப்பட்டு விட்டன. நாங்கள் யுத்த நிறுத்தத்தை நடைமுறைப் படுத்திய போது அரச படைகள் எங்களைத் தாக்கினால் எங்களால் முறியடிப்புத் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்றும் அறிக்கை விடப்பட்டிருந்தது. எங்களின் பாதை வழியே எங்களது படகுகள் வரமுற்பட்டுக் கொண்டிருந்தன. பகைக் கலங்கள் விடவில்லை. கலைத்துக் கலைத்துச் சுட்டன.

முறியடிப்புத் தாக்குதலை நடாத்தத் தொடங்கினோம். முறையான போடுää ஒரு டோறா தாண்டு மற்றைய டோறாவை எதிரி கட்டியிழுத்துக் கொண்டு போனான் தாண்டு போகுமளவிற்கு.

இந்தச் சண்டையில் அல்பா நின்றாள். எங்களது படகுகளைக் கரைக்கு வரவிடாமல் வரித்துக் கட்டிக் கொண்டு நின்ற எதிரிக்கு, இது எங்கள் கடல் என்று சொல்லாமல் செயலில் காட்டியவாறு:

"அமுதசுரபி தன்னம்பிக்கைக்கு எடுத்துக் காட்டு. அவருக்கு எந்த வேலையைக் கொடுத்தாலும் சிக்கலில்லாமல் நிறைவேற்றிப் போடுவார்." அமுதசுரபியைப் பற்றி கடற்புலிகளின் மகளீர் விசேட தளபதி விடுதலையின் மனப்பதிவிது.

முல்லைத்தீவிற்குயர நடந்த சண்டையொன்று அல்பாவின் சண்டை ஆளுமைகளாத் தெளிவாக இனங்காட்டியது. சிக்கலான அந்தச் சண்டையில் கூட அல்பா நிதானமாகச் செயற்பட்டுää பாரிய இழப்புக்கள் ஏற்படாமல்ச் செய்தவர். விழுப்புண்ணடைந்த பின்பும் கூடää போராளிகளைப் பத்திரமாகக் கரையேற்றியவள்.

அல்பாவின் கடற் சமர்க் களங்கள் எப்படி விரிவடைந்தனவோ அதைப் போலத்தான் அவளது ஆளுமைகளும் புத்துயிர்ப்பாகிக் கொண்டிருந்தன. எங்களது கடற்பலத்தையும் யாழ். குடா நாட்டிற்கான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியம்பும் களமாக பருத்தித்துறைக்குயர 'பிறைற் ஓவ் சவுத்' என்ற கப்பலை வழிமறிக்கும் சண்டை திட்டமிடப்பட்டது. இங்கும் அல்பா நின்றாள். ஒழுங்காக விழுப்புண் மாறாத நிலையிலும் கூட சண்டை பிடிக்க வேண்டும்ää சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இந்தக் களமுனைக்கான பயிற்சி ஆரம்பமாகியிருந்த வேளை பெண் போராளிகளின் சூட்டு வலு காணாது என்ற போது அல்பா அப்போராளிகளோடு ஒன்றாகக் கடலிற்குள் போனாள். இரவு பகல் பாராது ஒன்றாய் நின்று அவர்களை குறி தவறாது சூட்டாளர்களாய் மாற்றும் மட்டும் ஒழுங்காகச் சாப்பிடவோ நித்திரை கொள்ளவோ குளிக்வோ இல்லை. எங்களைப் பற்றி எல்லா நிலைகளிலும் ஒருவரும் குறை கண்டு பிடிக்கக் கூடாது எனச் சொல்லியே அவர்களை உயிரப்பாக்கினாள்.

அல்பாவை நாங்கள் ஒருபோதும் பொறுப்பாளராய் கட்டளை அதிகாரியாய் பார்த்ததேயில்லை. எந்தப் பணியில் என்றாலும் தானும் ஒரு ஆளாய் பங்கெடுத்துக் கொண்டேயிருப்பாள்.

நாள் நேரம் எதற்குயர எத்தனை படகுகள் வழிமறித்து 'பிறைற் ஒவ் சவுத்' என்ற கப்பலோடு டோறாவையும் தாக்குவது என்ற திட்டங்களும் விளங்கப்படுத்தப் பட்டு படகுகளும் கடலில் இறக்கப்பட்டாயிற்று. எப்போதும் போலவே அல்பா இங்கு வழிப்பாக இருந்தாள். கண்ணிமை மூடியவாறு படுத்திருக்கும் அல்பா, சாதனங்கள் கூப்பிட்டால் எழும்பிக் கதைப்பாள்.

சண்டை முடிந்து வந்த பின்புதான் தெரிந்தது அவள் நித்திரை கொள்ளவில்லை என்று. அவள் கண்களை மூடிக் கொண்டு எதிரிப் படகை எப்படித் தாக்கியழிப்பது எனறும், எதிரிப் படகை எப்படி வழி நடத்துவது என்பதைப் பற்றியும்தான் யோசித்துக் கொண்டிருந்ததாகக் கூறினாள்.

'பிறைற் ஒவ் சவுத்' மயிரிழையில் உயிர் தப்பியது பற்றி அவள் வேதனைப் பட்டாள். டோறா தாண்டது காணாது. அடுத்த சண்டையில் இதை விட இன்னும் நிறையச் செய்ய வேணும். இது அவளது கனவு. தான் போய்ப் பிடித்த சண்டைகளின் பிழை சரிகளை ஆராய்ந்து அடுத்த சண்டைக்கு தன்னைத் தயார் படுத்தி விடும் சண்டைக் காரி அவள்.

கடற்புலிகளின் விசேட தளபதி கேணல் சூசை அவர்கள் அல்பாவைப் பற்றி நினைவுப் பதிவினை எடுத்துரைக்கையில், "அமுதசுரபியைக் கூப்பிட்டு ஒரு வேலையையோ அல்லது ஒரு பொறுப்பையோ எடுத்து நடத்தும்படி கூறினால்ää அவரால் செய்ய இயலுமென்றால் உடனே ஓமென்று சொல்லிப் பொறுப்பெடுத்து நடத்துவார். அப்படி அந்த வேலை எதுவும் சிக்கல் என்றால் அதற்கான காரணத்தைக் கூறி அதில் தேர்ச்சியடைந்து விட்டு குறுகிய காலத்தினுள்ளே சொன்ன வேலையைப் பொறுப் பெடுத்து திறமையாகச் செய்வார்."

எவ்வளவு அற்புதமான செயலுக்குரிய போராளியை நாங்கள் இழந்து விட்டோம் என்ற உணர்வு எப்போதும் நம் மனங்களை அரித்துக் கொண்டேயிருக்கிறது.

வருண கிரண நடவடிக்கையால் பகைவன் கடலை இறுக்கிய காலம். எங்களது கடலாதிக்கத்தை பகைவனுக்கு உணர்த்த நாங்கள் வாய்ப்புப் பார்த்திருந்த வேளை...

கடலிலும் நிறம் மாறி உயரக் கடலேறிய நுரை கக்கிக் கொண்டிருந்த காலம். 23-09-2001 முல்லைக் கடலில் எம் தரப்பு விழித்திருந்தது பகைக்கல நகர்வைக் கண்காணித்தவாறு.

களம் தொடங்கி சொற்ப பொழுதுகள்... பகைவனின் வலிமை அகன்று கொள்ள, எமது படகிற்குப் பாரிய சேதம். இயந்திரங்கள் வெடிபட்டு அசைய மறுக்க, படகைக் கைவிட வேண்டிய நிலை.

எதிரிக்கு படகு என்றால் அது பொருள்தான். ஆனால் அது எங்களுக்கோ உயிர். உணர்வும் சதையும், குருதியுமாய் எம் தோழர், தோழிகள் வாழ்ந்த கருவறை. வாய்ப் பேச்சின்றி எம்மை அரவணைக்கும் தாய். எப்படி அதை எம் கண்ணெதிரே தீ மூட்ட முடியும். அல்பா துடித்துப் போனாள். எப்பாடு பட்டாவது படகைக் கரைக்குக் கொண்டு போகவேண்டும். எங்களது படகுகளின் எண்ணிக்கையோ ஐந்து விரல்களுக்குள்ளடங்க, அவனது படகோ இரட்டைத் தானத்திலிருந்தது.

மனோதிடம் உருக் கொள்ள அல்பாவின் கட்டளைப் படி அவளது படகோடு செயலிழந்த படகு தொடுக்கப்பட்டு அதை அவள் இழுக்கத் தொடங்கினாள். ஏற்கனவே கடல் நிலைமையோ மோசம். இன்னுமொரு படகைக் கட்டியிழுப்பதால் வேகமோ குறைவு. இமைத்துளியில் அண்மிக்கும் எதிரியின் படகைத் திருப்பித்தாக்க தொடுவையைக் கழற்றிவிட்டு அல்பாவின் படகு சண்டை பிடிக்கப் போய்விடும். தூர எதிரிப் படகு, வந்து எமது படகை தொடுக்கத் தொடங்க எதிரி கிட்ட வந்து விடுவான். திரும்பவும் போய் அடித்துவிட்டு வந்து படகை நூறு மீற்றர் தொடுத்துக் கொண்டு வந்த பிறகு கிட்ட வாற எதிரிக்குப் போய் நெருப்படி கொடுத்துவிட்டு வந்த அன்று அவ்வளவு இடர் நிறைந்த களத்தில்க் கூட அல்பா பதற்றப்படவில்லை நிதானமாய் கரைக்கு நிலைப்பாட்டை அறிவித்து, அந்தப் படகை கைவிடாமல் கரைக்கு கொண்டுவந்து சேர்க்கும் இறுதிவரை அவள் நிலை குலையவில்லை.

ஆனால் அவளது மனத்திண்மை எதிரியின் ரவைக்குப் பொறுக்கவில்லைப் போலும். எங்கிருந்தோ வந்து வயிற்றைக் கிழித்து கொண்டு நின்று போனது.

அல்பா இப்போது மருத்துவமனையில். போய் வருபவர்களிடம் எல்லாம் தன் வேதனையைப் புறக்கணித்தவாறு சண்டை நிலைப் பாட்டைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தாள். "படகுகள் எல்லாம் கரைக்கு வந்திட்டுதோ...? படகில் நிக்கிற ஆருக்கும் என்ன பிரச்சினையோ...?" இது தான் அல்பாவின் இறுத்திக் கணங்கள் வரை ஒலித்துக் கொண்டிருந்தது.

மாதம் ஒன்றானது மருத்துவ உலகிற்குச் சவால் விட்டாவாறு அல்பா. நாங்கள் போகும் போது புன்னகை உதிர்க்கும் அல்பாவிற்கு இனி ஒரு பிரச்சினையும் இல்லை என்று நாங்கள் நம்பினோம்.

அவள் காயம் மாறி அவள் இல்லாது நடந்த சண்டையின் சரி பிழைகள் கதைக்க அடுத்த கட்ட மகளீரின் வளர்ச்சி பற்றி திட்டம் போட, புதியவர்களைப் படகில் ஏற்றுவது பற்றி விதாதிக்க, துணைத் தளபதியாய் பொறுப்பேற்கப் போகும் அல்பாவை வாழ்த்தவென பல மனங்கள் தங்களிற்குள்ளேயே பல சிந்தனைத் துளிகளை வைத்திருக்க எதையும் கேட்காமல், எம் கனவுச் சிறகுகளைப் பிடுங்கியவாறு அந்தச் செய்தி 26-10-2001 அன்று எம் செவிகளுக்குள்ளே அறைந்தது.

அல்பா, எங்களது கடற்புலி மகளீர் பிரிவின் வாடை வெள்ளியாய், காலமெல்லாம் பலரை வளர்த்தெடுக்கும் தளபதியாய்,ஆளுமையானதொரு கட்டளை அதிகாரியாய் உலாவி எம் சுமைகளுக்குத் தோள் கொடுப்பாயெனக் காந்திருந்த நீயோ கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபியாக எம் மனங்களோடு கலந்து போனாய்...

Thursday, May 05, 2005

கப்டன் திவாகினி

கப்டன் திவாகினி தொலைத் தொடர்பாளராய் பணி ஆரம்பித்து நிர்வாகப் பணியும் இடையிடையே போர்களப்பணியும் ஆற்றியவள். அலைகள் விரிந்து ஓயாத அலை மூன்று வீச்சம் கொண்ட தருணத்தில் ஆட்பற்றாக்குறை நிவர்த்தியாய் தருணத்திற்குப் பொருத்தமாய் எல்.எம்.ஜி (L.M.G) கனரக இயக்குநராய் வேவுப்புலியாய் வேண்டிய விதமாய் அடையாளப்பட்டுக் கொண்டவள்.

இயல்புச் சுபாவத்தில் தனித்த கலவை அவள். அதிகம் நெருங்கிக் கொள்ளாதவர்களுக்கு அவள் கடுமை அடிதடி அடாவடி. நெருங்கியவர்களுக்கு காரியவதி கண் பார்த்தால் கை செய்யும் நுட்பக்காரி அன்னியையும் பொன்னியாக்கும் கைவரிசைக்காரி.

மனமுண்டானால் இடமுண்டு என்பதற்கு உதாரண புருசி.

கூட்டுப்பணி எனில் குழப்பம்தான். தனித்த பணியே தடம் வைத்திருக்கிறது. தொடக்க காலத்தில் மனமொப் பாத பணியாகில் இஞ்சி தின்ற குரங்காய் அவள் செய்கைகள் வெளிப்படினும் கட்டளைக்குக் கீழ்பணிந்து காரியம் நடக்கும். பெறுபேற்றில் அது வெளிப்பட்டிருக்கும். மனமொப்பிவிட்டாலோ வானத்திற்கும் éமிக்குமாய் குதிப்பு நடக்கும். பணிக்கப்பாலும் பறப்பு நடக்கும்.

நிர்வாக பணிகளில் நீண்டகாலம் அடக்கப்பட்டு விட்டதாய் அங்கலாய்த்தவர்களுக்கு ஓயாத அலைகள் மூன்று அலைக்கரம். அத்தனை பேருக்குமான சண்டைக்கள வாய்ப்பைத் திறந்து விட்டது என்று குறிப்பிடும் அளவிற்குஅநேகமான நிர்வாகப் பணியாளருக்கு வாய்ப்புக் கொடுத்த வள்ளன்மை கொண்டது. திவாகினிக்கு ஓயாத அலைகள் மூன்றுதான் போர்கள வாய்ப்பை கொடுத்த முதற்களம் அல்ல. ஏலவே 'சத்ஜெய" களத்தில் அணித்தலைவியாயும் கொம்பனி மேலாளரின் உதவியாளராகவும் பணியாற்றிய அனுபவமிருந்தது. அதிகாரிகள் கற்கைநெறிக்காய் தெரிவாகி கற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில்(1997) 'ஜெயசிக்குறு" ஜெயம் என்ற போது கற்றுக் கொண்ட காட்டுப்பயிற்சிகளைக் கொண்டு களமாடிய அனுபவமுமிருந்தது. எனினும் சத்ஜெயக்களமோ ஜெசிக்குறுக் களமோ அவளிற்கு அவ்வளவாய் சரிப்பட்டு வரவில்லை.

ஓயாத அலைகள் மூன்றே அவளது போர்முகத்தை வெளிப்படுத்தியது. ஆட்பற்றாக்குறை மட்டுமன்றி அது அதுபற்றிய அறிவு கொண்டோர் அருந்தலாய் இருந்த நெருக்கடியான அக்காலமதில் நிலமை புரிந்து 'இடனறிந்து" துணிந்த போர்குணமே அவளது நிமிர்வு.

அத்தியாயம் முடிந்தாய்அரணிட்டு இறுமார்ந்திருந்த பகுதிகளை அடுத்தடுத்து விடுவித்தபடியே சீறிக்கொண்டிருந்த வீச்சக் காற்றில்விடுவிக்கப்பட்ட பகுதிகளை தக்கவைத்துக் கொள்ளதக்க தற்காப்பு வேண்டும் விதமாய் நீண்டுகொண்டேயிருந்தது. அப்போது பல மைல்கள் பல பத்துப் பேருமின்றி ஒரு சில கனரகங்களையும் மன ஓர்மத்தையுமே மாற்றாய்க் கொண்டிருந்த காலம் அது.

திவாகினி எல்.எம்.ஜி பற்றி தான் சுயமாய் அறிந்துகொண்டே சிற்றறிவோடு துணிவாய்ப் பணியேற்றாள். வேண்டும்போது வேவுப் புலியாயும் மாறிப் போனாள். மணலாறு, கலகலப்பையாறு, பப்பாசிப் பொயின்ற், சத்துருக்கொண்டான், சேமடு என்று எல்.எம்.ஜி யோடு பவணி வந்தாள். மரையடித்த குளத்திற்கு பணி நகர்ந்தபோது அணித்தலைவியாய்வேவுப் புலியாய் கனரகம் வேண்டிய போது கனரக இயக்குநராய் களமிறங்கினாள். ஓயாத அலைகள் மூன்று வடபோர்முனை நோக்கி திரும்பியபோது அவள் உற்சாகம் மென்மேலும் கரைபுரண்டு கொண்டது. விடுவிப்புச் செயற்பாட்டு அணியாயும் அழைப்பு வந்தது சொந்த மண்ணிற்கே. சொந்த மண்ணின் சுகம்! உணர்ந்து கொண்டர்களுக்குப் புரியும். திவாகினியும் விதி விலக்கல்ல.

மருதங்கேணி மையப்பகுதி வீடு விக்கப்படாது சீறிச்சினந்து கொண்டிருக்கையில் உள்நுழைந்து உற்சாகம் தந்தவள். முகாவில், இயக்கச்சி, பளை என்று பணிசெய்து முகமாலையில் தரித்து நின்றபோதுதான் அது நிகழ்ந்தது.

25.05.2000 'சட்" சிறிய சத்தம். நிலையிலிருந்தவளிடம் நிசப்தம்! ஓய்விலிருந்தபோது அது நிகழ்ந்தது. அவள் முகமாலை மண்ணை முத்தமிட்டுக் கொண்டாள். 'ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தான் செயின்"

'தகுந்த காலத்தைக் குறித்து இடனறிந்து செய்வானாயின் அவன் உலகமெல்லாம் பெற நினைத்தானாயினும் பெறலாம்" என்ற திருவள்ளுவரின் திருவரிகள்கப்டன் திவாகினியின் பட்டறிவாய் படிப்பினையாய் பதிவாகியது.

'நான் வீரச்சாவடைந்த பின் என் இக்குறிப்பினை வாசிக்கும் யாராக இருந்தாலும் என் ஆசைத் தங்கையை என் வழியில் அழைத்து வாருங்கள்."

புதிதாய் பிறக்கும் புலிகளுக்குள் அவள் ஆன்ம வரிகள் அர்த்தம் கொள்ளும்.

அகநிலா
நன்றி - எரிமலை Feb-2005

Sunday, May 01, 2005

லெப்டினன்ட் கேணல் ஜீவன்

பிள்ளையான் சந்திரமோகன்
கதிரவெளி, மட்டக்களப்பு.
மட்டு - அம்பாறை மாவட்ட துணைத் தளபதி


கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் முள் செடிகள். கொழும்பு ரோட் (மட்டு. - கொழும்பு நெடுஞ்சாலை) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலிங்குகள் சலசலக்காது இறுக்கிப் பிடிக்கப்படுகின்றன. ஆபத்தைத் தவிர்க்கும் அளவிற்கு அவசியமான இடைவெளி விட்டு முன்னே செல்பவரின் சிறு அரவத்தைக் கொண்டு திசையறிந்து செல்வதே ஒரு கலை. தென் ஈழக் காடுகளிலே இந்தக் காலைதான் அவசியமான அரிச்சுவடி. கத்தி வெட்டுப் போல் ஒரு நகர்வு... கை வீசும் தென்றல் போல் ஒரு நகர்வு... இப்படி புத்தியையும் பலத்தையும் எடைபோட்டு நடந்ததாலேயே அங்கு போராட்டம் தாக்குப்பிடித்து, தளிர்கொண்டது. கத்தியையும் புத்தியையும் இடம்மாறி வைத்தவர்களை காலம் மட்டுமல்ல, காடுகள் கூட கை கழுவி விடும்.

கடந்த ஒரு சகாப்தத்திற்கும் மேலாக கொழும்பு ரோட்டிற்கு குறுக்காக நடந்த பெரும்பாலான நகர்வுகளை ஜீவன் தான் வழி நடத்தியிருக்கிறான். தவழ்ந்து திரிந்து வேவு பார்ப்பதும், தாக்குதல் செய்து தலை நிமிர்ந்ததும், தவறு செய்து தண்டனை பெற்றதும், உயிரைப் பணயம் வைத்து உறுதியை நாட்டியதும் எல்லாமே இந்த கொழும்பு ரோட்டில்தான். அதன் இரு மருங்கிலும் நிற்கும் மரங்கள், வயல் வரம்புகள், மின் கோபுரங்கள், மண் மேடுகள் என்று எல்லாமே ஜீவனின் மனதுக்குள் அடக்கம்.
#####
அணியின் நகர்வு தடைப்படுகின்றது. பாதை தவறியது தெரியவருகிறது. பெரியதொரு காவு அணியையும் அதற்கேற்ற சண்டை அணியையும் கொண்ட அந்த நீண்ட மனிதக் கோடு மீண்டும் நகர ஆரம்பித்தது. இப்போது அதன் முதல் ஆளாக ஜீவன் நடந்து கொண்டிருக்கிறான்.

இது ஜீவனது வழமையான பாணி என்பதால் ஒரு தளபதியை முதல் ஆளாக விட்டு பின்னே செல்லும் போது உண்டாகும் சங்கடம் பலருக்கு ஏற்படுவதில்லை. ஆபத்தை நாடிச் செல்லும் ஜீவனின் இயல்பிற்கு சிங்கபுர சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்.

சிங்கபுர விடுதிப்பகுதி சிங்களச் சிப்பாய்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாகவே இருந்து வருகிறது. ஒரு இடத்தில் பல தடவை பதுங்கித் தாக்குதல் செய்யப்பட்டதே அதன் காரணம். அதிலே இரண்டாவது தாக்குதல் 1992ஆம் ஆண்டு இடம் பெற்றது அதிலே ஜீவன் களத் தளபதி.

இதற்கு முன்பு நிகழ்ந்த தாக்குதலிலே கொல்லப்பட்ட எதிரிகளின் நினைவாக அமைக்கப்பட்ட சிறிய நினைவுத் தூபியை நிலையெடுத்த இடத்தில் இருந்தே பார்க்கக் கூடியதாக இருந்தது. எதிரி அதிலே காப்பு நிலையெடுத்து எம்மைத் தாக்கினாலே தவிர, அதைச் சேதப் படுத்த வேண்டாம் என்று இறுதி முதற் கொகுப்புரையில் எமக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தாக்குதல் ஆரம்பித்தது.

எதிரியின் கவச வண்டியை நோக்கி ஆர்.பி.ஜி. கணையொன்று சீறிச்சென்று வெடிக்க எங்கும் புகைமயம். பவல் உடைந்து விட்டதா? என்ற கூச்சலும் இயந்திர உறுமலுடன் வேட்டொலியுமாக சிறு குழப்பம் நிலவினாலும் ஆங்காங்கே தென்பட்ட எதிரிகள் சுட்டு விழுத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். புகை விலகிய போது பவலின் மிகச் சமீபத்தில் ஜீவன் ரீ55 -2 உடன் நிற்பதையும் அவனின் தலையின் மேலாக 50 கலிபரால் சிவப்பாக தும்பியபடி பவல் பின்வாங்கி ஓடுவதையும் காணக் கூடியதாக இருந்தது. எந்தச் சமரின் போதும் இறுக்கமான பகுதிக்கே ஜீவன் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்ää அந்தப் பகுதியிலும் மிக இறுக்கமான இடம் நோக்கியே ஜீவன் ஈர்க்கப்பட்டதற்கு அவனது போரார்வமும் மாசற்ற வீரமுமே காரணம். "எங்கும் செல்வோம்" என்று எம் படைகள் எழுந்து நடந்ததும் "எதிலும் வெல்வோம்" என்று சூள் கொட்டி நிமிர்ந்ததும் ஜீவன்களாலே அன்றி வேறு வழிகளில் அல்ல.

ஜீவனின் வாழ்க்கைத் தடத்தில் பயத்திற்கு மட்டுமல்லாது பகட்டிற்கும் இடமிருக்கவில்லை. தலைமைத்துவப் பாடநெறியொன்றில் எல்லோரையும் விட அதிக புள்ளிகளை ஜீவன் பெற்றபோது, ஆர்ப்பாட்டமின்றி தனிமையிலிருந்து ஜீவன் கற்றதையும் தலைவரின் பேச்சடங்கிய ஒலிநாடாக்களை பரபரப்பின்றி கேட்டு வந்ததையும் அறியாத பலர் மூக்கிலே விரல் வைத்தார்கள். நடையுடை பாவனைகளில் கூட ஜீவன் எளிமையானவன்.

போராளிகளுடன் சேர்ந்து பங்கர் வெட்டிக் கொண்டிருந்த ஜீவன் சற்றுக் களையாறää சராசரிப் போராளியின் உடையில் தனது தளபதி இருப்பார் என்பதைச் சற்றும் எதிர் பாராத புதிய போராளி தொடர்ந்து ஜீவனை ஏவியதும் அடுத்த தேனீர் இடைவேளை வரை ஜீவன் பங்கர் வெட்டியதும் மங்கிப் போக முடியாத மனப்பதிவுகள்.

வன்னியிலே நடந்த பல மறிப்புச் சமர்களிலே இறுக்கமானவை எனக் கருதப்பட்ட இடங்களிலும் 'ஓயாத அலைகள் - 2' நடவடிக்கையிலும் முக்கிய பங்கு வகித்துää பின் மட்டு - அம்பாறை மாவட்ட இணைத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின் - ஏறத்தாழ பதினைந்தாண்டு காலம் வெடிப்புகையையும்ää சமர்ப் புழுதியையும் சுவாசித்ததால் முப்பதாவது வயதில் முதற் தடவையாக ஈழை நோயால் பாதிக்கப்பட்ட பின் நிகழ்கிறது இச் சம்பவம். இந்த எளிமை கலந்த அர்ப்பண உழைப்புக்களாலேயே பெரு வெற்றிகள் சாத்தியமாகின என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

87இன் ஆரம்பத்தில் இயக்கத்தில் இணைந்து கொண்ட ஜீவன் 90இன் பிற்பகுதியில் ஒரு தனிச் சண்டை அணியின் தலைமையாளனாக வளர்ந்திருந்தான். தானே வேவு பார்த்து, திட்டமிட்டு, களத்தில் வழி நடத்துவதையே அவன் எப்போதும் விரும்பினான். வெற்றியும் அவனையே விரும்பியது.

எதிரியின் மீது தாக்குதல், ஆயுதம் அபகரிப்பு என்ற செய்தி கிடைக்கும் போதெல்லாம், அத் தாக்குதல்களின் தன்மையை ஒப்பிட்டு இது ஜீவனுடைய பாணியில் அல்லவா அமைந்திருக்கிறது என்று பேசுகின்ற அளவிற்கு சிறு தாக்குதல்களில் தனி முத்திரை பதித்திருந்தான் ஜீவன். இது எந்த வீரனுக்கும் இலகுவில் கிடைத்துவிடாத மிகவுயர்ந்த பேறு.

மூன்றாம் ஈழ யுத்தம் ஆரம்பத்திற்கும் 97இன் ஆரம்பத்திற்கும் இடையேயான காலத்தில் ஜீவன் வாகரை பிரதேச கட்டளை அதிகாரியாக இருந்த போதே பல சிறு தாக்குதல்களின் மூலம் கிடைக்கக் கூடிய பெரிய அனு கூலஙக்ள் அவனால் நிரூபிக்கப்பட்டன. கதிரவெளி வரை பரவியிருந்த எதிரி முகாம்கள் ஐந்து காயான்கேணிப் பகுதியையும் கடந்து பின்வாங்கப்பட்டன. மக்களின் கல்வி பண்பாட்டு முறைகள் சீர் பெற்றன. மருத்துவமனை அடங்கலான எமது முகாம்கள் பல குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டன. வாகரைப் பிரதான வீதியோரமாக (திருமலை வீதி) மாவீரர் துயிலும் இல்லம் நிறுவப்பட்டது.

அங்கே நிகழ்த்தப்பட்ட போர்ச் சாதனை பற்றி அக் காலத்தில் மாவட்ட அறிக்கைப் பிரிவின் மேலாளராகவிருந்த மேஜர் லோகசுந்தரம் (வீரச்சாவு: 05.03.1999 மாவடி முன்மாரிப் பகுதியில் விசேட அதிரடிப் படையினருடனான மோதலில்) அவர்கள் கூறியது: "அந்த அறிக்கைகளை ஒப்பிடுவது ஒரு புதிய அனுபவம். 20 மாத காலத்தினுள் வாகரைப் பிரதேச 'விசாலகன் படையணி' சந்திவெளி, சித்தாண்டிப் பகுதிகளில் நிகழ்த்திய நான்கு பெரும் தாக்குதல்கள், மாவடி முன்மாரிப் பிரதேசத்தில் நிகழ்ந்த நடுத்தர அளவிலான சில தாக்குதல்களிலும் கலந்து கொண்டது போக தமது பகுதிகளில் மட்டும் தனியாகச் செய்த நடுத்தர மற்றும் சிறிய தாக்குதல்களில் 340ற்கும் மேற்பட்ட படைக் கலங்களைக் கைப்பற்றியிருக்கிறது. இப்படியொரு விடயத்தை இதற்கு முன் நான் கேள்விப்பட்டதில்லை."

சாதனைகள் பொதித்த ஜீவனின் போரியல் வாழ்வில் சோதனைகளுக்கும் குறைவில்லை. குடும்பிமலைப் பகுதியில் கொமாண்டோக்களுக்கு எதிரான தாக்குதலிலும், பூநகரித் தவளைச் சமரிலும் பின்பு கூமாஞ்சோலை முகாம் தாக்குதலிலும் உடலின் எடையில் ஈயமும் பங்கேற்கும் அளவிற்கு செம்மையாகக் காயப்பட்டிருந்தான்.

"ஜீவன் உன்ர குப்பியையும், தகட்டையும் வாங்கிப் போட்டு தண்டித்து சமைக்க விடும்படி சிறப்புத் தளபதி சொல்லியிருக்கிறார்."

இதே கொழும்பு ரோட்டிலேயே, போராளிகளின் சுமைகருதிää தவிர்க்கவேண்டிய பாதையொன்றினூடாக வழி நடாத்தியதால் ஏற்பட்ட இழப்பிற்கான தண்டனை அறிவித்தலை தனது உணர்வுகளைச் சிரமப்பட்டு அடக்கியபடி இன்னுமொரு தளபதி ஜீவனிடம் கூறியபோது மிக அமைதியாகப் பதில் வந்தது. "சரி நிறைவேற்றுங்கள்"

அதைத் தொடர்ந்து ஒரு ஆரம்பப் போராளியைப் போல 'புளுக்குணாவ' முகாம் தகர்ப்பிற்கான தடையுடைப்புப் பயிற்சி பெறுகிறான் ஜீவன். தொட்டாற் சுருங்கி முட்கள் முழங்காலிலும், முழங்கையிலும் புண்களை ஏற்படுத்துகின்றன.

தன்னைத் தோள் பிடித்து தூக்கி நிறுத்திய தளபதி, அரவணைத்து ஆறுதல் தந்த தோழன், முன் நடந்து வீரம் காட்டி விழுப்புண் சுமந்த பெருமகன் - மண் தேய்ந்த காயத்துடன் பயிற்சி பெறுவதைக் காண பயிற்சிப் பொறுப்பாளனின் மனம் விம்முகின்றது.

"ஜீவண்ணன்...... நீங்கள் எழுந்து போய் சற்று ஓய்வெடுக்கலாம்."

புலிக்குறோளில் போய்க் கொண்டிருந்த ஜீவனிடமிருந்து நிமிர்ந்து பார்க்காமலே பதில் வருகின்றது.

"எல்லோருக்கும் பொதுவான விதிகளே எனக்கும் பொருந்தும்"

இறுக்கமான முகத்துடன் தொடர்ந்து நகரும் ஜீவனைப் பார்க்க பயிற்சிப் பொறுப்பாசிரியனின் உதடுகள் துடித்து வழிகள் பொங்க குரல் தளம்பாமல் சமாளித்தபடி கூறுகிறான்.

"பயிற்சிப் புண் அதிகமாகி விட்ட போராளிகளுக்கு நாங்கள் பயிற்சி தருவதில்லை. இங்கு நானே பொறுப்பாளன். இது என்னுடைய உத்தரவு. நீங்கள் எழும்பலாம்."

இதுவரை தங்கள் உணர்வுகளை மரக்க வைத்து ஜீவனுடன் நகர்ந்து கொண்டிருந்த அத்தனை போராளிகளும் நன்றிப் பெருக்கோடும் நிம்மதிப் பெருமூச்சோடும் பயிற்சிப் பொறுப்பாசிரியனை நிமிர்ந்து பார்க்கிறார்கள். ஒவ்வொரு சோடிக் கண்களிலும் ஒவ்வொரு சோடிக் கண்ணீர் துளிகள்.

ஜீவனுடைய எளிமையையும் அர்ப்பணிப்பையும் போலவே குறும்புகைளையும் குறைவான பக்கங்களையும் கூடத் தலைவர் அறிந்திருந்தார். இருப்பினும் சுற்றாரைக், கற்றோரே காமுறுவர் என்பது போலää பலம் பலத்திற்கு மரியாதை செய்யும் என்பது போல வீரம் வீரத்தால் ஈர்க்கப்படுவதும் தவிர்க்க முடியாததது என்பதை ஜீவனின் சாவிற்குப் பின்னான தலைவனின் உணர்வு வெளிப்பாடுகள் திரைவிலக்கித் தெரியவைத்தன - தெளிய வைத்தன. சராசரிக்கும் மேலான ஜீவனின் போரியல் பண்புகளை தலைவர் அவதானித்தே வைத்திருக்கிறார்.
#####
ரோட்டில் ஜீவன் கம்பீரமாய் கால்பாவி நிற்க நிழல்போலக் கடந்து செல்கிறார்கள் போராளிகள். அந்த இருட்டிலும் ஆட்களை அடையாளம் கண்டு காதோடு பாரம் விசாரித்து, தூரம் சொல்லி, தோள் தட்டி துரிதப்படுத்தி நிற்கிறான் ஜீவன். ஆபத்தை நோக்கி முதல் ஆளாய்ச் சென்று அதன் நடுவில் நின்று நம்பிக்கை தருவதும் கடைசி ஆளாகவே அவ்விடத்தை விட்டு அகலுவதும் போராளிகள் ஜீவன் மேல் பற்று வைப்பதற்கு பிரதான காரணங்கள். வீரமுள்ள எவராலும் ஜீவனை வெறுக்க முடியாது.

"நாங்கள் சுமந்து திரியும் ரவைகளில் எந்தெந்த ரவை எந்தெந்தச் சிப்பாயின் உடலுக்குரியதோ தெரியவில்லை. இதே போல எனக்குரிய ரவையையும் ஒரு சிப்பாய் இப்போது சுமந்து திரிவான். அது எப்போது புறப்படும் என்பது எவருக்கும் தெரியாது." சண்டைகளின் முன்னான நகைச்சுவைப் பொழுதுகளில் சிரித்தபடி ஜீவன் சொல்வதும வழக்கம். அன்று, கொழும்பு ரோட்டின் மையிருளிலே ஈழ யுத்தத்தின் இன்னுமொரு அத்தியாயம் முடிய இருந்த சூழ்நிலையில், பதுங்கிக் கிடந்த சிப்பாய் ஒருவனின் ஆரம்ப ரவையாக அது புறப்படும் என்பதையும் எவரும் அறிந்திருக்கவில்லை.

ஜீவனின் நினைவுகளை மீட்கும் போது, தனக்குக் கீழுள்ள படைத் தலைவர்களின் உணவுத் தட்டுகளைக் கூட கழுவி வைத்து ஒழுக்கம் பழக்கும் எளிமையா? அல்லது முன் செல்லும் போது முதல்வனாகவும் பின் வலிக்கும் போது இறுதி ஆளாகவும் வரும் தலைமைத்துவமா? எது மேலோங்கி நிற்கிறது என்று அலசினால் அவையிரண்டையும் விட அவனின் களவீரமே எல்லோர் மனதிலும் ஆழப்பதிந்து கிடக்கிறது. பிறந்த போது குடிசையில் பிறந்த ஜீவன் இறந்தபோது ஈழத்தின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்ததற்கும் அவனது ஏழ்மையற்ற கம்பீரமே காரணம்.

பிறப்பினால், எவருக்கும் பெருமைவருவதாக நாம் நம்புவதில்லை. ஜீவன் தன் நடபினால் தாய் மண்ணின் தலையைப் பலமுறை நிமிர வைத்திருக்கிறான். அவன் இழப்பினால் தாய் மண்ணே சோகம் ததும்பும் பெருமையுடன் ஒரு கணம் தலை குனிந்து நிற்கிறது.

ஜீவனின் இரத்தம் தோய்ந்த கொழும்புச் சாலையில் இருக்கும் எதிரிச் சுவடுகள் ஒரு நாள் துடைத்தழிக்கப்படும். அந்த உன்னத சுதந்திர திரு நாளின் போது தாயகப் பெருஞ்சாலைகள் கருந்தாரிட்டு செவ்வனே மெழுகப்படும். ஆனால் ஜீவனின் உணர்வு சுமந்து நிற்கும் ஒவ்வொரு தோழனுக்கும் அது செஞ்சாலை.

- இராசமைந்தன் -