Wednesday, November 19, 2003

கரும்புலி லெப்.கேணல் போர்க்

வன்னிப் பிராந்தியத்தின் மையத்தில் அதன் இருதயத்தில் மாங்குளம் சிங்களப்படை முகாம் இருந்தது. அது அங்கு பல அட்டூழியங்களைச் செய்து வந்தது.

இரண்டாவது ஈழப்போர் தொடங்கிய நாட்களிலிருந்து இம்முகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டிருந்தது. எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள இப்படை முகாம் மீது தாக்குவதற்கான திட்டம் தயாரிக்கப்படுகிறது. அப்படை முகாம்மீது கரும்புலித் தாக்குதல் நடத்தி அம்முகாமைக் கைப்பற்றுவது என்று தீர்மானிக்கப்படுகிறது. இத்தாக்குதலை தலைமைதங்கி வழிநடத்திய தளபதி பால்ராஜ் சொல்லும்போது. "நாங்கள் இம்முகாம் தாக்குதலுக்கான திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தோம். அப்பொழுது மாங்குளம் முகாமைப்பற்றி எனக்குத்தான் அதிகம் தெரியும். எனவே நான்தான் சக்கை லொறி கொண்டு போகவேணும் என போர்க் சொன்னான்.

அந்தக் குரலில் உறுதி தெரிந்தது. "போர்க் போராட்டத்திற்குப் புதியவரல்ல. அவர் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவர். பல தாக்குதல்களை முன் நின்று வழிநடத்தியவர்". தளபதி பால்ராஜ் மேலும் தொடர்கையில் "1990ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் நாள் அண்டைக்குத்தான் போர்க் கரும்புலியாய்ப் போனவர். புறப்படமுன் கடைசியாக என்னைக் கட்டியணைச்சு, "நான் புறப்படுறன். இதோட மாங்குளம் முகாம் முடிஞ்சுது" என்று சொல்லிப்போட்டு, வெடிமருந்து வாகனத்தை ஓட்டிச் சென்றார். கொஞ்ச நேரத்தில் பெரிய வெடிச்சத்தம் கேட்டுது. முகாம் தகர்ந்தது. பிறகு சில மணி நேரத்தில்"முகாம் கைப்பற்றப்பட்டது" என்றார்.

இந்தத் தாக்குதலுக்குச் சில நாட்களுக்கு முன்பு, போர்க் அண்ணை விடுமுறையில் வீட்டுக்குச் சென்றார்.
அவரது கிராமம் சிங்கள எல்லையில் அமைந்துள்ளது. அது வன்னியிலுள்ள சேமமடு. சிறு வயது தொட்டு நடந்து திரிந்த, அக்கிராமத்தில் குளம், வயல், காடு என்று ஒவ்வொன்றையும் சுற்றி ரசித்தார். இல்லை - அவற்றிடமிருந்து விடைபெற்றார். அந்த நாட்களில் ஒரு நாள் பக்கத்து வீட்டுச் சிறுவர்கள் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவ்விடத்திற்குச் சென்று ஓர் மரக்குற்றியில் அமர்ந்தவாறு போர்க் அண்ணை கேட்டார்.

"தம்பியவை, மாவீரர்நாள் வருதெல்லோ? தற்செயலா நான் செத்துப்போனா அண்டைக்கு என்ன செய்வியள்?" 'ஏன் சாகப் போறியளோ' பதில் கூறினர் பிள்ளைகள். போர்க் அண்ணையும் சிரித்தபடி "தப்பித்தவறி நான் செத்துப்போனா என்ர நினைவா ஆளுக்கொரு மரம் நட்டு வளவுங்கோ என்ன"

அவர்கள் சிரித்தனர், போர்க் அண்ணையும் சேர்ந்து சிரித்தார். வீட்டிலிருந்து புறப்படும் இறுதி நாள் வந்தது. மதியம் உணவருந்திவிட்டு விறாந்தையில் பாயைப் போட்டுப்படுத்தார். சற்றுத்தள்ளி போர்க் அண்ணையின் அம்மாவும் படுப்பதற்காக, தரையில் பாயைப் போட்டார். "அம்மா இதில வந்து, எனக்குப் பக்கத்தில பாயைப் போடணை" போர்க்கண்ணை கேட்டார். அம்மாவும் வந்து அவரின் தலையை வருடியவாறு இருந்தார்.
அன்று பின்னேரம் அப்பா, அண்ணன்மார், தம்பிமார், அன்புத் தங்கை என்று எல்லோரிடமும் விடைபெறுகிறார்.

கடைசியாக தாயாரிடம் வந்து, "அம்மா எனக்கு உங்கட கையால ஒரு பொட்டு வைச்சுவிடுங்கோவன் ஆசையாயிருக்கு" என சாதாரணமாகக் கேட்டார். ஏதுமறியாத தாயுள்ளம் பிள்ளையின் விருப்பப்படி பொட்டிட்டு மகிழ்ந்தது. இவ்விதம் சிறுபிள்ளை போல் அவர் நடப்பது வழக்கம் எனத் தாயாரும் கூறினார்.

சிரித்தபடியே விடைபெற்றவர், வீட்டுப் படலையில் நின்று ஒரு கணம் திரும்பிப் பார்த்தார். பின் போய்விட்டார்.

சிறிது நேரத்தின் பின்
"தம்பி சாரத்தையும் ரீசேர்ட்டையும் விட்டுட்டுப் போட்டானணை" என்று போர்க் அண்ணையின் சகோதரன் அவசரமாகக் குரல் கொடுத்தார்.
"பழசாக்கும், அதுதான் விட்டிட்டுப் போட்டான் போலக்கிடக்கு என்றார் அம்மா. இன்று போர்க் அண்ணையின் அம்மா சொல்கின்றார். "தம்பி அவன் அண்டைக்கு வித்தியாசமா நடந்ததை என்னால புரிஞ்சுகொள்ள முடியேல்லை. ஆனால் கரும்புலியாச் செத்த பிறகுதான், அவன் தன் பக்கத்தில படுக்கச்சொன்னது, பொட்டு வைக்கச் சொன்னது, உடுப்புகளை விட்டிட்டுப் போனது... ஏனெண்டு விளங்குது" போர்க் அண்ணனின் அம்மாவின் நா தழுதழுத்தது.

நன்றி - எரிமலை

Tuesday, November 11, 2003

கப்டன் மயூரன்

கப்டன் மயூரன் (சபா)
பாலசபாபதி தியாகராஜா ஆத்தியடி பருத்தித்துறை
அன்னை மடியில் - 1.11.1970, மண்ணின் மடியில் - 11.11.1993
கரும்புலியாய் செல்லவில்லை
கரும்புலி போல் ஆகிவிட்டீர்.


அரச பயங்கரவாதத்தில் மக்கள் அடிபட்டுக் கொண்டிருக்க குட்டுப்பட்டு வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா, என்றெண்ணி கொட்டமடிக்கும் கூலிப்படைகளை வெட்டிச் சாய்க்க, திண்ணம் கொண்டான் மயூரன்.

பருத்தித்துறை ஆத்தியடியில், பாலசபாபதியாக அன்னை மடியில் முத்தாகச் சிரித்தவன், வாழும் வயதிலேயே மண்ணுக்கு வித்தாவான் என்று யாருமே நினைத்திருக்கவில்லை.

15 வயதான பின்னும் கூட தன் கட்டிலை விட்டு வந்து அம்மாவுடன் ஒட்டிக் கொண்டு படுத்திருப்பான். அக்காமார் என்ன கேட்டாலும் முகம் கோணாமல் அத்தனையும் ஓடி ஓடிச் செய்து கொடுப்பான். 

அக்காமாருக்கு மட்டுமா? ஆத்தியடியில் வயதான கிழவிகளுக்கெல்லாம் இவன் மகன் போல. உதவி செய்வதென்பது இவனோடு பிறந்த குணம்.

அண்ணன் மொறிஸ் களத்தில் நிற்கும் போதே, காட்லியின் கல்வியைக் கை விட்டு, 1987 இல் ஈழப்போர் இரண்டு என்னும் சகாப்தம் வெடிக்கையிலே வேங்கையாய் புறப்பட்டான் நாட்டைக் காக்க என்று.

இந்திய ஆக்கிரமிப்பு எகத்தாளமாய் நடக்க, ஈழத்து உயிர் மூச்சை இதயத்தில் சுமந்து கொண்டு தலைவர் பிரபாகரனின் அன்புக்குப் பாத்திரமானவனாய் காட்டிலே உயிர் வாழ்ந்தான்.

மன்னார், மண்கிண்டி என வீரக்கதை படித்து யாழ்தேவி நடவடிக்கையில் போராளிக் குழுவோடு நின்று பொருத்தமாய் போர் தொடுத்தான். இதய பூமி-1 இல் இறுக்கமாய் கால் பதித்து வெற்றியோடு திரும்பினான்.

திரும்பும் வழியில் வற்றாப்பளையில் வாழும் அண்ணன் தீட்சண்யனை (பிறேமராஜன்) காண ஆசை கொண்டு ஒருக்கால் சென்றான்.

அந்தக் கணங்களை ஒரு காலை இழந்த அவன் அண்ணன் தீட்சண்யன் இப்படிச் சொல்கிறார்.
கடைசிக் கணத்தில் உன் களத்துப் புலிகளுடன்
ஓருக்கால் வந்தாய்
நாம் கண்மூடி விழிக்க முன் கனவாய் சென்றாய்
தடியோடு நான் நடந்து கதவோரம் வந்து நிற்க
கையில் பெடியோடு உனது அண்ணி
கண் கலங்கப் பார்த்திருக்க
பார்த்தாயா...யா? புரியவில்லை
நினைவில் தெரியவில்லை.
தெருவோடு நீ ஓடி
துள்ளி அந்த வாகனத்தின் கூரையிலே பாய்ந்தேறி
குழுவோடு அமர்ந்ததைத்தான் நாம் பார்த்தோம்
கனவாக மறைந்து போனாய்
சும்மா பார்த்து விட்டுப் போக வந்தேன் என்றாய்
எம் கண்ணிலெல்லாம் காயாத
நீர் கோர்த்து விட்டுத் தானய்யா சென்றாய்.


இப்படி அண்ணனின் கண்ணில் நீர் கோர்த்து விட்டுச் சென்றவன் நேரே பூநகரிக் களத்தை நோக்கித்தான் சென்றான். போகும் வழியில் பாசம் அவனை பாடு படுத்தியதோ...? நண்பன் சிட்டுவை(மாவீரன்) அழைத்து ஆத்தியடிக்கு அம்மாவிடம் போய், அக்கா அவர்களிடம் இருந்து கடிதங்கள் வந்திருக்கும். வாங்கி வா என்று அனுப்பினான். பின்னர் களத்தில் நின்று கொண்டும் அவன் சிட்டுவை மீண்டும் பலமுறை அனுப்பினான். கடைசி முறையாக சிட்டு மயூரனின் அம்மாவிடம் சென்றபோது, மயூரனின் தங்கை மகிழ்வோடு கடிதத்தைக் கொடுத்து விட்டாள். ஆனால் சிட்டு கடிதத்துடன் மயூரனிடம் சென்றபோது மயூரன் என்ற தீபம் அணைந்து விட்டது. மயூரன் மண்ணுக்கு வித்தாகிவிட்டான்.

மயூரன் 11.11.1993 அன்று சைபர் படைக்குத் தலைமை தாங்கிச் சென்று பூநகரிக் களத்தின் காற்றிலே கலந்து விட்ட செய்தியை தாங்கி வந்த சிட்டு அதை எப்படி அம்மாவிடம் சொல்வதென்று தெரியாமல் தயங்கித் தவித்து கலங்கிச் கொன்ன போது ஆத்தியடியே ஒரு முறை உயிர்வலிக்க அழுதது.

மயூரனை இழந்து தவித்த அண்ணன் தீட்சண்யன் நினைவில்... விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி
பொருதி நின்ற படையினருள் புயலாகிப் போனாயென
விபரம் தெரிந்தவர்கள் விளக்கம் சொல்கையிலே
பூநகரிக் காட்சி எங்கள் கண்ணில் நிழலாடுதையா
தலைவன் வளர்த்த மணிவிளக்காய் நீ அங்கு
தலைகள் சிதறடித்து தானை துடைத்தெறிந்த
கதைகள் பல இங்கு காதில் அடிபடுது
ஆனாலும் மயூரா உன்
உடலைக் காணவில்லையடா
விழுப்புண்கள் பெற்ற உன் வித்துடலை காண்பதற்கு
விதி எமக்கு இல்லையடா-அதனால்தான்
உதிரம் கொதிக்கிறது உடலம் பதைக்கிறது
சடலம் என்ற பெயர் உனக்கு இல்லையடா
பொன்னுடல் மின்னிடுடும் படம் வந்த ஊர்தியில்
கண்ணிலே ஒற்றி நாம் மாலை போட்டோம்
நிறை குடத்தோடு நின்று நாம் நினைவை மீட்டோம்
மொறிஸ் சோடு நீ சென்ற பாதையின் வழியில் நாம்
உடலோடு உதிரமாய் ஒன்றி வாழ்வோம்
உயிரையே உருக்கி நாம் வேள்வி காண்போம்
-தீட்சண்யன்..

மயூரனின் நண்பர்களின் நினைவில்...
களத்திலே புலியாகப் பாய்ந்திட்ட வேளையிpல்
கரும்புலியாய் செல்லவில்லை கரும்புலிபோல் ஆகிவிட்டீர்
களத்தினிலே பாய்ந்த போது கண்டபின் நாம் காணவில்லை
வளமான நெல்வயல் சூழ் நைய்தல் நில எல்லையிலே
எதிரியின் வேட்டுக்களை ஏந்தி விட்டாய் மார்பினிலே
என்றுன்னை நினைக்க மாட்டோம் எரியாகி எரிந்து விட்டாய்
எரிமலையாகி வெடித்து விட்டாய்
நண்பனே! வள்ளலாகி விட்டாய் மயூரா!
உன் பாதம் அடிச்சுவடு உன்னாடை பாதுகை
உன் துப்பாக்கி இனி எங்கள் கையிலே
உன் நினைவுகள் துணையாகும் எம் பாதையிலே.........

..நண்பர்கள்.......

மயூரனின் தங்கையின் நினைவில் (பாமா)
அன்று சிட்டு அண்ணா வந்த போது, நான் முதல் நாள் சின்னண்ணாவுக்குக் (மயூரன்)கொடுத்து விட்ட கடிதத்துக்குப் பதில் கடிதம் கொண்டு வந்திருக்கிறார் என்று நினைத்து சந்தோஷப் பட்டேன். ஆனால் சிட்டு அண்ணா நான் எழுதிக் கொடுத்து விட்ட அந்தக் கடிதத்தை எனக்கு முன்னாலேயே சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தார். எனக்குச் சரியான கோபமும் அழுகையும் வந்தது. சிட்டு அண்ணாவைத் திட்டினேன். அவர் ஒன்றும் பேசாமல் கூட வந்த நண்பருடன் திரும்பிப் போய் விட்டார். அடுத்த நாள் நடுச்சாமம் 12 மணிக்கு மீண்டும் அவர் எமது வீட்டுக்கு வந்த போது நான் அவரிடம் முகம் கொடுத்துப் பேசாமல் கோபமாய் இருந்தேன்.
அப்போதுதான் துயரம் தோய்ந்த அந்த செய்தியை, என் அன்பு அண்ணா, களத்தில் காவியமாகி விட்டான் என்ற செய்தியை சிட்டு அண்ணா அழுதழுது சொன்னார்.

1.11.1970 இல் பிறந்து 11.11.1993 அன்று நடை பெற்ற பூநகரிப் பெருந்தளச் சமரில்-தவளைப் பாய்ச்சலில்-வெற்றி பெற்றுத் தந்து விட்டு உறங்கிப் போய் விட்டான் மயூரன்.

Tuesday, November 04, 2003

மூத்த உறுப்பினர் லெப். கேணல் அப்பையா அண்ணா

எமது இயக்கத்தின் மூத்த அங்கத்தவர்களுள் ஒருவரான லெப். கேணல் அப்பையா அவர்களின் வீரச்சாவுச் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. 24. 12. 1997 அன்று மல்லாவிப் பகுதியில் காணாமல் போயிருந்த அவருக்கு நேர்ந்த கதியறியாது இன்றுவரை எமது தேசம் தவித்திருந்தது.

அது ஜெயசிக்குறு நடவடிக்கை மூலம் சிங்களப் படைகள் வன்னியில் அகலக் கால் பதிந்திருந்த நேரம். வயதால் முதிர்ந்து நோய்களால் தளர்ந்து போயிருந்த அப்பையா அண்ணனை சிறீலங்காப் படைகளின் கைக்கூலிகள் கடத்திச் சென்றுவிட்டனர். அன்றிலிருந்து அவரைத்தேடி எங்கும் வலைவிரித்திருந்தோம்.

அப்பையா அண்ணா எமது இயக்கத்தின் ஆரம்பகாலச் செயற்பாடுகளின் சாட்சியாக இருந்தவர். மக்களுடன் மக்களாக தலைமறைவு வாழ்வில் எமது இயக்கம் வாழ்ந்த காலங்களில் எமது போராளிகளுக்குப் பெரும் பலமாக இருந்து செயற்பட்டவர். அன்றைய காலங்களில் கண்ணிவெடி உட்பட்ட வெடிபொருள் உருவாக்கத்தில் முன்னின்று செயற்பட்டவர்.

அன்றைய நாட்களில், இளையவர்களாகிய எமது போராளிகளினிடையே வயது முதிர்ந்தவரான அப்பையா அண்ணை, சிங்களப் படைகளின் கண்களில் மண்ணைத் தூவி எமது தலைவர் உட்பட்ட ஆரம்பகாலப் போராளிகளைக் காத்துவந்தார். தாக்குதல்கள் மற்றும் ஏனைய தேவைகளுக்கான நகர்வுகளுக்குத் தேவை
யான வாகனங்களை மக்களிடமிருந்து ஒழுங்கு செய்து, எவரும் சந்தேகம் கொள்ளாதவாறு போராளிகளுக்குரிய தங்ககங்களை ஒழுங்கு செய்வதென அன்றைய காலங்களில் முக்கியத்துவமான பணிகளை மூத்த போராளியான அப்பையா அண்ணை ஆற்றினார்.

1982-ஆம் ஆண்டுகாலப் பகுதியில் பொன்னாலைப் பாலத்தில் வைத்து சிங்களப் படையினர் வாகனம் ஒன்றின்மீது எமது போராளிகளால் கண்ணிவெடித் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது. ஆனால் தாக்குதலுக்கிலக்கான எதிரி வாகனம் மயிரிழையில் தப்பித்துவிட்டது. தப்பித்துக்கொண்ட எதிரிகள் எமது போராளிகளைத் துரத்தியபடி அவ்விடத்தைச் சூழவும் சல்லடை போட்டனர். தாக்குதலுக்காகப் பயன்படுத்தப்பட்ட மின் பிறப்பாக்கி எதிரியின் கையில் சிக்கிவிட்டது. அதை வல்வெட்டித்துறையிலுள்ள கடையொன்றில் கொள்வனவு செய்திருந்த இராசையா என்ற அப்பையா அண்ணை அன்றிலிருந்து யாழ்ப்பாணம் எங்கணும் பிரபல்யமாகத் தேடப்பட்ட ஒருவரானார்.

1983-ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் அப்பையா அண்ணையும் ஒருவர். தமிழர்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த அந்தக் கண்ணிவெடியின் பொறிமுறைகளைச் சரிபார்த்து செல்லக்கிளி அம்மானின் கைகளில் ஒப்படைத்திருந்தவர் அவர்தான்.

அந்த வரலாற்றுத் தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் -களத்தில்- என்ற ஏட்டில் எழுதியிருந்தவற்றை மீட்டிப்பார்பது இங்கு பொருத்தமாக இருக்கும்.

~1983ம் ஆண்டு யூலை மாதம் 23ம் நாள் இரவு 11. 00 மணியளவில் யாழ் திருநெல்வேலியில் வைத்து சிறீலங்காப் படையினர்மீது ஒரு கண்ணிவெடித் தாக்குதலை நடத்தவென குறிப்பிட்ட வாகனமொன்றில், தேசியத்தலைவர் அவர்களும் அவருடன் செல்லக்கிளி அம்மான், விக்ரர், பொன்னம்மான், சந்தோசம் மாஸ்ரர், புலேந்தியம்மான், கணேஸ், ரஞ்சன், லிங்கம், பசீர்காக்கா, நான் மற்றும் சில தோழர்களும் அடங்கிய எமது தாக்குதல் குழுவில் ஒருவராக சுமார் ஐம்பது வயதை அடைந்துவிட்ட அப்பையா அண்ணரும் அங்கம் வகித்தார். நாம் திட்டமிட்டபடி தாக்குதலுக்கான குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் எல்லோரும் வாகனத்தைவிட்டு கீழே இறங்குகிறோம். எனவே அடுத்ததாக அங்குள்ள ஓர் இடத்தில் கண்ணிவெடித் தொகுதியைப் புதைக்கவேண்டும். அப்பையா அண்ணரும், செல்லக்கிளி அம்மானும், விக்ரரும் கண்ணிவெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர்.

கண்ணிவெடியைப் புதைப்பதென்பது ஒரு பெரிய வேலை. அதாவது கரடுமரடான தார்றோட்டில் பிக்கானால் கிடங்கு வெட்டுவதென்பது மிகவும் கடினமானது. அதிலும் கண்ணிவெடித் தொகுதிக்கான வெடிமருந்துகளை அடைப்ப தென்பது அதைவிடப் பெரியவேலை. ஏனெனில் வெடிமருந்துகள் ஆபத்தானவை. எல்லோருக்கும் அந்தவேலை ஒத்துவர மாட்டாது. எனவே வெடிமருந்துடன் நன்கு பழக்கப்பட்ட அப்பையா அண்ணர் அவ்வேலையை திட்டத்திற்கேற்ப மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானமாகவும் திறம்படச் செய்துமுடித்தார். இவைக்கப்பால் அப்பையா அண்ணர் எமது இயக்கத்திலேயே மிகவும் வயது முதிர்ந்த மூத்த உறுப்பினர் ஆவார். இருந்தபோதிலும் அவர் மிகவும் சுறுசுறுப்பாகவும் விவேகத்துடனும் சதா இயங்கிக்கொண்டிருப்பார். அத்தோடு எமது உள்@ர்த் தயாரிப்புகளில் ஓர் முக்கிய வெடிமருந்து நிபுணராகவும் அவர் விளங்கினார்? என மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின்னான காலங்களில் இந்தியாவிற்குப் பயிற்சிக்குச்சென்ற போராளிகளுடன் அப்பையா அண்ணையும் ஒருவராக இணைந்திருந்தார். எப்படியாவது தானுமொரு இராணுவப் பயிற்சிபெற்ற விடுதலை வீரனாக உருவாகவேண்டுமென்று அவர் ஆவல் கொண்டிருந்தார். ஆனால், இவரது வயதைக் கருத்தில்கொண்ட இந்தியப் பயிற்சி அதிகாரிகள் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இருந்தபோதும் நாடு திரும்பிய அப்பையா அண்ணை போராளியாகவே தொடர்ந்தும் பணியாற்றினார். அவரது விடுதலைப் பணிக்கு இராணுவப் பயிற்சி என்றுமே ஒரு தடையாக இருந்ததில்லை. ஆரம்ப காலங்களில் எமது தாக்குதல்களில் பங்கெடுத்த கண்ணிவெடிகள் பல அப்பையா அண்ணனின் கரங்கள் தழுவப் பெற்றவை. வன்னிப் பகுதியில் நடந்த பல தாக்குதல்களிலும் அவர் பங்கெடுத்தார்.

அப்பையா அண்ணனின் கண்டுடுபிடிப்பு முயற்சிகள் இயக்கத்தில் என்றும் பிரபலமாகப் பேசப்படுபவை. அவற்றில் பல களத்தில் பயன்படுத்தப்படாதவையாக இருந்தபோதும்கூட, இளம் போராளிகளிடையே அத்தகைய முயற்சிகளை ஊக்குவித்து இயக்கத்தில் அத்தகைய ஒரு மரபை வளர்த்தெடுக்கும் தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு அப்பையா அண்ணையின் அத்தகைய முயற்சிகள் வாய்பாக அமைந்தன. அது பின்னைய காலங்களில் இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது.

பிற்காலங்களில் அந்த முதிய போராளி நன்றாக இழைத்துப் போயிருந்தார். எந்தப் பணியாற்றவும் அவரால் முடியாதிருந்தது. என்றாலும் எமது வரலாற்றுப் பெருமைக்குரியவராய் அவர் இருந்தார். அவரை இயன்றவரை பேணிப்பாதுகாக்க நாம் முயன்றோம். அதனால்தானோ என்னவோ எதிரியும் அவரது வாழ்வை முடிக்க விரும்பினான் போலும். இப்போது அப்பையா அண்ணை எங்களுடன் இல்லை. என்றாலும் அவர் எமது புகழ் பூத்த விடுதலை வரலாற்றில் என்றென்றைக்கும் வாழ்வார்.

நன்றி: விடுதலைப் புலிகள்

Wednesday, October 29, 2003

மேஜர் வெற்றியரசன்

ஆனந் செல்லையா - மன்னார் பேசாலை

மன்னார் பேசாலை என்னும் ஊரில் செல்லையா திரேசம்மா தம்பதிகளின் மூன்றாவது செல்வப் புதல்வனாக பிறந்தான் மேஜர் வெற்றியரசன். இவனிற்குப் பெற்றோர் ஆனந் என்று பெயரிட்டனர். இவன் தனது ஆரம்பக் கல்வியை புனித பற்றிமா மகாவித்தியாலயத்தில் கற்றுக்கொண்டு இருக்கும் போது இராணுவ அட்டூழியங்களை நேரில் கண்டதாலும் சில சம்பவங்களால் இடையில் தனது கல்வியை நிறுத்தி 10. 08. 1995 அன்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை முற்றுமுழுதாக இணைத்துக் கொண்டான். இவன் ஆரம்ப இராணுவ பயிற்சியை கெனடி-1 இராணுவப் பயிற்சிப் பாசறையில் பெற்றான். பயிற்சி முடிந்து இவர்களின் அணி, சூரியக்கதிர் எதிர் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டது.

அங்கு கொடுக்கப்பட்ட பணிகளை திறம்படச் செய்து முடித்த பின்னர் ஓயாத அலைகள்-1 சமரிற்கு இவர்களது அணி அனுப்பப்பட்டது. அதில் இவனும் ஒருவனாக நின்று சமராடினான். இவன் முகத்தின் மென்மையான சிரிப்பு யாரையும் சிரித்து மயக்கி விடுவான். இப்படியாக இவனின் வாழ்வும் போய்க்கொண்டிருந்த போது, தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையின் உருவாக்கம் பெற்ற விக்டர் விசேட கவச எதிர்ப்பு அணியில் தானும் இணைய வேண்டும் என்று பொறுப்பாளரிடம் கேட்டான். இவனது விருப்பிற்கு அமைய இவனை அப்பயிற்சிக்கு அனுப்பி வைத்தார் பொறுப்பாளர். இவனது திறமைக்கு அமைய விசேட ஆயுதம் ஒன்றிற்கான பயிற்சியைப் பெற்றான். அவ்வாயுதத்துடன் சென்று பல களங்கள் கண்டவன். மீண்டும் பொறுப்பாளரிடம் கேட்டு ஆர். பி. எம் உடன் சண்டைக்குச் செல்வதற்கான அனுமதியைப் பெற்றான். பின் ஆயுதத்தை இயக்குவதற்கான அனுமதியைப் பெற்றான். பின் அவ்வாயுதத்தை இயக்குவதற்கான பயிற்சியையும் பெற்று ஓயாத அலைகள்-2 சமர்க்களத்தில் திறம்படச் செயற்பட்ட இவனுக்கு தேசியத் தலைவர் பரிசினை வழங்கினார். பின் இவன் ஒரு அணிப் பொறுப்பாளனாக விடப்பட்டான்.

இவன் வீட்டில் சகோதரர்களை எப்படி அரவணைப்பானோ அவ்வாறு தான் தனது போராளிகளையும் அரவணைப்பான். எந் நேரமும் சண்டைக்குப் போக வேண்டும் என்ற துடிதுடிப்போடுதான் செயற்பட்டுக் கொண்டிருப்பான். இவன் விளையாட்டிலும் சிறப்பாகச் செயற்படுவான். பம்பல் அடிப்பதில் இவனிற்கு நிகர் யாரும் இல்லை. இவன் ஊராக்கள் யாரையும் கண்டால் ~ஊரான்| என்று சொல்லி கட்டிப்பிடித்து முத்தமிடுவான்.

இவ்வாறு இருக்கும் போது இவன் காதில் ~மச்சான் நீ சண்டைக்குப் போகப் போகிறாய்| என்ற செய்தி விழுகிறது. இவன் முகத்தில் என்றும் இல்லாத புன்னகையுடன் ~உண்மையோடா மச்சான்| என்ற வண்ணம் இருக்க, இவனது பொறுப்பாளர் அழைத்து ~வெற்றி நாளைக்கு வெளிக்கிட வேணும். hPமை ஒழுங்குபடுத்து. ஓம் அண்ணை ஒழுங்குபடுத்திறன்| என்ற வண்ணம் போராளிகளைக் கூப்பிட்டுக் கதைத்தான். பின் இவனது அணியுடன் சமரிற்குப் புறப்பட்டான். வரலாற்றுப்புகழ் மிக்க இத்தாவில் சமரில் முதன் முதலாக இராணுவ ரக் ஒன்றைத் தகர்த்தான். பின்னர் அணிகளை ஒழுங்குபடுத்தி இளங்கீரன் அண்ணையிடம் தெரியப்படுத்தினான். பின் தொடர்ச்சியாக இராணுவ நடவடிக்கைக்கு முகம் கொடுத்த வண்ணம் திறமையாகச் செயற்பட்டான். அம் மண் மீட்கப்பட்டது. இவனை நெடுங்கேணி மண் அழைத்தது. அங்கு எல்லையில் ஊடுருவி பதுங்கித் தாக்குதல் நடத்த வந்த இராணுவத்தை எதிர்த்து சமர் செய்யும் போது மார்பில் காயமடைந்தான். காயடைந்த பின்னரும் கூட சளைக்காது சமராடினான். பின் மருத்துவமனைக்கு சென்று மறுநாள் இவன் தமிழீழ மண்ணிற்காய் தான் நேசித்த மக்களிற்காய்வீரச்சாவை அணைத்துக் கொள்கிறான்.

உன் பணி தொடரும் எங்கள் பாதச் சுவடுகள். இனி நீ நிம்மதியாய் உறங்கு.

பிரதியாக்கம்: போராளி பகலவன்

Monday, October 06, 2003

மேஜர் நாயகன்

பேரம்பலம் யோகேஸ்வரன்.

இவன் 1989 காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து, பல களங்களில் பங்கெடுத்து 09.06.1992 அன்று முல்லைத்தீவு அளம பில் பகுதியில் முன்னேறிய சிறீலங்கா இராணுவத்தினருடனான மோதலின்போது தனது இடது கால் ஒன்றை இழந்தவன். தன் பணியில் இடைவிடாது ஏதாவது போராட்டத்திற்குப் பயன் தரக்கூடியதாக செய யவேண்டும் என்ற ஆர்வம் இவனுக்குரியது. இவன் தொழில்நுட்பத்துறையில் பெரிதும் நாட்டம் உடையவன். 1993ம் ஆண்டுக் காலப் பகுதியில் வீடியோ மற்றும் படத்தொகுப்புப் பணிக்கு பயிற்சிக்காக லெப்டினன் கேணல். நவம் அறிவுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டான், பயிற்சி முடிந்து 1994 காலப்பகுதியில் நிதர்சனப்பிரிவு பணிகளுக்காக படப்பிடிப்பு மற்றும் படத்தொகுப்புப் அனுப்பப்பட்டான். சிறந்த ஒரு படப்பிடிப்பாளன் அதைவிட சிறந்த ஒரு படத்தொகுப்பாளன். இவன் ஒளிவீச்சின் பல நிகழ்ச்சிகள் குறும்படங்கள் (ஒருசூடு), விவரணங்கள் என்பவற்றை தொகுத்து வந்தான். குறிப்பாக ஓயாத அலைகள் -2 விவரணத்தில் இவனது ஆற்றல் திறமை நன்கு புலப்பட்டன.

நவம் அறிவுக்கூடப் பயிற்சி முடிந்து சிறந்த ஒளிப்பதிவாளன், படத்தொகுப்பாளன் என்னும்பெயரைப் பெற்று தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சான்றிதழ்களையும் பெற்றவன் மேஜர் நாயகன். தன்னோடு இருக்கும் போராளிகளை பெரிதும் நேசிப்பவன், இவன் தலைவர் மீது வைத்திருந்த பற்று, பாசம் கணக்கிடமுடியாதவை, எவ வளவு வேலை கொடுத்தாலும் முகம் சுழிக்காமல் செய்வான், கால் ஒன்றை இழந்த நிலையிலும் திறமையாக செயற்பட்ட இந்த வேங்கை 23.08.2001 அன்று கொக்குத் தொடுவாய் இராணுவ மினிமுகாம் தாக்குதலை படமாக்கிவிட்டு வரும் போது எதிரியின் எறிகணை ஒன்று அவன் அருகில் வீழ்ந்து வெடித்ததில் அந்த இடத்திலேயே தன் கமராவை அணைத்தபடி தாய் மண்ணை முத்தமிட்டான். நாயகன் வீரச்சாவு என்னும் சேதி கேட்டுத் திகைத்தோம் மனதுக்குள் அழுதுவிட்டு நிமிர்ந்தோம். இவன் மட்டுமா இவனைப் போல் பல படப்பிடிப்புப் போராளிகளை இந்த மண் இழந்துள்ளது. இவர்கள் வரிசையில் மேஐர் நாயகனும் இணைந்துவிட்டான், இவன் மக்கள்மீதும் மண்மீதும் தலைவர் மீதும் வைத்த பற்றை செயல்மூலம் காட்டிச் சென்றான். எனினும் இவன் விட்ட இந்தப் பணியை நாம் தொடர்வோம் என்று இவன் விதைகுழி மீது உறுதியெடுத்துக் கொள்வோமாக.